அலெக்சாந்தர்

                      

       ( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)

                                         கி தெ மொப்பசான்

மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.

இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில்  மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும்  கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத்  தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.  

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.

திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது  அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:

–  பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..

திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான  சுயநலத்தில், அலெக்ஸாந்தரை  மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.

அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட  திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:

– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா?  என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.

 .- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக  திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில்  தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார். 

அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப  விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.  

– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு  இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.

அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :

– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான்  உண்மை, என்றார்.

–  நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது.  இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன்  பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.

– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும்.  ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.

அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!

திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம்  நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும்  ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்!  என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:

  – அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம்,  நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் ​​பணியாள் அலெக்சாந்தர்  இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய  வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி  தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.

பெண்மணி தொடர்ந்தார்:

– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ? 

தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :

– ஓ! நான் …நான் மேடம்,  எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .

பெண்மணித் தொடர்ந்து :

உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?

 «  ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று  கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.

திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :

— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.

அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :

—  ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.

— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?

அவருக்கு நா குழறியது :

— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.  

— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.

—  ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது  மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.  

பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்

—  ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும்,  அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?

பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :

– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !

பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.

மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.

– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க  எனக்காகவா, ஏன் ?

அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர்  பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :

— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.  

பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :

— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?

மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :

—  மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.

பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள்,  நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.

தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :

— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.

அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.

ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :

— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.

— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.

கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :

— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?

பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :

— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.  

பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.

— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும்  சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.

மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.

                       ———————————————————.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s