Tag Archives: அப்துல் கலாம்

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள் -5: மாத்தாஹரி நாவல் குறித்துதிரு வே. சபாநாயகம்

Sabaஅரவணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்

– வே.சபாநாயகம்
பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் Matahari1புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.
கதையின் மையம் – பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் – எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் – மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

 
இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

 
புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் ‘மார்த்தஹரி சமயக்குழு’ அவளை மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.
பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை – பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

 

– இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் ‘அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக’ அமைந்திருக்கிறது எனலாம்.

 
நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் – ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

 
இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே – அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.
பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் ‘கல்கி’ யின் ‘சோலைமலை இளவரசி’ நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.
நடையில் ‘சுஜாதா’வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் – இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

 

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் – மழை பற்றிய வருணனையில் – எழுதப்பட்டிருக்கும் வரிகளும், ‘உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்” என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

நன்றி .திண்ணை
——————————————-

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie)
தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய சரித்திரம்’. Autobiographie என்ற பிரெஞ்சு சொல்லை நேரடியாக மொழிபெயர்ப்பின் அது எழுதிய நபரின் வாழ்க்கைச் சரித்திரம். ஆனால் உண்மையில் ஒருவகையான நினைவு கூரல். எழுதிய நபரின் கடந்தகால நினைவுகளை அசைபோடுதல். இக்காரியத்தில் குவிமையமாக இருப்பது: எழுதியவர் மூன்றாவது நபராக இருந்து பார்த்தக் கேட்ட சம்பவங்களல்ல; அவரே பங்காற்றிய நிகழ்வுகள். ‘இருத்தல்’ சம்பாதித்து, மறக்க இயலாமல், அவருடைய மனக்குளத்தில் தெப்பமாக மிதக்கிற சொந்த அனுபவங்கள். அவர் துணைமாந்தரல்ல, நாயகன்; சாட்சி என்று கூற முடியாது சம்பவத்தின் கர்த்தா. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் “கடந்தகால வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து தன்னுடைய இயற்கைப் பண்பை உரைநடையில் ஒருவர் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் செயல்.

 
“என்னுடைய நாவலின் மையப்பாத்திரமே நான்தான் என்கிறார் ” “Les aventures burelesques de Monsieur d’Assoucy” எழுதிய Charles Coypeau d’Assoucy (1605 – 1677). வெகுகாலம் தொட்டே தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பதிவுசெய்வது இலக்கிய உலகில் நடந்துவருகிறது. ஆனால் அப்படி யொன்றை பதிவுசெய்கிறோம் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தது பதினேழாம் நூற்றாண்டு என பிரெஞ்சு இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. சாட்சியங்கள் என்ற பெயரில் தங்கள் சுய சரித்திரத்தில் தன்னைத் தானே வியந்தோதிக்கொண்ட கதைகள் பிரெஞ்சு இலக்கியங்களிலும் தொடக்ககாலங்களில் நிறைய நடந்திருக்கின்றன. சுயசரித்திரம் எழுத மதமும் தூண்டுகோலாக அமைந்தது. குறிப்பாக கிருத்துவத்தில் சமயச் சடங்குகளில் ஒன்றாக இருக்கிற பாவ சங்கீர்த்தனம் சுய சரித்திரத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. பாவச் சங்கீர்த்தன சடங்கு அளித்த தைரியதில் தங்கள்ள் சமய குருக்களிடம் பகிர்ந்துகொண்ட சொந்த வாழ்க்கையில் இழைத்தத் தவறுகளை, அல்லது அப்படிக் கருதிய தவறுகளை, முன்பின் அறிந்திராத வெகு சனத்திடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக தங்கள் நெஞ்சின் பாரத்தைக் குறைக்கமுடியுயுமென பலர் நம்பினார்கள். உதாரணத்திற்கு மோந்தேஞ்னுடைய ( Montaigne) ” Essais, ரூஸ்ஸோவுடைய (Rousseau) ‘Les confessions’ ஆகியவற்றைக் கூறலாம். அதன் பின்னர் ஷத்தோ•ப்ரியான்(Chateaubriand ) என்பவர் எழுதிய Mémoires d’outre-tombe, சுயவரலாற்றின் புதியதொரு பயன்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு புனைவிற்குறிய குணத்தை எழுத்தில் கொண்டுவந்ததோடு, ஒரு தனிமனிதன் சமூகத்திற்குக் கையளித்த விண்ணப்பமாகவும் அது இருந்தது. “மானுடத்தின் அந்தரங்க வரலாறு ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட George Sandன் (1804-1876) ‘Histoire de ma vie”யும் அவ்வகையில் முக்கியமானதொன்று  Autobiographie என்ற வார்த்தையில் அதன் முன்னொட்டு சொல்ல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் , அடுத்து பின்னொட்டு சொல் அடிப்படையில் எழுத்தும் வாசிப்பும் எடுத்துக்கொள்கிற சுதந்திரம், இவ்விரண்டு கருத்தியங்களிலும் திறனாய்வாளர்கள் – இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கிடையிலும் முரண்கள் இருக்கின்றன. விளைவாக இன்றளவும் கோட்பாட்டளவில் குழப்பமான சொல்லாடலாகவே இருந்துவருகிறது. ஒரு சுய சரித்திரத்திற்கான வரவேற்பு என்பது ஒரு மனிதன் தனது சமூகத்தில் ஏற்கனவே சம்பாதித்திருந்த செல்வாக்கு மற்றும் இடம் சார்ந்தது. அதே வேளை அதன் வெற்றி என்பது சொல்லப்படும் செய்தியிலுள்ள நம்பகத் தன்மை, எடுத்துரைப்பிலுள்ள தனித்தன்மை மற்றும் அழகியலால் தீர்மானிக்கபடுபவை.

