வெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -(தொடர்ச்சி) – க. பஞ்சாங்கம்

வெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும்  -(தொடர்ச்சி)

க. பஞ்சாங்கம்

(காக்கைச் சிறகினிலே மார்ச் 2017 இதழில் வெளிவந்துள்ள  கட்டுரை. நண்பரின்  அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

 

முதலாளித்துவம் மக்கள் தொகையும், உற்பத்திக் கருவிகளும், சொத்துக்களும் பரவலாகப் பரவிக் கிட க்கும் நிலையை எடுத்துக் காட்டிவிட்டு, மக்கள் கூட்டத்தை(நகரம் என்ற பெயரில்) ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது ; உற்பத்திச் சாதனங்களையும் கையகப் படுத்தியுள்ளது ;  சொத்துக்களை ஒரு சிலர்  கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்க இயலாத விளைவாக அதிகாரமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே அது தனக்கெனத் தன் (பணவெறி) நலனுக்கேற்பச் சட்டங்கள், வரிவிதிப்புகள், அரசாங்க நிறுவனங்கள் என உருவாக்கி, சுயேச்சையான எதையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, ஒரே அரசாங்கம், ஒரே சட்டத்தொகுப்பு, ஒரே சுங்கவரி,(ஒரே மொழி ஒரே மதம், ஒரே பண்பாடு)முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைத்துக்கொண்டது என்று  முதலாளித்துவத்தின் கோர முகத்தைப் படம் பிடிக்கிறது, பொதுவுடமை அறிக்கை. சமீபத்தில் ‘சாம்சாங்’ கம்பெனியின் சேர்மனை கொரிய நாட்டு உள்துறை கைது செய்துள்ளது. தனக்கேற்றவாறு சட்ட வரைவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது உறுதியாகியுள்ளது. தனது மூலதனக் குவிப்பிற்கு முதலாளித்துவம் எதையும் செய்யும் : செய்துகொண்டும் இருக்கிறது. எனவேதான் பொதுவுடைமை அறிக்கை இப்படிச் சொல்கிறது :

  • முதலாளித்துவ சமூகத்திலுள்ள உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேகரிப்பதில்லை; சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை.

ஊழல் செய்து, சொத்தைக் குவிப்பது ஒன்றே வாழ்வின் இலட்சியமாக முதலாளித்துவம் இயங்குவதால், தனது இந்த லட்சியத்தை வாழ்வின் பொதுவான லட்சியமாக அனைவரும்கொள்ளும்படியாக தனது மறைமுக விளம்பர உத்திகள் மூலம் மக்களை வடிவமைத்து விடுகிறது. விளைவை வாழ்வெனும் பன்முகத்தில் பறந்து திரிந்து திளைத்து வாழ்தல் என்பதை மறந்து, பணவேட்டை என்ற ஒற்றைத் தன்மைக்குள் வாழ்வெனும் பிரமாண்ட வெளியை சுருக்கிச் சுருக்குப்பையில் போட்டு நம் கையில் கொடுத்துவிடுகிறது முதலாளித்துவம்.

இத்தகைய மூலதனக் குவிப்பிற்கு முதலாளித்துவம் கையாளும் தாரக மந்திரம் என்பது சுதந்திரமான வணிகம் ; சுதந்திரமான பண்ட பரிவர்த்தனை என்பதுதான். முதலாளித்துவ அகராதியில் சுதந்திரம் என்பதற்குப் பொருள் இதுதான். பொதுவுடமை அறிக்கை இப்படிச் சொல்கிறது :

« துறக்கவொண்ணாத, எழுதிவைக்கபட்ட, எண்னற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாக ‘சுதந்திர வணிகம்’ எனும் ஒரேயொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது »

