மொழிவது சுகம் அக்டோபர்   2019: தக்கார் எச்சம் : காந்தி

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம்.

நாடறிந்த தலைவர்கள் அனைவரும் உலகறிந்த தலைவர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை.  உலகறிந்த தலைவர்களிலும் அமாவாசை  நாட்களின் பித்ருகளாக அன்றி உண்மையில் கொண்டாடப்படும் தலைவர் குறைவு. இத்தலைவர்களில் பலரும் அவரவர் சொந்த நாடுகளில்கூட  ஆராதிக்கப்படுவதேகூட வரலாறு தரும் நிர்ப்பந்த்தால்.

ஒரு தலைவரின் பெருமையும் புகழும்  அவர் மறைவிற்குப் பிறகு யார் அவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப்  பொறுத்தது.   நமக்குப் பிரச்சினை,  தலைவர்கள் அல்ல அவரை அடுத்து வருகின்றவர்கள் . « அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் » என காத்திருக்கிற அவர் நம்புகிற சீடர்கள்.

தலைவரை தொடரும்  முன் வரிசை அபிமானிகள் கூட்டத்தில்  உண்மையான விசுவாசிகளோடு மேலே குறிப்பிட்ட பழமொழிக்கிணங்க ஒன்றிரண்டு  சாமர்த்தியசாலிகள் கலந்திருப்பார்கள். திண்ணை காலியானவுடன்  தலைவர் இடத்தில் அமருகிற இந்த நரிகளின்  நோக்கம் தலைவர் விட்டுச்சென்ற அட்சயபாத்திரத்தின் ஓட்டை உடைசலைத் தட்டி ஈயம் பூசுவது. மறைந்த தலைவர் ஈட்டிய புகழை, தங்கள் வளர்ச்சிக்கு மடை திறந்து விடுவது.  தலைவரை முன்நிறுத்தி வளர்ந்ததும், ஒரு சில ஆண்டுகளில் இறந்த தலைவர் நிழல்  இவர்கள் நிஜம் என்று ஆகிப்போவார்கள். உண்மையில்  தலைமைக்கும் கொள்கைக்கும்  அபாயமாக இருப்பது  இந்த சாமர்த்தியசாலிகளே.  இந்த அபாயத்தை உணர்ந்தோ என்னவோ, முக்காலமும் உணர்ந்த இந்திய புத்திசாலி தலைவர்களில்  ஒரு சிலர் உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் அரிதாக காண்கிற வாரிசு அரசியலைப் கடைபிடிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல தலைவர்களுக்கு ‘குலசாமி’ லேபில் கிடைக்கிறது. சந்த தியினர் « பொங்க வைக்கவும், கிடாவெட்டவும், மொட்டைபோட்டு  காதுகுத்தவும் » இந்த வாரிசு அரசியல் உதவுகிறது. இவர்கள் புகழை மொட்டைபோட காத்திருக்கும் கபட சீடர்களிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

காந்தியின் வெற்றி :

நிழலுக்கு அதிகம் காத்திராமல் பாலை நிலமென்றாலும் கடந்து செல்ல துணிபவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். பெருங்கூட்டத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கட்டிக் காப்பவன், வாகை சூடுகிறான். காந்தி தேர்வு செய்த ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம், அகிம்சை சொற்கள் விடுதலைக்  களத்திற்குப் புதியவை. உயிர்ப் பலிகளை வேண்டியவை அல்ல. தொண்டர்களைத்  தீக்கிரையாக்கி தலைவர்கள் நினைவுகூர கண்டவையும் அல்ல.

