Tag Archives: கொரோனா

கொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா

வெண் துகில் வெயில் வேய்ந்த  முற் கோடைகாலம். வீட்டுக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நின்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை.  முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவதுபோல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது.  தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப்பிம்பங்களில்  அலுப்புற்றிருந்த  விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின.  இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்க க்கூடிய அமைதி. மனிதர் ஆக்ரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இயற்கை.

கடந்த இரண்டு நாட்களாக மழை..மழை. இன்றுதான் சூரியனைக் கான முடிந்தது. உடுத்திய சாம்பல் நிற மேகத்தை களைந்திருக்கும்  நீலவண்ண ஆகாயம் ;  வேலிக்காக வளர்த்திருந்த செடிகளும், மரங்களும் மாசற்று பளிசென்று இருக்க, கைகள் நீளுமானல் கிள்ளித் தின்னலாம் அப்படியொரு பச்சை. குடியிருப்புகளின் சுவர்கள் கூரைகள் கூட மழை நீரில் அலசப்பட்டு பளிச்சென்று இருந்தன. புற்பூண்டுகளும், செடிகொடிகளும்  பூச்சிகள், புழுக்களுக்கு இசைந்து நெளிகின்றன. இலைகள் குலுங்குவதுபோல அசைய,  காற்றுக் கேசத்தை கலைத்துவிட்டு ஊமையாக கடந்துபோனது.  மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்படாத தொழுவமாடுகள்போல சோர்வுடன் வீதியோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.  மரங்கள் உயிர்ப்புடன் நின்றவண்ணம் புரள்போவதுபோல பிரமை. மொசு மொசுவென்று என்கால்களில் ஏதோ உரசியது, பதற்றதுடன் குனிந்தேன் : மியாவ் என்று குரலெழுப்பி விண்ணப்பிக்கும் கண்களுடன்  ஒரு  பூனை. கறுப்பு நிறப் பூனை, ஏர்கனவே அதன் உரிமையாளருடன் பல முறைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.

பிராணியின் ஆரோக்கியத்தை, உடல்ரோமங்களின் மினுமினுப்பு உறுதி செய்தது. கரும்பழுப்புக் கண்களில் பளபளப்பு. அருகம்புல் போல பக்கத்திற்கு நான்காக விறைத்திருந்த மீசைமயிரில் கூட வளப்பம் மின்னியது.  அதன் மெல்லிய இலைபோன்ற சிவந்த நா, எந்திரத்தனமாக விநாடிக்கொருமுறை, வெளிப்படுவதும் உதடற்றவாயை ஈரப்படுத்தியபின் தன் இருப்பிடம் திரும்புவதுமாக இருக்க சில கணம் இரசித்தேன். பூனையின் கண்களை இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன், வெறுமையும் கெஞ்சலும் அப்பி இருக்கின்றன.  இருந்தும், எனது கால்களைத் தனது  முகத்தால் உரசியபின், தம் முன்னிரண்டு கால்களைக் கொண்டு  தெரிவித்த செய்தியை விளங்கிக்கொள்ள பொறுமை இல்லை.  நான் வெளியிற் செல்வதற்கு, என்கைவசமிருந்த படிவம்  அனுமதித்த நேரத்தில், பத்து நிமிடங்கள் ஏற்கனவேசெலவாகிவிட்டன என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம், பூனை  அண்டைவீட்டுக்காரிக்குச் சொந்தமானது.  பூனையை அலட்சியம் செய்துவிட்டு விடுவிடுவென்று சாலையில் நடக்கத் தொடங்கினேன்.

கடந்த பத்து தினங்களாகவே வீட்டில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறோம். கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் இரு  எண்ணிக்கையுமே மளமளவென்று அதிகரிக்க  எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் நடைமுறை வாழ்க்கையை, முற்றாக அரசாங்கம் முடக்கிவிட்ட து. உரிய காரணங்களின்றி வெளியிற் செல்ல அனுமதி இல்லை. அவசியம் இருப்பின் முகவரியுடன் கூடிய படிவத்தை நிரப்பி அதில்  நாள், வெளியிற் செல்லத் தொடங்கும் நேரம், அதற்கான காரணம் மூன்றையும் குறிப்பிடவேண்டும். இன்றைக்குப் பேரங்காடிக்குச் சென்று அத்த்யாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கவேண்டிய நெருக்கடி. அதற்காக வெளியில் வந்தபோதுதான் கதவருகில் அண்டைவீட்டுப் பெண்மணியின் பூனை தரிசனம்.

