– நாகரத்தினம் கிருஷ்ணா
வரலாறு என்பது காலத்தின் வடுக்கள். தேசத்தின், ஓர் இனத்தின், ஓர் ஊரின் பெருமை சிறுமைகளை, உற்ற பெருமித த்தை, அடைந்த அவமானத்தை ச் சொல்வது. அக் குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களின் இறந்த காலத்தைப் பேசும் பண்பாட்டு ஆவணம். வரலாறுகள் உண்மை என நம்பப்படுவதால், ஆதாரங்களை அடித்தளமாக கொண்டு கட்டப் படவேண்டும்.
நூலாசிரியர் முனைவர் அ. இராமதாசு சராசரி பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, துணை முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், தொடக்க கல்வித் துணை இயக்குனர், கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர், இணை இயக்குனரென தம்மைக் கல்வி உலைக்களத்தில் உருமாற்றப்பெற்ற கல்விமான், முனைவர். நிறைகுடம். ஏதோ பணி செய்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் ஓய்வு பெற்றபின்பும் ஆய்வுகளில் கவனம் செலுத்தி புதுச்சேரி நகரின் வரலாற்றுத் தடத்தில் பயனித்து கண்டறிந்த தடயங்களை, படித்தறிந்த ஆவணங்களை – ஆய்ந்து தெளிந்த உண்மைகளை நமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே ‘புதுச்சேரியின் அடையாளங்கள்’ என்கிற இத் தொல்லியல் நூல்.
பதினான்கு அத்தியாயங்கள். புதுச்சேரியை அறிந்த மனிதர்களுக்கு முனைவர் அ. இராமதாசு நம் கண்முன் நிறுத்தும், கற்றூண்களும், கலங்கரை விளக்கமும், வாராவதியும் பிறவும் புதியதல்ல ஆனால் அவற்றின் பிறப்பும், தொடக்கமும் அதனையொட்டிய பல செய்திகளும் நம்மில் பலர் அதிகம் அறிந்திராதவை.
உதாரணமாக , புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலைக்கு அழகூட்டுகிற கற்றூண்கள் எங்கிருந்து வந்தன, எப்போது வந்தன, அவற்றின் உயரம் என்ன வேலைப்பாடுகள் என்ன – என ஆழமாக உரிய ஆவணங்களின் துணைகொண்டு விவரித்துக் கொண்டு போகிற முனைவர் « உருவாக்கபட்டு நான்னூறு ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் பெரிய அளவில் சிதைந்து விடாமல் இன்றும் பெருமையோடு காட்சியளிக்கும் கருங்கல் தூண்களை இப்போது நம்மால் உருவாக்க இயலாதுஎன்பதை உணர்ந்து மேலும் பலதலைமுறைகளைகண்டு களிக்கும் வகையில் அதிகப்பொறுப்போடு அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் » ( பக்கம் 8 ) என்று ஓர் அக்கறைகொண்ட புதுச்சேரிவாசி என்கிற வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பமும் வைக்கிறார். இதற்கிடையில் கற்தூண்களைக் குறித்து ஒரு பெரும் வரலாறே நம் கண்முன்னே நதிபோல சுழன்றோடுகிறது.
ஒரு தேசத்தை, அதன் கருவறையாக நின்று மனித உயிர்களை சுமக்கிற சிற்றூர் பேரூரின் சுவடுப் பனைகளில் ஏறி இறங்கும் ஆர்வம் எல்லோருக்கும் வராதென்பது தெரிந்த துதான், நம் வாழ்நாளில் அதனை கடக்கின்றபோதேனும், கருத்தரித்த வயிற்றின் அருமை பெருமைகளை அறிய முயல்வோமா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. பாமர ர்களை விடுங்கள் படித்த மனிதர்களுக்கே கூட இங்குள்ள மதுச்சாலைகளின் முகவரி தெரிந்த அளவிற்கு புதுச்சேரியின் தொன்ம வரலாற்றின் சாட்சியங்களையோ அவற்றின் முகவரியையோ அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இன்று காலை பாரதியார் பூங்காவில் நடந்தேன், சிலை அரசியலிலும் தமிழர்கள் தேர்ந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் பாரதியார் சிலையின் காலடியில் ஒரு குப்பைப் பையொன்று காக்கை அலகொன்றின் கவனத்தைப் பெற்றிருந்தது. பாரதி இதொரு பிரச்சனையே அல்ல என்பதுபோல நின்றிருந்தான். பாரதிக்கே இந்த கதியெனில், கற்றூண்கள் பராமரிப்பை, புதுச்சேரி நிர்வாக எந்திரத்திடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்.
