
கி. அ. சச்சிதானந்தத்தின் மறைவு எனது சொந்த இழப்பு. கவிஞர் சதாரா மாலதி தன்னிடம் என்னைப் பற்றித் தெரிவித்தாரென்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனிலிருந்து பிரான்சு வந்திருந்தார். சில நாட்கள் விருந்தினராக தங்கவும் செய்தார். நான் அரிதாகச் சந்திக்கும் எழுத்துலக மனிதர்களில் அவரும் ஒருவர். பல வேளைகளில் எழுத்து குறித்த எனது அபிமானங்களில் அவருக்கு இசைவானதொரு கருத்து இருந்தது என்பதும் எங்கள் நட்பிற்கான காரணம்.
நீலக்கடல் நாவலை சந்தியா பதிப்பகத்திடம் கொண்டு சேர்த்தவர் அவர். மாதாஹரி நாவலை எனி இந்தியன் பதிப்பகம் பதிப்பித்தபின், அவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்து நாவலை வாசித்துவிட்டு ‘வார்த்தை‘ இதழில் எழுதிய கட்டுரை மறக்க முடியாதது.
அவர் ஆற்றலை, தமீழ் நவீன இலக்கியம் குறித்த அவருடைய விரிந்தபார்வையை தமிழ்ச்சூழல் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஆவணப்படுத்தியவை அதிகம். தமிழ் இலக்கிய உலக அனுபவங்களை கைப்பட எழுதி கட்டுகட்டாக அவர் வைத்திருந்தவையும் அதிகம். ஆங்கிலத்திலும் தொடர்ந்து வாசிக்கிறவர். Fiction and Nonfiction இரணடையும் ஓய்வின்றி வாசிப்பார்.
இந்நேரத்தில் என்னையும் அவரையும் இணைத்த மறைந்த கவிஞர் சதாரா மாலதியையும் வணங்குகிறேன்.
எவரிடமும் எனக்கொருவிழா எடு, என்னை பற்றி எழுது எனக் கேட்டுக்கொண்டவரில்லை, யாசிப்பவரில்லை. அவர் அவராக வாழ்ந்தார், திமிருடன் வாழ்ந்தார். பாரதியின் திமிர் கொஞ்சம் அவரிடமும் இருந்த து. அதனாலேயே அவரை எனக்குப் பிடிக்கவும் செய்தது. அசலான ஞானவான் அப்படித்தான் இருப்பான். அவரையும் என்னையும் ஒன்றுசேர்த்தது சாதியோ மதமோ, கொள்கையோ கோட்பாடோ அல்ல. தமிழ் நவீன இலக்கியம் மட்டுமே.
வாழ்க நீ எம்மான் !