மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

                   

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி )

 

ரஷ்யப்புரட்சிக்கு  வயது   நூறு ஆண்டுகள்.  புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று   நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு கூர்வதில்லை. எப்போது ஸ்டாலின் ரஷ்யப் புரட்சி தினத்தை தன்னை முன்னிலைப் படுத்தும் தினமாகப் பார்க்கப் பழகினாரோ, லெனின் கிராடு இனி எப்போதும்போல செயிண்ட் பீட்டர் பர்க் என எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றே இனி மறக்கப்படவேண்டிய  நிகழ்வாக கோடிகாட்டப்பட்டது. கடைசியாக ரஷ்யப் புரட்சி வைபவ நினைவூட்டல் வேண்டாமென உத்தியோகபூர்வமாக அரசு அறிவிக்கவும் அது உறுதியானது. புரட்சி  தினத்தில், லெனின் அருங்காட்சியகத்தை பார்க்க மைல் கணக்கில் வரிசையில்  நின்ற முன்னாள் சோவியத் யூனியன் காலம் இன்றில்லை.இன்றைய இரஷ்ய இளைஞர்கள், லெனினை ஏற்றுக்கொள்ளத் தயார், ஆனால் ஸ்டாலினை ஏற்கத் தயாரில்லை. போல்ஸ்விக்குகளால் கொலையுண்ட ஜார் மன்னர்  இரண்டாம்  நிக்கோலஸ் இரஷ்ய நாட்டு கிழக்கு மரபுவழி கிறித்துவ திருச்சபையினரால் புனிதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இனி அவர் புனிதர் நிக்கோலஸ். ரஷ்யர்களில் 28 விழுக்காட்டினர் திரும்பவும் ஜார் மன்னர் ஆட்சிக்கு ஆதரளிக்க தயார் என்கிறார்களாம். இந்நிலையில் அதிபர் புட்டின், லெனினை அண்மையில் கடுமையாக விமர்சித்திருப்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளது.

 

இந்த நிலைக்கு யார் காரணம் ? 

இதற்கெல்லாம் எகாதிபத்தியத்தை குறைகூறமுடியாது, எந்தப் பிரச்சினைக்கும் முதற்காரணம் நாம் என்பது உணரப் படாதவரை, தனிமனிதனோ, இனமோ, ஒர் இயக்கமோ அடைய வேண்டிய குறிக்கோளை அடைய முடியாது. வெற்றிக்கு நாம்  காரணமெனில்,  அடையும் தோல்விக்கும் நாம் காரணம். இப்பிரச்சினையில் மார்க்ஸைக்கூட விமர்சிக்கிறவர்களுண்டு. கார்ல் மார்க்ஸ்  நவீன உலகின் மிகப்பெரிய சிந்தனாவாதி, அவரது மேதமைக்கு ஈடு இணையில்லை,  என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. அவர் ஒரு பூர்ஷ்வாவாக இருந்த போதிலும் சம காலத்திய  அறிஞர்கள் கவனத்திற்கொள்ளாமல் அலட்சியம்  செய்த,  இங்கிலாந்து  நாட்டுத் தொழிற்புரட்சி  பிரச்சினைகளின் தீவிரத்தை அவர் உணர்ந்திருந்தார். உழைத்தும் வறுமையில் உழன்ற ஆலைத் தொழிலாளர்களின் கொடூர வாழ்க்கைதன்னில்  அவர் கொண்டிருந்த பரிவையும்  உதாசீனப்படுத்திவிடமுடியாது.  எனினும் ஒரு சிலர் சுட்டும் குறைகளிலும் உண்மையில்லாமல் இல்லை.

 

