ஆனந்தரங்கப்பிள்ளை – 1

(   இத் தொடர் கடந்த ஆறு  மாதங்களாக யாம் என்ற இதழில் வெளிவருகிறது. யாம் இதழ் ஆசிரியர் குழுவினருக்கு குறிப்பாக  கபிலன் அவர்களுக்கு நன்றி சொல்ல்\ வேண்டும்.  ” யாம் இதழுக்கு  ஆனந்த ரங்கப்பிள்ளை குறித்து ஒரு தொடர்  எழுதவேண்டும்!’  என்ற வேண்டுகோளை வைத்தார். நான் அதனைத் தவிர்த்துவிட்டு சொல்லும் சொல் சார்ந்த வெளியும் என்ற தலைப்பில் வெற்றிபெற்ற நவீன புதினங்களின் குறிபாக எனது வாசிப்பு ரசனைக்கு உட்பட்ட எழுத்தாளர்களின்  சொற்களின் பயன்பாடு கலை நுணுக்கம் குறித்து எழுத நினைத்தேன். முதல் கட்டுரையை அனுப்பியும் வைத்தேன் பிரசுரமும் ஆனது. ஆனால் இதழின்  பிற ஆக்கங்களைவாசித்த தும் ஆனந்தரங்கப்பிள்ளை தொடரே பொருத்தமானது என முடிவுசெய்தேன். கட்டுரையின் நோக்கம் பிள்ளையின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவது. சிலதிருத்தங்களுடன் பிரசுரம் ஆகிறது)

          

மண்ணில் மனிதராய்ப்பிறந்த எல்லோரும் வரலாறு படைப்பதில்லை, வாரலாறாகவும் ஆவதில்லை.

வரலாறு என்பது  மானுட வாழ்க்கையில் சாதனைப் படைத்த மனிதர்களையும், அவர்களை மையப்படுத்திய நிகழ்வுகளையும் பேசுவது. உலகின் முக்கியத் தலைவர்களைப்பற்றிப் பேசுகிறபோதெல்லாம் அவர்களோடு பிறந்த வாழ்ந்த மண்ணின் வரலாறும் உடன் பயணிக்கிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தை, அக்காலத்திற்குச் சொந்தமான அரசியலை அத்ன் வெற்றிகளை, தோல்விகளை அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளை அவை  தெரிவிக்கின்றன.

இன்றைக்கும் புதுச்சேரி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது, 18ஆம் நூற்றாண்டின் ஆளுமையாகத் திகழ்ந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும், வரலாறும், அவரின் தலைமைப் பண்பும் முன் நிற்கின்றன. ஆவணங்கள் அடிப்படையில், கல்வெட்டுகள் அடிபடையில், தொல்பொருள் ஆய்வில் கிடைக்கும் உண்மைகள் அடிச்சுவட்டில் பிற்காலத்தில் வரலாறாசிரியர்கள் சரித்திரத்தைப் எழுதுவதுண்டு.  1736 செப்டம்பர் மாதம் தொடங்கி 1761 ஆண்டு சனவரி மாதம் வரை தமது வாழ்வை ஒட்டி நிகழ்ந்த சம்பவங்களை நாட்குறிப்பாகப் பதிவு செய்து ஓர் இருபத்தைந்து ஆண்டுகால அரசியல், சமூகம் சார்ந்த நிலமைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ஆனந்தரங்கப் பிள்ளை உதவி இருக்கிறார்.   நாட்குறிப்பென்பதால் சிறு சம்பவங்களைக்கூட கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார். அரசியல், அதன் பண்பிற்கு ஒப்ப சுயநலங்கள் சூழ்ச்சிகள், சதிகள், உட்பகைகள், தந்திரங்கள் உபாயங்கள், ஆங்கிலேயர் பிரெஞ்சுக்கார்களுகிடையிலானப் பங்காளிச் சண்டைகள், உள்ளூர் ஆட்சியாளர்களுக்கிடையிலான குத்துவெட்டுகள் ;  காலனித்துவகால சமயப் பிரச்சினைகள், சமூக சிக்கல்கள், கலகங்கள், அபாயங்கள் ; வணிகக் கொள்கைகள், இலாப நோக்கு, ஆசைகள், முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து என ஒரு பெரும் பட்டியலுக்கான தலைப்புகளில் விவாதிக்கப் போதுமான தகவல்களை தெள்ளத்தெளிவாக பிள்ளை  பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது 1709  மார்ச் மாதம் 30ந்தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார். பிரெஞ்சு நிர்வாகத்தின் வணிகச் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்த நெருங்கிய உறவினர் நைனியப்ப பிள்ளயின் வேண்டுதலை ஏற்று, அவரது பணிகளுக்கு துணை நிற்க புதுச்சேரிக்கு வருகைதரும் ஆன ந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை, நைனியப்பிள்ளையின் வீழ்ச்சிக்குப் பிறகு அவருடைய மகன் குருவப்பபிள்ளையுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் தந்தையின் மறைவுக்குப் பிறகு காலனிய பிரெஞ்சு அரசாங்கத்தின் முதுகெலும்பாக, உந்துவிசையாக தொடக்கத்தில் துபாஷ் பின்னர் தலைமை துபாஷாக  அவருடைய மகன் ஆனந்தரங்கர்  இருந்தாரென வரலாறு தெரிவிக்கிறது.

