செட்டியார் சரக்கும் பேராசிரியர் க. பஞ்சாங்கமும் : வளரும் எழுத்தாளர்களுக்கு!
ஒர் ஆணோ பெண்ணோ பண்பில், நலனில் தன்னையொத்த, தன்னைப் புரிந்துகொள்கிற எதிர் பாலினத்துடன் இணைசேர்கிறபோதுதான், பாலின பயன்பாட்டினை எட்டுகிறான் அல்லது எட்டுகிறாள். படைப்பும் அத்தகையதுதான். தனக்கான தன்னைப் புரிந்துகொள்ளகூடிய வாசகன் அல்லது வாசகி அதற்குக் கிடைக்கவேண்டும், அப்படிக் கிடைக்கிறபோதுதான் அப்படைப்பும் தனது பிறவிப் பயனை அடைகிறது.
தமிழ்ச் சூழலில் படைப்பு அங்கீகரிக்கப்பட என்பதைக் காட்டிலும் அங்கீகரிக்கப்படாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. செட்டியார் மிடுக்கா சரக்கு மிடுக்கா ? என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். படைப்பை பொறுத்தவரை சரக்கைப்பற்றிய அக்கறையுடன் நுகர்ந்து பாராட்டுக்கிறவர்கள் இங்கு குறைவு, மேற்குலகிலும், வட அமெரிக்காவிலுங்கூட படைப்பிலக்கிய விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளபட்ட எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் குறைவு.
நீங்கள் அங்கீகரிக்கபட என்பதைக் காட்டிலும் அங்கீகரிக்கப்படாமல் போவதற்குப் பல காரணங்களுண்டு. சக எழுத்தாளரிடம், சகக் கட்டுரையாளரிடம், சகக் கவிஞரிடம் சக மொழிபெயர்ப்பாளரிடம் தொலைபேசியில் பாராட்டுதலைப் பெறலாம், அவரும் நீங்களுமாக தனித்திருக்கிறபோது ஒருவரையொருவர் பாராட்டி மகிழலாம். ஆனால் அதே௳னிதர் நாமற்ற பொதுவெளியில் நமது படைப்புகுறித்து பேசுவது அரிது. அதேவேளை பிறர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிற நாம், நமது நண்பர்களின் படைப்புத் திறனை, பிற ஆற்றல்லை அவரை ஊக்குவிக்கின்றவகையில் நேரடியாகவோ, அவரில்லாத பொதுவெளிகளில் பாராட்டியுள்ளோமா எனத் தெளிந்து பேசி இருக்கிறோமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
அடுத்து நண்பர்கள் அல்லாத பிற மனிதர்களிடம் அடையாளம் பெறுவது எப்படி ? முதலாவது உபாயம், இயற்கைச் சிகிச்சைமுறை : நமது நிறம், சாதி, பொருளாதாரநிலை, குலம், கோத்திரம் போன்றவை எளிதில் பிறரிடம் அனுதாபத்தைப் பெற்று அடையாளம் நல்கும். பிறகு இருக்கவே இருக்கின்றன செயற்கை வழிமுறை அதாவது நவீன மருத்துவ சிகிச்சை : நம்மை நாமேகொண்டாடிக்கொள்ளுதல் உதாரணமாக புத்தவெளியீடு, நம்மைப்பற்றிய கருத்தரங்கம், திறனாய்வு, சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள மனிதர்களுடனான புகைப்படம், சாக்ரடீஸ்போல தெக்கார்த் போல சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்வது கூடுதல் பலம். சில பட்டிமன்ற பேச்சாளர்கள் நியூயார்க்கில் ஒர் கூட்டத்தில் என்று பேசுவதுபோல ஹெமிங்வேயுடன் பேசிக்கொண்டிருந்த போது, மாப்பசான் சிறுகதைகளில் எனக்குப் பிடித்தது என நாமும் எழுதலாம், நண்பர்களை பயமுறுத்தலாம். தவறினால் இலக்கிய மகா சக்கரவர்த்திகள் அரியணையில் வீற்றிருக்கிறபோது கைகட்டி நிற்கும் தொழில் நுட்பமெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். இவையெல்லாம் பந்திக்குமுந்துவதற்கான எளிய வழிமுறைகள்.
இருந்தும் பதிப்பகம், குழு அரசியல், உங்கள் பக்கத்தில் நிற்பவர் யார் போன்ற காரணிகள் குறுக்கே நிற்கலாம்.
சரி எனக்கு இதெல்லாம் போதாதே எழுத்தைமட்டும் நம்புகிறேனே நான் அங்கீகாரம் பெற என்ன வழி, எனக் கேட்கிறீர்களா ? எழுதுங்கள், எழுதிகொண்டே இருங்கள். நேற்று எழுதியது நிறைவைத் தரவில்லை என்ற மனத்துடன் எழுதுங்கள். நம் எழுத்தில் ஏதோ குறை இருக்கிறது அறியப்படாத தற்கு அதுவொன்றே காரணம் எனக்கருதி உழையுங்கள். விமர்சனம் எதுவென்றாலும் ஏற்றுகொள்ளுங்கள். எந்தப்படைப்பும் சிலரால் விரும்பக்கூடியதாகவும் வேறு சிலரால் வெறுக்கத் தக்கதாகவும் இருக்கும். ஒரு படைப்பை எல்லோரும் விரும்பினாலோ அல்லது வெறுத்தாலோ காரணம் எதுவாயினும் அது படைப்பல்ல தயாரிப்பு. சிலர் உங்களை மட்டம் தட்ட விமர்சனம் செய்வார்கள், சிலர் ஆஹா ஓஹோவென்பார்கள் இரண்டையும் சந்தேகியுங்கள். நிரபராதிகளின் எதிர்காலம் சீக்ஃப்ரிட் லென்ஸ் எழுதிய நாடகம். சூழ்நிலைகள் மனிதர்களை நிரபராதிகளாவும், குற்றவாளிகளாவும் எவ்வாறு உருமாற்றம் செய்கின்றன என்பதை எளிய நாடகத்தில் ஆசிரியர் மேடையேற்றி இருப்பார். இதே நாடக்த்தை நீங்களோ நானோ எழுதினால் ஒன்றுமில்லை என போகிற போக்கில் சொல்லக்கூடிய மனிதர்கள் அதே நாடகத்தை ஒரு விஐபி எழுதினால் படைப்புலகின் பிரம்மா என வர்ணித்து வாயைச் சுழற்றுவார்கள். இவ்ற்றையெல்லாம் பெருட்படுத்தவேண்டாம். காரியம் எதுவென்றாலும் மனதை முழுமையாகச் செலுத்தி ஈடுபாட்டுடன் செய்தால் உரிய பலனுண்டு, எழுத்தும் அதிலொன்று. செட்டியார் மிடுக்கா எனப்பார்க்காமல் செட்டியார் சரக்கின் தரத்தைப் பார்க்கிற பேராசிரியர் க பஞ்சாங்கம் போன்றவர்கள் இவ்வுலகில் ஒன்றிரண்டுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் நான் அடையாளம் பெற்றேன். நீங்களும் பெறுவீர்கள். பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்காக அன்றி உண்மையாக, முழுமையாக வாசியுங்கள். சோர்வின்றி எழுதுங்கள்.