எம். எஸ் மறைவு

சற்று முன்புதான் இறந்த தகவலை அறிந்தேன். அவரை அறிந்த பலருக்கும்  பெரும் இழப்பு.  ‘வணக்கம் துயரமே’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்பு நூலுடன்  அவருட னான அறிமுகம் தொடங்கியது. நல்ல படைப்பிலக்கிய ரசனையுள்ள மனிதர்களில் எம்.ஏஸ் ஒருவர். கி.அ. சச்சிதானந்தத்தைப் போலவே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும், பரந்த ஆழமான வாசிப்பு, ரசனை அவரிடமுண்டு. சுரா வை எனக்கு நேரிடையாகப் பரிச்சயமில்லை. அக்குறையைப் போக்கியவர் எம். எஸ். இரண்டொரு முறை அவரிடம்  நாகர்கோவில் சென்ற போது உரையாடி இருக்கிறேன்.  நாம் சொல்வதெல்லாம இதுவரை தாம் அறிந்த தல்ல கேட்டதல்ல என்பதுபோல குறுக்கீடின்றி அனைத்தையும் பொறுமையாக செவிமடுப்பார். ஆனால் « என்முன்னால் அமர்ந்திருப்பது இமயம்,  நான் வெறும் கூழாங்கல் » என்ற எண்ணம் எனக்கு அடிக்கடித் தோன்றும்.  தமது அபிப்ராயங்களைக் கருத்துக்களை மிகவும் தயக்கத்துடனேயே தெரிவிப்பார்.  அவர் தெரிவிக்கிற யோசனைகளை மறுப்பதற்கு எனக்குத் தைரியம் காணாது, காரணம் காலச்சுவடுப் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல்  நூலிலேயே அவரது அருமை எனக்குப் புரிந்திருந்து. ‘காஃப்காவின் நாய்க்குட்டி’    நாவலுக்கு முதல் பாராட்டு அவரிடமிருந்து தான் கிடைத்தது.  போனவருடம் அவரைச் சென்று சந்தி த்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும்   நண்பர் கண்ணனிடம் பேசும்போதெல்லாம் எம். எஸ்ஸை சந்திப்பதற்கேனும் நாகர்கோவில் வரவேண்டுமென சொல்வேன். எனக்கு அப்படியொரு கொடுப்பினையில்லை என்று இப்போது நினைக்கிறேன்.

ஒரு மரணத்தை மையமாகக் கொண்டு  அண்மையில் சிறியதொரு நாவலை எழுதியிருக்கிறேன். விரைவில் அது நூலாக வெளிவரவுள்ளது. அந்த  நூலை சுராவிற்கும் எம். எஸ்சிற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதை எம்.எஸ்  படிக்கவேண்டுமென்று ஆசைபட்டேன்.  சந்தியா பதிப்பகத்தில் கொடுத்திருப்பதால், நூல் வெளிவந்ததும் ஜனவரியில் ஒரு பிரதியை  நாகர்கோவிலுக்குச் சென்று அவர் கைகளில் கொடுக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.

அன்னாரின் மறைவு காலச்சுவடுக்கு மட்டுமல்ல, தமிழ் படைப்பிலக்கியத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s