ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s