இந்தியப் பிறப்பும் வளர்ப்பும் சோற்றைத் தின்று பசியாறும் வழக்கத்திலிருந்து என்னை விடுவிக்காததைப்போலவே சில பண்பாடுகளிடமிருந்தும் என்னை விடுவிக்காமல் சிறைவைத்திருக்கிறது. தந்தையை ; வயதில் மூத்தவரை, நண்பர்களைக்கூட ஒருமையில் அழைப்பது நம்முடைய  வழக்கமில்லை, ஐரோப்பியருக்கு அது சரி. அது போலத்தான் எனது அண்டைவீட்டுக்காரியுடனான எனது இன்னொரு பிரச்சனையும். பெண்மணியின் குடியிருப்புக்கு அருகில்  எனது மனைவி பிள்ளைகளுடன்  வசிக்க நேர்ந்தபோது எனக்கு வயது 30. இன்று ஐம்பத்திரண்டு. எப்போது முதன் முதலாக இருவரும் ஒருவரை மற்றவர் கடந்து செல்ல நேர்ந்திருக்கும்  என்பது நினைவில் இல்லை. ஆனால் இந்த இருபத்திரண்டு வருடங்களில் பல முறை எங்கள் இருவருக்கும் அவ்வாறானச் சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஐரோப்பியர் வழக்கப்படி அப்பெண்மணி ஒவ்வொருமுறையும் எனக்குப் பிரெஞ்சு மொழியில் வணக்கம் என்ற பொருளில் ‘போன் ழூர்’ என்பாள். முதலில் கூறுவது அவளாகவே இருக்கும். இருந்துபோகட்டும், அதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா ? பிரச்சனைகள் எதுவும் அவள் தரப்பில் இல்லை, மாறாக எனது தரப்பில் நிறைய இருந்தன.

 

இந்தியப் பண்பாட்டில் அண்டைவீட்டுகாரன் எதிர்ப்படும்போதெல்லாம் வணக்கம் தெரிவிக்கப் பழகியதில்லை. அதிலும் பெண்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பது விதி. இத் தொட்டிற் பழக்கம் ஐரோப்பாவரை என்னைத் தொடர்கிறது.  நான் அவளுக்கு முதலில்  « போன் ழூர் » தெரிவிப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் ஐரோப்பியர் நாகரீகத்தை மதித்து அவளுக்கு பதிலுக்குக் குறைந்த பட்சம்  ஒரு புன்னகையையேனும் தெரிவிக்கவேண்டும்.  ஆனால்  அதுகூட  எனது மனநிலையை பொறுத்திருந்தது. உதாரணத்திற்கு அப்பெண்மணி 100முறை எனக்கு முகமன் கூறியிருப்பதாக வைத்துக்கொண்டால், நான்கைந்துமுறை மரியாதை நிமித்தம், பதில் வணக்கம் தெரிவித்திருப்பேன். 95 முறை தெரிவிக்கா த தற்கு, அப்போது வேறுமன நிலையில் இருந்திருப்பேன் அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்திருப்பேன்.

ஓருண்மையைச் சொல்லவேண்டும். இவ்வுலகில் ஒரு சிலர் நிலத்தில் வாழ்வதில்லை, நீரில் வாழ்கிறார்கள்.  நீரெனில் ஆழ்கடலில். மூச்சுத் திணறும்போது நீரின்மேற்பரப்பிற்கு வருவதுண்டு. நுரையீரலை ஆக்ஸிஜனால் நிரப்பிய திருப்தியில் மீண்டும் ஆழ்கடல் மனிதர்களாகிவிடுவர். அவர்களில் ஒருவர் நீங்களா என்றெனக்குத் தெரியாது. ஆனால் நான், அவர்களில் ஒருவன். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டிருப்பவன். எனக்கும் அடுத்த மனிதருக்கும் இடையே சமூக இடைவெளி என்பது « கைபட்டுவிடும், தும்மல் தொட்டுவிடும் தூரம் என்றில்லை », மரியாதை நிமித்தமாக எதிர்ப்படும் மனிதரின் புன்னகைகூட  எனக்குத் தீங்காக முடியலாம் எனத் தாள்ளிநிற்பேன், முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.  இந்தலட்சணத்தில் அண்டைவீட்டுப் பெண்மணியின் « போன் ழூர்  » கடனைத் தீர்க்க வேண்டுமென்பது தலை எழுத்தா என்ன ?

