கருமமே கண்ணாயினார்
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்
இவை ஒரு துறையில் தன்னை முன்நிறுத்தி அத்துறையில் ஒளிர்கிற மனிதர்களுக்கான இலக்கணங்கள். நமது பிள்ளயும் இவ்விலக்கணப்படி வாழ்ந்தார் என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிப்பவை பணிக்காலத்தில் தினந்தோறும் எழுதிய நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு புலங்களின் ஆய்வதும் விவாதிப்பதும் அவசியமாகிறது. பிள்ளையைப் பற்றிய இத்தொடருக்கு முதுகெலும்பாக இருப்பவை அவை. எனினும் அவற்றைக்குறித்து தொடரின் இறுதியில் விரிவானதொரு பார்வையை முன்வைக்கத் திட்டம். காரணம் இடைபட்ட அத்தியாங்களில் சொல்லப்படும் செய்திகள் அவருடைய நாட்குறிப்பு பற்றிய இறுதி அத்தியாயத்தை ஓரளவு புரிதலுடன் அணுக உதவும்.
தலைமை என்பது இருத்தல் சார்ந்த விடயமல்ல,ஆட்டுவித்தல் சார்ந்த பண்பு. பிடித்துவைத்த பிள்ளையாராக தலைமையில் அமர்ந்திருக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத காரணங்களால் தலைமைப்பொறுப்பேற்று, துணை நிற்கும் நபர்களால் வழி நடத்தப்பட்ட தலைமைகளுக்கு உலகில் சான்றுகள் நிறைய உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புதுச்சேரி கவர்னர் பதவி வகித்த துய்ப்ளே என்கிற தலைமைப் பம்பரத்தை சுழலச் செய்த நூல்கயிறும் கைகளும் பிள்ளைக்குரியவை. அவர் துரியோதனன் தலைமையை அழிவில் நிறுத்திய சகுணியல்ல, அவசியம் நேர்ந்தபோது பார்த்தனுக்கு தேரோட்டியாகவும் அமர்நது பாண்டவர்களுக்கு வெற்றியைத் தந்த மகாபாரதக் கண்ணன்.
நண்பர்களே ! நமக்குக் கிடைத்திருக்கும் பிள்ளையின் நாட்குறிப்புகளில் முதல் நாட்குறிப்பு நளவருடம் ஆவணி மாதம் 25ந்தேதி எழுதப்பட்டுள்ளது அல்லது ஜூலியன் நாட்காட்டிப்படி 1736ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ந்தேதி தொடங்குகிறது. அதிசயமாக இந்த நாளில் நடந்ததாகப் பிள்ளை பதிவு செய்யும் சம்பவம் முக்கியம் :
அன்றைய தினம் காலை எட்டுமணிக்குக் கூடிய நிறுவனத்தின் ஆலோசனைக்குழு தங்கள் குழுவில் புதியதொரு அங்கத்தினரை நியமனம் செய்கிறார்கள் அவர் பெயர் துய்லொரான் (M. Dulaurens). நியமனப்பத்திரத்திரத்தில் இப்பொழுது புதிய உறுப்பினர் உட்பட பிறஉறுப்பினர்கள் கையொப்பம் இடவேண்டும். பழைய உறுப்பினர்களில் ஒருவர் துமெலியா (M. Dumeslier). அவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுகிறபோது, உறுப்பினர் வரிசையில் புதிய உறுப்பினர் பெயர் அவர் பெயருக்கு மேலே இருக்கிறது. ஏற்கனவே இப்படியொரு பிரச்சனையில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அப்போதைய முதன்மை நிர்வாகி இக்குறையைப் பிறகாலத்தில் தவிர்ப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருந்தும் அது தொடர்வது துமெலியா என்பருக்கு ஒரு மானப்பிரச்சினை. அலோசனைக்குழு கூட்டத்தின் முடிவுக்குப்பிறகு, பிற்பகல் கவர்னர் துய்மா (Dumas)வைச் சந்தித்து தமது மனக்குறையைத் தெரிவிக்கிறார் :
« முசே துலோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்திலேயே இருப்பேன் ; இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்குக் கும்பெனியார் உத்தியோகம் கவலை இல்லை » என்கிறார். அதற்குக் குவர்னர் : « கும்பெனியார் எழுதியனுப்பின படிக்கு நான்கொண்டு நடப்பிக்க வேணுமே யல்லாமல் அதைத்தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லை » எனப் பதில் தருகிறார். « நீர் நானந்தப்படிக்கு நடப்பிப்பேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தீரே ! அந்தப்படிக்கு ஒரு வருஷம் நடப்பித்தீரே ! இன்னும் பன்னிரண்டு மாதம் நடத்துகிறதானால இந்த உத்தியோகத்தில் இருக்கிறோம் இல்லாவிட்டால் எனக்கு இந்த உத்தியோகம் கனவில்லை » என்பது துமெலியா கவர்னருக்கு அளிக்கும் பதில். இவை அனைத்தும் பிள்ளையின் மொழியில் நாம் வாசிக்க கிடைக்கும் செய்தி. வியப்பான தகவலும் கூட. இந்நிகழ்வோடு பிள்ளை தன் நாட்குறிப்பைத் தொடர்வது நமக்கு வியப்பை அளிக்கிற்து.
