Tag Archives: கி.அ. சச்சிதானந்தம்

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

மொழிவது சுகம் மார்ச் -17 -2013

1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:

பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல  இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.

பிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:

– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.

– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை

– வாக்கிய அமைப்பு முறை  சிக்கலானது.

– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.

எனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.

பிரெஞ்சு மொழி குறித்தும்,  அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்:  http://www.merriam-webster.com/info/2012words.htm

—————————————-

2. “Rem Tene, Verba sequentur’

ஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்?

போதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால்  எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம்.  “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான  ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி  குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும்  உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர்  வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது,  ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).

—————————————————————————————————————-