பெண்மணியின் குடியிருப்பு இரண்டு நாட்களுக்கு முன்பும் பூட்டி இருந்த து.  அப்போது அதை நான் பொருட்படுத்தவில்லை.  இன்றைக்கும் பூட்டி இருக்கிறது. அவளுடைய பெழோ 305  நிறுத்தபட்ட இடத்தில் தொடர்ந்து அசையாமல் இருந்தது.  அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கோடை நாட்களில் பூட்டப்பட்டிருந்தால், நீண்ட நாள் விடுமுறையைக் கழிக்க பயணம் செய்திருப்பாள் என்பது நிச்சயம். தவிர, அவ்வாறு பயணிக்கிற போதெல்லாம் தம்முடைய செல்லப் பிராணியை பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தினரிடம் ஒப்படைப்பது பெண்மணியின் வழக்கம். அவர்கள் பூனையைக் கொண்டு  செல்வதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமல்ல. கடந்த பதினைந்து நாட்களாக கொரோனா வைரஸ் பிரச்சனையால் போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டன. உள்ளூரிலேகூட வீட்டைவிட்டு மனிதர்கள் வெளியில் போவதென்றால் அனுமதிவேண்டும். ஆகப் பெண்மணியின் குடியிருப்புத் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு வேளை கொரோனா வரஸ் ?  காலைச் சுற்றிய பூனையின் கண்கள் முதன் முறையாக மனதைச் சங்கடப்படுத்தியது.

வீட்டுக்கென சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைத் தேடி தேடி வாங்கியபொழுது , பூனைக்கென்று டின்னில் அடைத்த உணவுப்பெட்டிகள் இரண்டையும் மறக்காமல் வாங்கிக்கொண்டேன்.  வீட்டிற்குத் திரும்பியபொழுது கதவருகே பூனை இருக்கிறதா என்று பார்த்தேன் இல்லை. அழைப்பு மணியைஅழுத்தினேன். மனைவி கதவைத் திறந்தாள். உதட்டில் விரலை வைத்து, அமைதி என்றாள். அவள் விலகிக்கொண்ட தும்  இரண்டடி  தூரத்தில் பூனை ஆர்வத்துடன் பாலை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது. என் புருவங்கள் உயர்ந்ததை விளங்கிக்கொண்டவள்போல, «  பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனதை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். அவர்கள் பூனை எப்படியோ தப்பி வெளியில்வந்திருக்கிறது. நல்ல பசிபோல. பாலை ஊற்றி வைத்தேன். முதலில் தயங்கியது வாயை வைக்கலை. இப்போதுதான் குடிக்க ஆரம்பித்த து » மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாள்.

அவள் கண்களில் தெரிந்த இரக்கம் எனக்கு அச்சத்தைக் கொடுத்த து. பூனையிடம் வைரஸ் இருந்தால் ?  பிராணி நலக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவிப்பது

நல்லதென்றேன். அவள் சங்கடத்துடன் தலையாட்டினாள். பாலைக் குடித்துக்கொண்டிருந்த பிராணியை நெருங்கி, உடலை இரண்டாக மடித்து  அதன் காதில் மெதுவாக « போன் ழூர் » என்றேன். அதிர்ச்சியில் தலையை உயர்த்திய பூனை சில  நொடிகள் என்னை ஏறிட்டுப்பார் த்த த து, பிறகு எனது மனைவி முகத்தில் சில நொடிகள், அச்சம் நீக்கியதைப்போல தொடர்ந்து பாலைக் குடித்த து.

– நன்றி  காலசுவடு

————————–

மொழிவது சுகம்  3 மே மாதம் 2020

 தமிழா தமிழா….நாளை ?

நேற்று  காற்றுவெளி வைகாசி மின்னிதழில்  : ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்,  என்கிற சிறுகதையை வாசிக்கக் கிடைத்தது ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அபாரம்.  எனக்கு இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த கலை அல்ல, மனித மனத்தையும் சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு சொல்லப்படவேண்டும். சிறுகதை ஆசிரியர் மு. தயாளன் அப்படி எழுதியிருக்கிறார்.  பாராட்டுகள்.

கதைக்குள் போவதற்கு முன்பாக கதையை முன்னிட்டு என்னுள் விளைந்த  கருத்தை, பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன்.

இராமன் எத்தனை இராமனடி பாடலுக்கு எதிர்பாட்டு, ஏற்றப்பாட்டுக்குத்தான் எதிர்பாட்டிருக்க வேண்டுமென்பதில்லை.