1735 ல் இன்றைய பரங்கிப்பேட்டையில், ஆனந்தரங்கப் பிள்ளையை அவருடைய இருபத்தாறுவயதில்  பிரெஞ்சிந்திய நிறுவனத்தின் வரத்தக பிரதிநிதியாக அப்போதைய பிரெஞ்சு ஆளுனர் லெனுவார் (Lenoir)  நியமிக்கிறார். அதுமுதல் அவர்காட்டில் மழைதான். அதற்கு மறுவருடமே இன்றைக்கு உலகமே வியக்கின்ற அவருடைய « தினப்படி  சேதி குறிப்புl » அல்லது « சொஸ்த லிகிதம் » எழுதப்படுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள் கிட்டத்தட்டட 10000 நாட்கள் 10000 பக்கங்கள். பிரமிப்பூட்டுகிறது. ‘செயற்கரிய செய்வார் பெரியார்’ என வள்ளுவன் சொற்களுக்கு சாட்சியமாக நாட்குறிப்புகள் இருக்கின்றன. 1761 ஆம் ஆண்டு எழுதி முடித்த நாட்குறிப்பு,  85 ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 1849 ஆம் ஆண்டு அ. கலுவா மொம்பிரன்(A. Gallois-Montbrun) என்பவரால் வெளி உலகிற்குத் தெரியவருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  கீழ்த்திசை வழக்கு மொழி கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த ஜூலியன் வான்சான் (Jelien Vinson) என்ற  தமிழறிந்த பேராசிரியரால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இன்று புதுச்சேரி அரசு பன்னிரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மிகவும் சிரத்தையுடன் தொகுத்ததில் பெரும்பணி ஆற்றியவர் ரா. தேசிகம் பிள்ளை.

தலைவர் என்பவர் யார் ? அவர்கள் வழி நடத்தும் மனிதர்கள் யார் ? அம்மனிதர்களுக்கும் தலைமைக்குமான உறவைக் கட்டிக்காக்கவும், அதிகாரமின்றி அன்பாக அரவனைத்து  திட்டமிட்ட இலக்கினை எட்டுவதற்கும் வழிமுறைகள் எவையெவை?  தேவையான பண்புகள்,  செயல் முறைகள் எவை ?  போன்ற கேள்விகளெக்கெல்லாம் பிள்ளையின்  நாட்குறிப்பில் பதில்கள் கிடைக்கின்றன. ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை அரசியல், நவீன உலகின் நிர்வாக அரசியலுக்குத் தேவையான அத்தனை நுட்பமான கூறுகளையும் உள்ளடக்கியது என்பதனை அவருடைய நாட்குறிப்புகளைக் கொண்டு தெரிந்து கொள்கிறோம்.

தலைமைத்துவம் என்பது முதன்மைப் பணி. தன்னைச்சேர்ந்த மனிதர்களை மட்டுமல்ல, தன்னையும் வழிநடத்திச் சாதிப்பது. அத் தலைமைத்துவப் பண்பு எத்தகையது ? அதன் சக்கரங்கள் பழுதற்றவையா, அவை சரியான அச்சில் சுழல்கின்றனவா, திட்டமிட்ட நேரத்தில்  இலட்சியத்தை எட்டுவதில் அதன் பங்களிப்பு நம்பகத் தன்மைக்கொண்டதா ? என்பதை பகுத்தறியும் முயற்சியில் நமது சிந்தனையைச் செலுத்துவதேகூட ஒருவகையில் தலைமைத்துவ நலன் சார்ந்ததே. இடியின் நிழலில் மின்னலாய் தோன்றி மறையும் மனிதர் உதாரணங்கள் நமக்கு வேண்டாம் ; நமக்குத் தேவை காலவானில் சூரியனாய், உயிர்களின் பச்சையத் தேவையாய் நீடித்து பிரகாசிக்கிற அசாதாரண மனிதர்களின் தலைக்குப்பின்னே ஒளிர்கிற ஒளிவட்டங்களுக்கான காரணத் தேடல்கள்.   பாரதி பாடியதுபோல « கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திடவும், மண்ணில் தெரியும் வானம் வசப்படவும் »   கனவுகள் உண்டெனில், உங்களுக்கு ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும் அவர் எழுதிய ‘தினப்படி சேதிக்குறிப்பு’ உதவும்.  வெற்றி என்பது தனிமனிதனுக்குரியது மட்டுமல்ல தனித்து சுவைப்பதைக்காட்டிலும், பெற்ற வெற்றியை பிறருடன் பகிர்ந்து சுவைப்பது கூடுதல் இன்பத்தைத் தரும். ஒட்டுமொத்த குழுவினரின், கூட்டத்தின், சமூகத்தின், தேசத்தின் வெற்றியில், நலனில்  அக்கறைகொண்டு அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு உறுதுணையாக நின்று சாதிப்பவனே சிறந்த தலைவனாக இருக்க முடியும், என்பதை ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கைத் தரும் செய்தி.