கார்ல் மார்க்ஸ்  தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பொருளியல், அரசியல் கட்டுரைகளென சஞ்சிகைகளில் எழுதி  பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். 1845 ஆம் ஆண்டு பாரீஸில் ஜெர்மன் பதிப்பாளர் ஒருவருடன்,  தாம் இதுவரை பத்திரிகைகளில் எழுதிவந்த  சிந்தனைகளின் அடிப்படையில் ஒரு நூலை (அரசியல் மற்றும் பொருளியல் விமர்சனம்) எழுதுவதென ஒப்பந்தம் செய்துகொண்டார். பதிப்பாளர் இளைஞர், தொழிலுக்கும் புதியவர். ஒப்பந்த த்தில் மார்க்ஸ் கையெழுத்துப் பிரதியை ஒப்படைக்கும் தேதியைக் குறிப்பிடத் தவறிப்போனார்கள். உடல் நிலை, சரியானத் தகவல்கள் கைவசமில்லை போன்ற காரணங்களால் பதிப்பிக்கும் காலம் இழுபட்ட து. மார்க்ஸ் எழுத உட்கார்ந்த  நேரத்தில் அவருக்குப் பொருளாதார  நெருக்கடி, பதிப்பாளர் முன்பணம் ஏதும் கொடுத்துதவ முன் வரவில்லை. அவருடைய நண்பர் நண்பர் எங்கெல்ஸ் இல்லையேல் இன்று மூலதன நூல் இல்லை. 1859ல் மேற்கண்ட விமர்சன நூலுக்கு  முன்னுரை எழுத உட்கார்ந்தபோது, எதைப்பற்றியெல்லாம் அ ந் நூலில் பேசுவதென வரையறை செய்துகொண்டிருக்கிறார். 1866 இறுதியில் ஒரே  நூலாக வெளிக்கொண்டுவருவது இயலாதென உணர்ந்திருக்கிறார். திட்டமிட்ட பகுதிகள் ஒவ்வொன்றையும் தனித்தனி  நூலாக வெளியிட த் திட்டம். அந்த வகையில் அவர் காலத்திலிலேயே வெளிவந்த து முதல் பகுதி மட்டுமே. மார்க்ஸ் இறந்தபின் அவர் முடிக்காதிருந்த இரண்டாவது பகுதியை யும், மார்க்ஸ் கைவசமிருந்த தாக நம்ப ப் படும் தகவல்களை ஒப்பேற்றி மூன்றாவது பகுதியையும் எங்கெல்ஸ் வெளியிட்டார். அவரும் இறந்தபின் கார்ல் கௌட்ஸ்கி 1895ல் நான் காம் பாகத்தைக்கொண்டுவந்தார்.  கார்ல் மார்க்ஸ் ஒப்பந்தம்போட்ட காலத்திலேயே எழுத உட்கார்ந்திருந்தால் அவர் மனதை முழுமையாக விளங்கிக்கொண்டிருக்க முடியும். இ ந் நூல்கள், மேற்குலக குறிப்பாக இலண்டன் தொழிலாளர்கள் பிரச்சினைகளின் அடிப்டையில் எழுதப்பட்டதென்ற உண்மை ஒரு பக்கம். தொழிலாளர் வர்க்கம், தொழில் முதலீட்டாளர்களால் மட்டுமிமின்றி,  சமூகம், காலம்காலமாய் ஏற்றுக்கொண்ட நெறிமுறைகள், சமயம், மனிதரின் இயற்கைக் குணங்கள் என்று பல முதலாளிகளால்  சுரண்டப்பட்டவர்கள் என்ற உண்மை இன்னொரு பக்கம்.

அனைத்திற்கும் மேலாக மூலதனம் யாருக்காக எழுதப்பட்ட தோ, அந்த அடித்தட்டுமக்களோ, சுரண்டப்பட்டத் தொழிலாளர்களோ புரிந்துகொள்ளக் கூடியதல்ல. உழைப்பை அதிகம் அறிந்திராத, மேடை, எழுத்து, அரசியல் என்று இயங்கிய, இயங்கும் அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை மட்டுமே பெரிதும்  நம்பும் சிந்தனைக் களஞ்சியம் அது. பிரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்ட போது, விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளை எளிமை படுத்தப்பட்டதாகவும், பல பல பகுதிகளை வேண்டாமென ஒதுக்கியதாகவும் சொல்வதுண்டு.  இன்று உலகின் பலபகுதிகளிளும் புரிந்துகொள்ளபட்டுள்ள மார்க்ஸியம் அந்தந்த பிரதேச மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட மூலதன நூலின்  அடிப்படையில்  புரிந்துகொள்ளபட்ட மார்ல்ஸியமேயன்றி, மார்க்ஸ் ஜெர்மன் மொழியில் எழுதிய முயுலதன நூலின்  மார்க்ஸியம் இல்லை, என்ற விமர்சனமும் உண்டு.

ரஷ்யப் புரட்சி மறக்கப்பட வேறுகாரணங்களென்ன ?

வரலாற்றில் முதன் முறையாக பொதுவுடமை ஆட்சியை லெனின் பெட்ரோகிராட் என ரஷ்யமொழியில் அழைக்கபட்ட செயின்ட் பீட்டர்ஸ் பர்கில் 1917 நவம்பர் 7 ல் கொண்டுவந்தார். மார்க்ஸ் மொழியில் சொல்வதெனில் ப்ரொலெட்டேரியன் புரட்சியினால் அடைந்தது. பிரெஞ்சு பஸ்த்தி சிறை உடைப்பு நிகழ்வோடு ஒப்பிடப்படும் ‘குளிர்கால அரண்மனை மீட்பு ‘, வெகுசனக் கொந்தளிப்பிற்குச் சான்றாக முன்வைக்கப்பட்டது.  ஜார்மன்னர்களில் ஈவிரக்கமற்ற ஆட்சியும், மாற்றத்தை கொண்டுவர நினைத்த ஜனவாயகவாதிகள் பலவீனப்பட்டிருந்ததும், புரட்சியின் வெற்றிக்கு உதவின என்பதையும் மறந்துவிடமுடியாது. உலகெங்குமுள்ள காம்ரேட்டுகள் ரஷ்யப் புரட்சியை மறக்காமல் இருப்பதைப்போலவே, ரஷ்யக் காம்ரேட்டுகளுக்கும் புரட்சிபற்றிய  நோஸ்டால்ஜியாக்கள் நிறையவே இருக்கின்றன. பெருவாரியான ரஷ்யர்களுக்கு  ரஷ்யப் புரட்சி  சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்த து என்ற  வருத்தம் இருக்கிறது.