தொன்மங்களைத் தேடித் தேடி ஆவணபடுத்தும் நூலாசிரியர் : புதுச்சேரி அங்காடிகள், அவற்றுக்கு மகுடமாக அமைந்த மணிகூண்டுகள், கலங்கரை விளக்கம், தாவரவியல் பூங்காக்கள் முதலியவற்றினைக் குறித்தும் விரிவான செய்திகளை, பல தொல்லியல் கல்விமான்களின் நூற்குறிப்புகள் துணைகொண்டு விரிவாகப் பதிவுசெய்துள்ளார். புதுச்சேரி காலனிய ஆட்சியிலிருந்த போக்குவரத்து வாகனங்கள், பஞ்சாலைகளின் தோற்றமும் முடிவும், அவை இயங்கிய விதம்,அவைசார்ந்த அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், காலனிய அரசு அவற்றை அணுகிய விதம், தொடர்ந்து கட்சிபேதமின்றி புதுச்சேரி ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலனில் காட்டிய அக்கறை, விளைவாக மூடப்பட்ட பஞ்சாலைகள் என வரலாற்றை வலியுடன் எழுதுகிறார்.
நூலிலுள்ள எந்தவொரு அத்தியாயத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது, ஒவ்வொன்றிலும் செறிவானத் தகவல்கள், குறிப்பாகக் கீழ்க்கண்டவை :
அ. ஆறுகளும் ஏரிகளும்
புதுச்சேரியில் 1889 ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக் பெரிய ஏரிகள் உள்ளிட்ட 59 ஏரிகளும், 9 பெரிய வாய்க்கால்களும், 5 தடுப்பணைகளும், 202 நீரூற்றுகளும், 12 பெரிய கேணிகளும் 53 நீர்த்தேக்கங்களும் இருந்தன என்கிற உண்மையை 1889ம் ஆண்டில் லூயிஸ் ஹாரிக் எழுதியுள்ள குறிப்புடன் தொடங்கும் ஆசிரியர் புதுச்சேரியில் பாய்ந்த, பாய்கிற ஆறுகளை : செஞ்சி ஆறு, திருக்காஞ்சி ஆறு, அரியாங்குப்பம் ஆறு, சுண்ணாம்பு ஆறு, பம்பை ஆறு, குடுவை ஆறு, மலட்டாறு, பெண்ணையாறு எனப்பட்டியலிட்டு அவற்றைபற்றிய விரிவானதகவல்களுடன் எழுதியுள்ளா. இவற்றில் பல தகவல்கள் அரியவை, புதியவை. இவை மட்டுமல்ல, நீர் சார்ந்த, நீர்ப்பாசனம் சார்ந்த ஒட்டுமொத்த தகவகளின் கலைக் களஞ்சியம் எனவும் இந்நூலை நாம் கருத்லாம்.