இரண்டு பிரெஞ்சு பேராசிரியர்கள் : ஒருவர் தமிழர், மற்றவர் பிரெஞ்சுக்காரர். இருவரும் சந்திக்கின்றனர். அவர்கள் உரையாடும் மொழி என்னவாகயிருக்கும் ? நிச்சயம் பிரெஞ்சு மொழி, அது இயல்பு. காரணம் இருவருக்கும் தெரிந்த பொது மொழி பிரெஞ்சு. மாறாக இரண்டு தமிழ் அறிஞர்கள் :  ஒருவர் தமிழர் மற்றவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் சந்திப்பு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள் ? பொதுமொழியான தமிழில்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. அதை நிராகரித்துவிட்டு தமிழறிந்த இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். காரனம் நம் தமிழ் அறிஞருக்கு தமக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைப் பறைசாற்றவேண்டும். தமிழ் அறிஞரான பிரெஞ்சு காரருக்குள்ள பிரச்சனை நடைமுறை தமிழில் சரளமாக உரையாடுவது.

தமிழில் பல ஆய்வுகள் செய்தவர், சங்க இலக்கியங்களப் பிரெஞ்சுமொழியில் மிகச் சிறப்பாக உள்வாங்கி மொழி பெயர்த்தும் இருப்பார். ஆனால் தமிழில் பேசுவதற்கு அப்பிரெஞ்சு தமிழ் அறிஞருக்குத்  தடுமாற்றம். காரணம் இங்கு சென்னைதமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ்,  கோயம்புத்தூர் தமிழ், மதுரை தமிழ், சேரித் தமிழ்,  ஜஃப்னா தமிழ் என  பல தமிழ்கள். போதாதற்கு செட்டியார் தமிழ், நாடார் தமிழ், பிள்ளைமார் தமிழ், தெலுங்கர் தமிழ், பிராமணர் தமிழ், சினிமாதமிழ், தொலைக்காட்சி  காம்பையர் தமிழ் என தசரதனைப்போல தமிழுக்கும் ஏகப்பட்ட பத்தினிகள். இதில் அஃப்சியல் பத்தினி யாரோ ? உலகில் வேறு மொழிகளுக்கு இத்தனை சாளரங்கள் கொண்ட அந்தப்புரம்  இல்லை.

ஒரு முறை, மலையாளம் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி, தமிழ் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி இருவரும் மொழிபெயர்ப்பில் கூடுதல் பயிற்சிபெற சென்னை வந்து இறங்குகிறார்கள்.( ஏற்கனவே இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.) காதில் வாங்கிய தமிழைக் கேட்டு வந்த வேகத்தில் தமிழ் கற்ற பெண்மணி இது சரிப்படாது என பிரான்சு திரும்புகிறார். மலையாளம் கற்ற பிரெஞ்சு பெண்மணியோ தொடர்ந்து இயங்குகிறார். பிரெஞ்சு எடிட்ட ர்களால் அங்கீகரிக்கபட்ட  பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றில்லை. அதன் விளைவு என்ன என்பதை  சொல்லவேண்டியதில்லை.

‘இன்று’  எனப்படித்துவிட்டு  இண்னைக்கு, இண்னைக்கி இன்னிக்கி என பேசுவதும் எழுதுவதும், பிறப்பால் தமிழரலாதவர்களுக்கும்,  தமிழ் நிலத்தில் வசிக்காத தமிழ் கற்கும் புதியவர்களுக்கும்  மருட்சியை ஏற்படுத்தும்  என்பதை உணரவேண்டாமா. இன்றைய நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டார வழக்கில் வருகின்றன.    ஐம்பது சொற்களைத் திரும்ப திரும்ப உபயோகித்து சிறுகதையை முடித்துவிடுகிறோம். இங்கே நாவல் எழுதக் கூட  ஐநூறு சொற்கள் போதும் பலமுறை அவற்றை உபயோகித்து படைப்பை முடித்துக்கொள்ளலாம்.

எனது பிரெஞ்சு மொழி பெயர்ப்புகளைத் திருத்திக்கொடுக்கும் பிரெஞ்சு பெண்மணி  திருமதி Lliliane என்பவர் இன்றைக்கும் எதாவதொரு பிரெஞ்சு படைப்பை வாசிக்க நேருகிறபோது அகராதியை புரட்டாமல் வாசிக்க முடிவதில்லை என்கிறார். இந்த ஒரு காரணங்கூட பிரெஞ்சு படைப்புகள் அதிகம் நோபல் பரிசு  பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நம்மிட ம் அகராதியைத் தேடவேண்டிய நெருக்கடியை உண்டாக்குகிற நவீன தமிழ் இலக்கியங்கள் உண்டா ? அப்படியே உபயோகித்தாலும் அந்நெருக்கடியைச் சமாளிக்க வருடந்தோறும்  நவீன சொற்களை உள்வாங்கிய புதிய  அகராதிகள் உண்டா ? ஆனால் கறிக்குதவாத ஏட்டுசுரக்காய்  தமிழ் விழாக்களுக்கு நம்மிடத்தில் பஞ்மே இல்லை.