பணியையும் அப்பணிசார்ந்த நெறியையும் கடைபிடித்த நம்முடைய துபாஷ், பணியை நிறைவேற்றுகிறபோது சுயமரியாதைக்கு இழுக்குவருமெனில் எத்தகைய முடிவுக்கும் வரக்கூடியவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும் கட்டளைக் கல்லாக இச்சம்பவத்தை நாம் அணுகலாம்.
நாட்குறிபில், ஒவ்வொருநாளும் தம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சம்பவங்கள் அனைத்தையும் பிள்ளை எழுதினார் என்கிற பார்வையை, பொதுவில் நாம் வைக்கிறோம். வாசிக்கின்ற நமது மன நிலையை வைத்து அவற்றை எடைபோடவும் செய்கிறோம். ஆனால் எழுதியவரின் மனப்பாங்கென்று ஒன்றுண்டு. பிள்ளையின் பெற்றோரோ, பிள்ளையோ பிறரிடம் சேவகம் பார்த்து பசியாறவேண்டிய நெருக்கடியில் இல்லை. வறுமை வெகுதூரத்தில் இருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடனான உத்தியோகம் சமூகக் குறியீடாக பிள்ளையின் தந்தையையும் பிள்ளையையும் அடையாளப்படுத்த உதவியது என்பது உண்மை. அதேவேளை இப்படியொரு பிரச்சனை அவருடைய வாழ்க்கையில் குறிக்கிட்டிருப்பின் இதனை எப்படி அணுகி தன்னை முன்னெடுத்திருப்பார் என்பதற்கும் உதாரணங்கள் இருக்கின்றன.
பிள்ளையின் உறவினர் நைனியப்ப பிள்ளை பதவிக்காலத்தில் தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த செய்தி உங்களுக்கு புதியது அல்ல. அவருடைய மகன் குருவப்ப பிள்ளை அக்குற்றச்சாட்டை மறுத்து உரிய நீதிகேட்டு பாரீஸ் சென்றார், வழக்கில் வென்றார், நட்டயீட்டைப் பெற்றார் என்பதெல்லம் பழையசெய்திகள். எனினும் தந்தை வகித்த துபாஷ் பதவியைத் திரும்பத் தனக்குப் பெற குருவப்ப பிள்ளை கிறித்துவ மதத்தை த் தழுவுகிறார். அவருடைய இறப்பிற்குப் பிறகு அனுபவம், திறமை இவற்றை நன்கறிந்து பாராட்டிவந்த கம்பெனியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் நமது பிள்ளை துபாஷாக நியமனம் செய்யப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் அவர் கிறித்துவர் இல்லை. கிறித்துவர் அல்லாத ஒருவரை துபாஷாக பதவி நியமனம் ஆவதை புதுச்சேரி கிறித்துவமத குருமார்கள் விரும்பவில்லை. ஆனந்தரங்கப்பிள்ளை மதம் மாறியிருப்பின் குருவப்ப பிள்ளையைப்போலவே துபாஷாக வந்திருப்பார்.ஆனால் ஆந்தரங்கப்பிள்ளை தமது சுயமரியாதையை இழக்கவிரும்பவில்லை. தமது வினைத் திட்பத்தில் பிள்ளைக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. தன்னுடைய நேர்மையும், சாதுர்யமானப் பேச்சும்
தனக்குரிய சன்மானத்தை பெற்றுத்தருமென உறுதியுடனிருந்தார். பிள்ளை குடும்பத்திலிருந்து பறிக்கப்பட்ட துபாஷ்பதவி, இவரைத் தேடிவருகிறது.
பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது குருவப்ப பிள்ளைபோல தங்கள் பூர்வீக அடையாளத்தை ‘ La rénonciation ‘ என்ற பெயரில் துறந்து பிரெஞ்சு பெயரைக் குடும்பப் பெயராக (surname or famaily name) மாற்ரிக்கொண்டு, மதத்தையும் மாற்றிக்கொண்டு பலன் பெற்றவர்கள் அனேகர். இன்றைக்கு பிரான்சுநாட்டின் குடியுரிமைச் சட்டம் மதம் மாற வற்புறுத்தவில்லை. எனினும் சில சலுகைகள் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிகிறபோது, புதுச்சேரி தமிழர்கள் கிறித்துவ பெயர்களை குடும்பப் பெயராக ஏற்றுக்கொள்கிறவர்கள் உண்டு. Dumont வடிவேலு, Antoin ராமசாமி என்று அழைக்கபடும் தமிழர்கள் பிரான்சில் ஏராளம். இக்கட்டுரையாளனான எனக்கும் அத்தகைய நெருக்கடி எற்பட்ட து. என்னுடைய பெயர் உண்மையில் நாகரத்தினம்( மதுராந்தகம் தாலுகாவில் செய்யூர் என்ற ஊரில் நாகரத்தினம் பிள்ளை என்ற உறவினர் செல்வாக்காக வாழ்ந்தவர், அவர் பெயரை எனக்கு வைத்திருந்தார்கள் ) என்னுடைய தகப்பனார் பெயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை. அவர் கிராம முன்சீப்பாக இருந்தவர். 1985ல் மனைவிமூலம் (அவர்கள் குடும்பப் பெயர் Eboly) பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்றேன். பிரான்சுக்கு வந்ததும் ஏதாவதொரு கிறித்துவ பெயரை குடும்ப பெயராக ஏற்கின்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டேன். நீதிமன்றத்தில் விண்ணப்பமிட்டு, குடும்ப பெயராக நாகரத்தினத்தையும், முதற்பெயராக (First name) எனதகப்பனார் பெயரில்ருந்து கிருஷ்ணாவையும் வைத்துக்கொண்டேன். அன்றியும் காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பிரெஞ்சு மொழி பேசவராத பிரச்சனைக்குரியத் தமிழர்களுக்கு மொழிபெயர்க்க அவ்வப்போது அழைக்கப்படுகிறேன். அவ்வகையில் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்கள், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு 2 நூல்கள் ஆக பிள்ளையின் பெருமையைப் பேச யாம் இதழ் வாய்ப்பை அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.
தொழில் திறம்(Professionalism)
பிள்ளையின் ஆளுமைப் பண்பில் நான் முதலாவதாப் பார்ப்பது அவருடைய தொழில் பக்தி அல்லது தொழில் திறம். கல்வியோ, பணியோ, குடும்பமோ, நட்போ எதுவென்றாலும் அந்த ஒன்றில் உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொள்வது சம்பந்தப்பட்டவர் வெற்றிக்கு உதவுகிறது. ஒரு வகுப்பில் இருபது மாண்வர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பதினைந்து பேர் இறுதி த் தேர்வில் தேவாகிறார்கள், அவர்களில் முதல்வகுப்பில் தேர்வாகிற்வர்கள் நான்கு அல்லது ஐந்துபேர். இந்த ஐந்து பேருக்கும் பிற பனினைந்து பேருக்கும் என்ன வேறுபாடு, முதல் வகுப்பில் தேறிய ஐவரும் தல்விக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். தொழில்திறத்திற்கும் அத்தகைய கடப்பாடு தேவைப்படுகிறது.
முடியாட்சியில் ராஜபக்தி ராஜவிசுவாசம் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஜனநாயக உலகில் உண்மையான விசுவாசம் என்ற சொல்லை அறிந்திருக்கிறோம். கண்மூடித்தனமான விசுவாசம் தொழில் திறம் ஆகாது.
« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. »
என்கிற குறள் வகுத்த வினைத்திட்பத்தை நெறியாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் பிள்ளை. சொந்த தோற்றத்தில் காட்டிய அக்கறை, பணிசார்ந்த கோட்பாடுகளில் கொண்டிருக்கும் மரியாதை, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தெளிவு, இம்மியும் பிசகாத செய் நேர்த்தி, ஆகிய உட்பிரிவுகளை தன்னுள் அடக்கியது தொழில் திறம். இதனைச் சுருக்கிச் சொல்வதெனில் முழுமையன ஈடுபாடு, நேர்மை மற்றும் செயல் திறன், எண்ணிய முடித்தல் .
குணங்களைச் சொல்லிவிட்டோம் . இக்குணங்களின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் ?
பலன்கள்.
இறுதியில் அடையும் பலன்களால் ஒருமனிதனின் தொழிலாற்றலை அளப்பதென்பது ஒருவகை. சுற்றியுள்ள மனிதர்களால் ஒருவரின் தொழில் திறத்தை அளப்பதென்பது இன்னொரு வகை. செய்பவரைக் காட்டிலும் செய்யும் மனிதரை அருகிலிருந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், நமது பெருந்தகைகளிடம் பணி சார்ந்த பலன்களை எதிர்பார்ப்பவர்களாக இருக்கலாம். சக ஊழியர்களாகப் பணியாற்றி, ஒருவருடைய செயல்திறம், தனது வளர்ச்சியைப் பாதிக்கிறது எனக் மனம்
புழுங்கலாம். நமது பிள்ளையின் தொழில் திறமையைக் கண்டு வியப்பவர்களாக துய்ப்ளே முதலான கவர்னர்கள் இருந்தார்கள். அவர் வளர்ச்சிகண்டு பொறாமையில் புழுங்கியவர்களாக கனகராய முதலியாரும் பிற தமிழர்களும் இருந்தார்கள். நமக்கு அவர் துபாஷ் உத்தியோகத்தின் பெருமையை உரத்துச் சொல்வது, அவர் காலத்தில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அடைந்த வளர்ச்சியும் இலாபமும்.
—————————————————————————