 

ஆ. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

 

புதுச்சேரியைசேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதி இயக்கிய ஆவணப்படம். சுந்தரேசனாரின் அருமை பெருமைகளை அவரோடு நெருங்கிப்பழக வாய்ப்பமைந்த நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காவிரி ஆற்றோடு கலந்து பாய்கிற சிலப்பதிகார கானல்வரிகள் சுந்தரேசனாரின் கணீரென்ற குரலில் அந் நதி நீர்போலவே ஓசையிலும் சுவையிலும் உயர்ந்து நிற்கிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டவரென்றும் தமிழ் நாட்டில் மிகப்பெரும் இசை விழிப்புணர்வு ஊட்டி, தமிழர்களிடத்து இசையார்வம் தழைக்க உழைத்தவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சிற்றிலக்கியங்களை அதற்குரிய இசையில் பண்முறையில் பாடிக்காட்டிய பெருமைக்குரியவர்” என்கிற குறிப்புகள் இந்த ஒளிவட்டில் இடம்பெற்றுள்ளன, அதற்குப் பொருந்துகிறவகையிலேயே ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
ண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (ஆவணப்படம்)

எழுத்து இயக்கம்: முனைவர் மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளித் திரைக்களம்
தொடர்புகட்கு: http://www.muelangoven.com

 

இ. அதிபர் அப்துல் கலாமும் – மாத்தாஹரி நாவலும்

 

அவரது மரணத்தால் நாடே உறைந்துபோய்விட்டது. இந்திய அதிபர்களில் ஒருவருக்கு நானறிந்து நாடுதழுவிய அஞ்சலி என்பது இதுதான். அதற்கான தகுதிகள் அவருக்கு கூடுதலாகவே இருந்தன. அதிபராக அல்ல ஒரு மா மனிதராக அதிபர் நாற்காலியை அலங்கரித்திருந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் சம்பிரதாயமாக அல்லாது, அண்மைக்காலங்களில் ஒர் அசாதாரண ஆசாமி என்ற நினைப்போடு கைகுலுக்கிய இந்தியத் தலைவர் இவராகத்தான இருக்கவேண்டும். தமிழர்களுக்கென்றமைந்த தனித்த குணத்தின்படி ஆராவரத்துடன் துக்கத்தை அனுசரித்தார்கள். அவர் இரண்டாம் முதறை அதிபரானால் எனது பெருமை என்ன ஆவது நினைத்த தமிழினத் தலைவர்களெல்லாங்கூட தராசில் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் கலாம் பெயரால் பரிசு என்று அறிவித்து எல்லோரினும் பார்க்க எனது அஞ்சலி எடைகூடியதென்று தெரிவித்து எதிரிகளை வாயடைக்கசெய்துவிட்டார். மறைந்த கலாமே இத்தைகைய கூத்துகளுக்குச் சம்மதிக்கக்கூடியவரா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.  ஐரோப்பிய யூனியனின் பொன்விழா (50 ஆண்டுகள்) நிகழ்வில் திரு கலாம் கலந்துகொண்டார். ஐரோப்பிய பாராளுமன்றம் இருப்பது நான் இருக்கிற Strasbourg நமரில். அழைக்கப்ட்ட இந்தியர்களில் நானும் ஒருவன். நாள் ஏப்ரல் 25, 2007. அவர் ஆற்றிய உரையை மறக்க முடியாது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எங்களைபோல அழைக்கப்பட்டிருந்த நண்பர்களுக்கு முன்னால் கனியன் பூங்குன்றனாரைபற்றி இரண்டொரு வரிகள், புறநானூற்றிலிருந்து “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” எனத் தமிழில் கூறி ” I am a world citizen, every citizen is my own kith and kin” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டு உரையைத் தொடர்ந் த போது, நாங்கள் சிலிர்த்ததும், பரவசத்தில் கண்கள் சுரந்ததும் மறக்க முடியாத அனுபவம்.  அச்சம்பவத்தை ‘மாதாஹரி ‘நாவலில் அத்தியாயம் 24ல் பயன்படுத்திக்கொண்டேன், கதையில்வரும் இளம்பெண் (ஹரிணி) இந்திய அதிபர் அப்துல் கலாம் பாராளுமன்ற உரையை நேரில் கேட்பதுபோன்று அமைத்து அவர் உரையின் சில பகுதிகளை நாவலில் கலாம் பேச்சாக பதிவு செய்தேன். ஏதோ என்னால் முடிந்தது.
———————————————————-