இனி சிறுகதைக்கு வருகிறேன்.

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்.

கொரோனா தொற்று, ஐரோப்பா, புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம், ஊரடங்கு,  இப்பிரசினைகளைக்கொண்டு, ஈழத்தமிழில் சொல்லபபட்ட ஒரு சிறுகதை.

கொரோனாவுக்கென படைக்கபட்ட இரு முதியவர்கள். அவர்கள் மகன் கோபி, மனைவி இரு பிள்ளைகள் கொண்ட இங்கிலாந்து வாழ்க்கைத்தரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பம். கோபி ஓர் இந்திய கட்டிட வேலை முதலாளியிடம் ஊழியம் பார்க்கிறவன். முறைப்படி அரசுக்குத் தெரிவித்து அவர் அவனை வேலைவாங்கவில்லை. இதனால் முதலாளி  தொழிலாளி இருவருக்கும் இலாபம். முதலாளி அரசுக்கு செலுத்தவேண்டிய சில வரிகளை ஏமாற்றலாம். தொழிலாளி தனக்கு வேலையில்லையென  சம்பந்தப் பட்ட அரசு நிறுவங்களிடம் உதவித் தொகை கேட்டுப் பெறலாம்.

இருந்தும் கொரோனாவால் தமிழ்க்  குடும்பம் தள்ளாடுகிறது. களவாய் செய்த வேலை இல்லைஎன்றாகிவிட்ட து. ஒரு மாதமல்ல மூன்றுமாதத்திற்கு பிரச்சனை நீளும் என்கிறபோது அவர்கள் என்ன செய்ய முடியும். இதற்கிடையில் கொரோனாவைக் கோடிட்டுக் காட்டும் இருமல் கிழவர்.   கணவன் மனைவி இருவருடைய உரையாடலும் அதிகம் புலம் பெயர்ந்த குடும்பங்களில் கேட்க கூடியதுதான் :

« ஏனப்பா சோசல் காசு வரும் தானே ? » என்று திவ்யா கணவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

« அது வந்தென்ன பிரயோசனம். அப்பிடியே கொண்டுபோய் சீட்டுகட்டச் சரி » என்றான் கவலையோடு.

« ஓமப்பா, அது வேறை கிடக்குது. அது எப்பையப்பா முடியுது ? »

« இரண்டு சீட்டும் முடிய இன்னும் ஆறுமாதம் கிடக்குது »

« நீங்கள் அணடைக்குச் சீட்டு எடுக்கேக்கையே சொன்னனான். இப்ப அவசரப்படவேண்டாமெண்டு. நீங்கள் கேட்டால் தானே. அவசர அவசரமாய் தங்கச்சிக்கு எடுத்தனுப்பினியள். இப்பக்கிடந்து மண்டையைப்போட்டு உடைக்கிறியள். »

 

மேற்கண்ட உரையாடலைக்காட்டிலும் கிழவரின் இருமல் சத்தத் திற்குப்பிறகு தம்பதிகளுக்கிடையே நடக்கும் கீழ்க்கண்ட உரையாடலில் கதை பிரகாசிக்கிறது.

« இந்த நேரம் பார்த்து இந்த மனிசனும் இருமித்தள்ளுது »

……………………………………..

………………………………………

அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை.

« இஞ்சரப்பா பிள்ளையளை அவரோட விளையாட விடாதையும். »

« ஏனப்பா, அது சும்மா இருமல்தான். »

« அது எனக்குத் தெரியும். எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே. »

« ஓமப்பா அதுவும் சரிதான். அவர் வாழ்ந்து முடிச்சவர். »

இத்துடன் கதை முடிவதில்லை எல்லா வறிய குடும்பங்களிலும் நடப்பதுபோலவே அப்போதைய தேவைகளைச் சமாளிக்க உண்டியலை உடைத்து 35 பவுண்களுடன் தமிழ்க் கடைக்குச்செல்கிறான், கோபி. கொரோனவை முன்வைத்து இலாபம் பார்க்கும் கடைக்காரனை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறான். பட்டியலில் இருந்த அனைத்தையும் வாங்க இயலவில்லை.  முதியவருக்கு இருமல் மருந்தை  வாங்க வேண்டிய கட்டாயம். பொருட்களுடன் திரும்பவந்தபோது அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டெதிரே முதியவரை அழைத்துபோக ஆம்புலன்ஸ்.

சிறுகதையின் கடைசி வரி மிகவும் முக்கியம். நான் அதைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வாசிக்கவேண்டும்.

_________________________________________________