ஆ. துய்ப்ப்ளெக்சு மாளிகை, கோட்டையும் அரணும்,
காலனிய நிர்வாகத்தின் போது பிரெஞ்சு நிர்வாகிகள் வாழ்ந்த மாளிகையும், அதனுடன் இணைந்த கோட்டையையும் பின்னர் அவற்றுக்கு நேர்ந்த கேட்டையும் என்னைப் போலவே உங்களில் சிலர் வாசித்திருக்க க் கூடும், இங்கும் ஆசிரியர் சோர்வின்றி பல அரியத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். உதாரணமாக புதுச்சேரியினல் முதன் முதலாக கட்டப்பட்ட பர்லோன் கோட்டையைப் பற்றிப் பேசுகிறபோது :
« 1688ல் கட்டப்பட்ட அக்கோட்டைக் கடலிலிருந்து 400 அடிதூரத்தில் அமைந்திருந்த து. பிரெஞ்சுக் காரர்களுக்கு முன்பு புதுச்சேரியில் தங்கி வர்த்தகம் செய்துவந்த டேனிஷ்கார ர்கள் கட்டியிருந்த கட்ட டத்திற்கு 50 அடி வடக்கில் அக்கோட்டை ஏற்படுத்தப்பட்டது. சதுரமா அல்லது நீள் சதுரமா என்று கூற முடியாத ஓர் ஒழுங்குமுறையற்ற வடிவில் நான்கு கோபுரங்களோடு அது இருந்த து. கோட்டையின் வடக்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் சிறிய கொத்தளங்கள் அமைக்கபட்டிருந்தன. சில ஆண்டுகள் கழித்து, அரை வட்ட வடிவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுக் கோட்டையின் வடக்குப் பகுதி பலப்படுத்தப்பட்ட து. 32 பீரங்கிகள்கோட்டை மதிற் சுவரில் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்குள் பிரான்சுவா மர்த்தனும் கும்பெனி அலுவலர்களும் குடியிருந்தனர் . கப்புசின் பாதிரியாளர்களின் சிறிய தேவாலயம் ஒன்று கோட்டைக்குள் அமைந்திருந்த து. கோட்டையை எழுப்புவதற்கான ஒப்புதல் பெற்ற செஞ்சியை ஆண்ட ராம்ராஜாவுக்கு (சிவாஜியின் இரண்டாவது மகன்) 5000 சக்கரம் பிரான்சுவா மர்த்தன் கொடுத்தார் (Alfred Martineau, 1962) »(பக்கம் 114 ) என ஆழமான தகவல்கள்.
இ. அரிக்கமேடு
கீழடி உண்மைகள் அறிவதற்கு முன்பாக அரிக்கமேடு ஆய்வும், அறியவந்தவையும் தமிழர் வரலாற்றுச் சான்றுகள். அரிக்கமேட்டைப் பற்றிய முதல் தகவல் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிடைத்ததாக அறிகிறோம். இது தவிர படிப்படியாக அந்நிலப்பகுதி குறித்த அரசியல் வரலாறு, ஆய்க்கான ஏற்பாடுகள், திட்டங்கள், இருபதாம் நூற்றாண்டில் முப்பதுகளில் மூவர்கொண்ட பிரெஞ்சுகுழு ஒன்று அங்கு சென்று சேகரித்த தகவல், கிடைத்தபொருட்களைப் பற்றிய தகவல்கள். பொதுகே, பழவேற்காடு, அருவாநாடுஇவற்றுக்கு இடையே உள்ள சிக்கல்கள், ஊகங்கள் குழப்பங்களுக்கிடையில் புதுச்சேரி என்ற சொல் முதன் முதலாக 16 நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் தரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து என்கிற தகவலையும் அறிகிறோம்.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சு தேசம் கலை, இலக்கியத்தில் தனித்துவம் பெற்ற ஒரு தேசம். அவை காலனிய பிராந்தியத்திலும் எதிரொலித்தன. அவற்றிலும் புதுச்சேரி ஆசியப் பிராந்தியத்தில், இந்தியத்துணைகன்டத்தில் தனக்கென பிரத்தியேக அடையாளத்தை வகுத்துக்கொண்ட நகரம். முனைவர் ஆ. இராமதாசு அவர்களின் இந்நூல் ஒரு கலங்கறை விளக்கமாக நின்று, பண்ட்டைய புதுவையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்நூலின் துணைகொண்டு ஒரு வரலாற்று சுற்றுலாவை புதுவை பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரலாம். புதுவை அரசு சுற்றுலாத் துறையும், நகரின் கடந்த காலத் தடயங்களை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்நூல் வழிகாட்டுதலில் ஒரு நகரச் சுற்றுலாவிற்கு வழிகோல முடியும்.