ஒரு தலைவரை அவர் பிறந்த நாட்டின் எல்லை கடந்து, மொழிகடந்து, நிறம் கடந்து, சமயம் கடந்து   எவ்வித நெருக்கடியும் இல்லாத நிலையில் உலகமக்களில் ஒரு பகுதியினர்ஒவ்வொரு நாளும்  நினைவு கூரும் அதிசயம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  பிரான்சு நாட்டில் மட்டும்,  நாங்கள் வசிக்கின்ற ஸ்ட்ராஸ்பூர் உட்பட மூன்று நகரங்களில் (இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே அன்றி குறைவாக இருக்க வாய்ப்பில்லை. )  அரசின் பங்களிப்புடன் காந்தி சிலைகள். நிறுவப்படுள்ளன.  நகரில்  உள்ள ‘Café Philo’ விலும் ‘Espace Culturel des Bateliers என்கிற அமைப்பின் தத்துவ கலந்துரையாடல்களிலும் , வருடந்தோறும் காந்திய சிந்தனைகள் குறித்து பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அமைதி குறித்த அரங்குகளில் ஐநா சபை தொடங்கி பிரான்சு பாராளுமன்றம்வரை அவப்போது  காந்தி  என்கிற மூன்று எழுத்து ஒலிக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்நாள் பிரெஞ்சு அதிபர் மக்ரோன்வரை காந்தி பெயரை உச்சரிப்பதைச் செய்திகளில் கேட்கிறோம், பார்க்கிறோம்.

இங்கேதான்  நமது வள்ளுவனின் :

‘ தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

குறள் உதவுகிறது. இக்கட்டளைக்கல் சராசரி மனிதர்களை மட்டுமல்ல,  தலைவர்களை உரசிப்பார்க்கவும் உதவும். இங்கே எச்சம் என்பதை  ஒரு தலைவர் விட்டுச்சென்ற கொள்கைகள், புகழ்கள், சிந்தனைகளாக மட்டுமின்றி அவர் விட்டுச்சென்றவற்றை உண்மையாகப் பின்பற்றி அதில் வெற்றியும் பெற்ற  அப்பழுக்கற்ற சீடர்களாகவும் காண வேண்டும். காந்தியின் சீடர்களும் அவரைப்போலவே உலகெங்கிலும் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது காந்திக்குக் கிடைத்த பெருமை. இப்படியொரு பெருமை உலகில் வேறுதலைவர்களுக்கு இன்றைய தேதியில் வாய்த்ததில்லை. நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும்,  மார்ட்டின் லூதர் கிங்கின் சுயசரிதையையும் காந்தி என்கிற பெயரின்றி வாசிக்க இயலாது என்பது வரலாறு தரும் உண்மை. இத்தலைவர்கள் காந்தியைத் தங்கள் பிழைப்புக்காகக் கொண்டாடியவர்கள் அல்ல. எங்கோ பிறந்த ஒரு தலவைனை சாதிய விடுதலை, சமய விடுதலை, வர்க்க விடுதலை என்ற முழக்கமின்றி தங்கள் இன விடுதலைக்கு முன்னோடியாக கொண்டு  நேசித்த அபிமானிகள். காந்தியைத் ‘ தக்கார்’ என்பதை உலக அரங்கில் எண்பிக்கும் எச்சங்களாக இருப்பவர்கள் யாரோ எவரோ அல்ல ஆப்ரிக்க காந்தி என ழைக்கபடும் நெல்சன் மண்டேலாவும், அமெரிக்க காந்தி என அழைக்கபடும் மார்ட்டின் லூதர் கிங்கும்.

காந்தி குறைகளற்ற மனிதரா ?  அப்படி யாராவது  ஒருவர் உலகில் உண்டென்றால் சொல்லுங்கள். ஒரு மனிதனை உரசிப்பார்த்து அறிய அவரைக் கொண்டாடுகிறவர்கள் யார் என்றும் பார்க்கவேண்டும்.

உலகில் பண்பட்ட மனிதர்கள் என நம்பப்படுகிற  பிரெஞ்சு மொழி அறிவு ஜீவி ரொமன் ரொலான் (Romain Rolland) என்பவரும் நமது மகா கவியும் காந்தியைப் கொண்டாடுவது எனக்கு முக்கியமாகப் படுகிறது.

Romain Rolland :

« De tranquilles yeux sombres. Un petit homme débile, la face maigre, aux grandes oreilles écartées. Coiffé d’un bonnet blanc, vêtu d’étoffe blanche rude, les pieds nus. Il se nourrit de riz, de fruits, il ne boit que de l’eau, il couche sur le plancher, il dort peu, il travaille sans cesse. Son corps ne semble pas compter. Rien ne frappe en lui, d’abord, qu’une expression de grande patience et de grand amour »

மகா கவி :

வாழ்க நீ எம்மான்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

நன்றி திண்ணை

———————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s