கோதுமை, பெட் ரோல் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பிற ஐரோப்பிய  நாடுகளைவிட மேம்பட்டிருந்த ரஷ்ய நாடு 1922லிருந்து பின்னடைவைச் சந்திக்க லெனின் காரணமானார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. ஒரு கட்சி ஆட்சிமுறை, தீவிர மார்க்ஸியக் கோட்பாடு போன்றவை  உடமைப் பறிப்புக்கு வழிவகுத்து  உடமையாளர்களை அனாதைகளாக தெருவில் நிறுத்தியதும், அதிகாரத்தைக் கட்டிக் காப்பதில் செலுத்திய அக்கறையை  போல்ஷ்விக்குகள் உற்பத்தியில் காட்டாததும்  நாட்டைப் பாதித்தது.

அடுத்த தாக போல்ஷ்விக் தலைவர்கள் சொத்துடமையாளர்களை மட்டுமல்ல, கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், அறிவியல் அறிஞர்கள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரை பிற நாடுகளுக்கு புகலிடம் கேட்டு ஓடவைக்கும் சூழ் நிலையை ஏற்படுத்தினார்கள். பொறுப்பிலிருந்த பலரும்   கல்வி, திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களில்லை. தலைவர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள், கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்தவர்கள் அல்லது அப்படி நடித்தவர்களே  நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர்.

மக்களால் தேர்வுசெய்யபட்ட பிரதி நிதித்துவ சபையை  ஆரம்பத்திலேயே (1918)  கலைத்து, தாங்கள் மக்கள் விருப்பத்திற்கு எதிரானவர்கள் என்பதை த் தெள்ளத் தெளிவாகப் போல்ஷ்விக்குகள்  கூறியிருந்தனர், அதன் காரணமாக  தங்கள் வாக்குரிமையைத் திரும்பப் பெற 1991வரை ரஷ்யர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  புரட்சியின் எதிரிகள் என்ற பெயரில் தங்களை விமர்சித்தவர்களைத் தண்டிக்க, கொல்ல,  NKVD  என்ற காவல்துறை, மற்றும்  செம்படை வீரர்கள் துணையுடன் நட த்திய அராஜகத்தையும் ரஷ்யர்கள் மன்னிக்கத் தயாரில்லை. இறுதியாக ஜெர்மன் ஜன நாயக சோஷலிஸ்டுகள், வைமர் குடியரசு இரண்டிற்கும் எதிராக லெனினும் ஸ்டாலினும் எடுத்த நடவடிக்கைகள் மறைமுகமாக இட்லர் ஜெர்மன் அரசியலில் களமிறங்க காரணம் ஆயிற்று. பிறகு என்ன  நடந்த து என்பதை  நாம் அறிவோம். இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய  நாடுகளுக்கு  நாஜிகளிடமிருந்து விடுதலை என்ற பெயரில், ஸோவியத் மயமாக்கலில்  ரஷ்யா இறங்கியதன்பலனாக சமேலும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அதை மேற்கு நாடுகளும் வேடிக்கைப் பார்த்தன. ஜெர்மன் பாசிசத்திற்கு எதிராக  தோள்கொடுத்த சோவியத் யூனியன் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றால் என்ன ? என்பது மேற்கு நாடுகளின் அன்றைய நிலைப்பாடு.

 

இறுதியின் ரஷ்யப் புரட்சி உலக  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என்ன ?

மார்க்ஸியத்தை பெர்லின் சுவர் இடிபாடுகளில் தவறவிட்டு லெனினிய  ஸ்டாலினிய சர்வாதிகாரச் சிந்தனையை, தங்கள் எதிரே தலைநிமிர்ந்தவர்களையெல்லாம் கொல்லும் கலையை , மாவோவின் சீனா,  போல் போட்டின் கம்போடியா, ஆப்ரிக்க தென் அமெரிக்க தலைவர்களுக்கும் கற்றுக்கொடுத்த து  போல்ஷ்விக்குகளே.  இன்றைக்கும் வடகொரியா, மியான்மார், துருக்கி, எகிப்தென,  சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதோ ஒருவகையில் எதிரொலிக்கவே செய்கிறது.

——————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s