 

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண்டனைத்துஇவ்வுலகு.

 

என வாழ்ந்துகாட்டியவர் ஆனந்தரங்கப்பிள்ளை

 

தலமைப் பொறுப்பு இரு வகைகளில் கிடைக்கிறது, சுய உழைப்பில் சுய திறமையில் தலைமைப் பொறுப்பை எட்டுவதென்பது ஒன்று. வாரிசு என்றவகையில் தலைமையை எட்டுவதென்பது பிரிதொன்று. பின்னவர்களைக் காட்டிலும் முன்னவர்களே தலைமைப் பண்பை இயல்பாகச் சுவீகரித்து வாழ்க்கையிலும் தொழில்முறையிலும் சாதித்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை இவர்களோடு இசைந்து பயணிப்பவர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஆனந்தரங்கப்பிள்ளை  வேந்தனோ, படைத் தளபதியோ அல்ல. எனினும் அவர் ஈட்டிய வெற்றி, புகழ் அவர்கள் சாதனைக்கு இணையானதே.

உலக வரலாற்றில் மன்னர்களைக் காட்டிலும் அவர்களை வழி நடத்திய அமைச்சர்கள், அரசியல் குருக்கள் வழிகாட்டுதலால் சம்பந்தப்பட்ட அரசுகள் வெற்றிகளை குவித்திருகின்றன. பிள்ளை ஒர் அரசியல் சாணக்கியர். அவர்காலத்தில் பிரெஞ்சு அரசு அடைந்த பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே உரிமைகோரத் தக்கவர்.  பிள்ளையின் நாட்குறிப்பை, அவருடைய வாழ்க்கையை தன் முனைப்பு கட்டுரைகளாகவோ, ஆர்வத்தை த் தூண்டுகிற கதைகளாகவோ, காலத்தின் கண்ணாடி ஆகவோ, பிரெஞ்சு காலைத்துவத்தின் அத்தியாயங்களாகவோ, ஒரு தமிழனின் சாதனையாகவோ அவரவர் ரசனைக்கேற்ப வாசித்து மகிழலாம். அடுத்துவரும் அத்தியாயங்களின் உங்களின் அனுபவம் அதுவாக இருக்க என்னால் இயன்றவரை முயன்றிருக்கிறேன்.

பிரெஞ்சு காலனிய அரசு இருவகை சலுகைகளின் அடிப்ப்டையில் மதமாற்றத்தை ஊக்கப்படுத்தியது :

சமூகத்தின் அடிதட்டுமக்களை ‘Renonciation’ (பூர்வீக அடையாளத்தை துறத்தல்) என்கிற சிறப்பு ஆணையின் கீழ் பிரெஞ்சு குடிமக்களாக மாறினால் அடித்தட்டு மக்கள், மேல்தட்டு மக்களுக்கு இணையாகிவிடுவார்கள் என்பது முதற் சலுகை.

கிறித்துவத்தை தழுவியவர்களுக்கு காலனி நிர்வாகத்தில் முன்னுரிமை என்பது இரண்டாவது சலுகை.

ஆனால் மதமாற்றத்திற்குப் பின்னரும் கிறித்துவ தேவாலயங்களில் அன்றைக்குச் சாதிபாகுபாடுகள் இருந்தன. பிரெஞ்சு குடிமக்கள் ஆனபின்னரும் ஐரோப்பியருக்கு இணையாக ஊதியமோ சலுகைகளோ வழங்கப்படவில்லை குளோது மரியுஸ் (Claude Marius), புதுச்சேரி தமிழர்  தம்முடைய இருபதாம் நூற்றாண்டு இந்தோ சீன அனுபவத்தை எழுதுகிறார். இதனை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்தரங்கப்பிள்ளை ஊகித்திருக்கவேண்டும். அவர் உறவினர் குருவப்ப பிள்ளைபோல  மதம் மாறியிருந்தால் உட னடியாக தலைமை துபாஷ்  உத்தியோகம் கிடைத்திருக்கும். காலம் காத்திருந்த து, கவர்னர் துய்ப்ளே தமது மனைவி ழான் என்பவளின் தலையணை மந்திரத்தை  உதாசீனம் செய்து தகுதியின் அடிப்படையில் அப்பதவியைப் பெற நெருக்கடியை உருவாக்கியது.  யாரை எங்கே வைக்கவேண்டுமென காலத்திற்குத் தெரியம். ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் பல துபாஷிகள் பல்லக்கு ஏறினார்கள். காலம் இன்றளவும் சுமப்பது புதுச்சேரி ஆனதரங்கப்பிள்ளையை.கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக் குறைவாக இருந்தகாலத்தில் (பதினெட்டாம் நூற்றாண்டில்) கல்வியும்பெற்று, சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையையையும் பின் தங்கிய வகுப்பினர் ஒருவரால் சாதித்து காட்டமுடிந்ததெனில் அது சாதாரண விடயமல்ல.  தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்ட மனிதர்கள்  வெற்றிபெறுவார்கள் என்பது எழுதப் படாதவிதி.

 

தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s