இத்தகைய சுதந்திரமான வணிகம் என்ற ஒன்றில்தான் உலக வளங்களை எல்லாம் சுருட்டி ஒரு சிலரின் மூலதனமாக க் குவித்துக்கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்கிக்கொண்டுள்ளது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைஉஎனும் வலிமை மிக்கப், பீரங்கிகளைக்கொண்டு சீன மதில் சுவரைப் போன்ற தடைச் சுவர்களையெல்லாம் தகர்த்தெறிகின்றது. முதலாளித்துவத்தின் அதிகாரமையமான ஐரோப்பா தனது விவசாயிகளுக்கு70% க்கு மேல் மான்யம் கொடுத்து விவசாயப் பொருட்களை பெரும்பெரும் விவசாய எந்திரங்களின் துணையோடு உற்பத்திச்செய்து மலிவான விலைக்கு உலகச் சந்தைக்கு கொண்டுவருகிறது. அதே நேரத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுகொடுக்கும் விவசாய மானியங்களைப் பல்வேறு ஒப்பந்தங்கள் மூல நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. விளைவு, உற்பத்திச்செலவு அதிகமாகும்போது உள்நாட்டுப்பொருள்களின் விலை அதிகமாகிவிடக்கூடியச்சூழலில், உள்நாட்டு உற்பத்தியே இனித் தேவையில்லை என்ற நிலைக்குத் தள்ளுகிறது சுதந்திரமான முதலாளித்துவ வணிகம். அரசாளுவதென்பது தனக்கு வரிகட்டும் மக்களுக்கான வாழ்வின் தரத்தை உயர்த்துவதற்குப் பாடுபடுதல் என்ற நிலையிலிருந்து விலகி, உலக முதலாளிகளுக்கான வணிகச் சந்தையை எந்த நிபந்தனையுமின்றி திறந்து விடுவதற்குக் கமிஷன் வாங்கிக்கொண்டு உல்லாச வாழ்வு வாழும் முகவர்களாக உள்நாட்டு அரசியல்வாதிகளைச் சீரழிப்பதும் இந்த முதலாளித்துவத்தின் மூலதன வேட்டைதான்.

இத்தகைய சூழலில் மார்க்கண்டேய கட்ஜு முன்வைக்கும் நிலை : இருக்கின்ற சுரண்டும் அமைப்பையே ஒழித்தும் அழித்தும்புதிய அமைப்பைக் கட்டும் ‘புரட்சியை’ நட த்திக்காட்டுவதென்பது முதலாளித்துவ அமைப்பை அறவே துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் மார்க்சியம் முன்வைக்கும் « சொத்துக்குவிப்பை ஒழிப்பது » என்கின்ற சமதர்ம சமுதாயத்தைச் சமைத்துக் காட்டுவதில்தான் இருக்கிறது. 1969 இல் அண்ணாதுரை மறைவுக்குப்பிறகு, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசாட்சி, அரசியல் வாழ்வு என்பன « சொத்து சேர்ப்பது » என்கிற ஒரு புள்ளியிலேயே சுழன்றுள்ளது. அந்த த் தீமையைத்தான் இப்பொழுது அனைத்து மட்டத்திலும் அனுபவிக்கிறோம். இந்தச் சொத்துக் குவிப்பு மனப்பான்மை அருவருக்கத் தக்க அளவிற்கு அதன் உச்சத்தை அடைந்திருக்கும், ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

இத்தகையச் சூழலில் வர்க்க அரசியலை முன்னெடுத்து « மனித வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்ட வரலாறுதான் » எ,ன்ற பொதுவுடைமை அறிக்கையின் முழக்கத்தை ஓங்கி  ஒலிப்பதுதான்சரியான வழிமுறை. அதற்கான வரலாற்றுக் காலக் கட்டம் கனிந்துவந்துள்ளது. வலது இட து, மூன்றாம் அணி என முன்னூறு அணிகளாகச் சிதைவுண்டு கிடக்கும் மார்க்சிய  தத்துவத்தின் அடிப்படையிலான அமைப்புகள் ஒன்று திரண்டு , மானுட த்தின்  மகத்தான வாழ்வை வெறுமனே ‘சொத்து குவிப்பது’ என்ற ஒற்றை மனப்பான்மைக்குள் தலைகுப்புறத் தள்ளி மனித வாழ்வை மட்டுமல்ல, பிரமாண்டமான இயற்கையையே சீரழித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பின் கோர முகத்திற்கு எதிரானப் போர்க்குரலை வளர்த்தெடுக்க முயல்வ துதான் சரியான திசையை நோக்கிய பயணமாக இருக்கும். மார்க்ஸ் அன்றைக்கே முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் நெருக்கடியைச் சுட்டிக்காட்டியுள்ளார் :

« தனது மூலதனக்குவிப்பு வெறியினால் மாய வித்தைகள் செய்த முதலாளித்துவ சமூகம், இப்போது தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டி எழுப்பிகொண்டு வந்த வேதாள சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திர வாதியின் நிலையில் இருக்கிறது »

 

இத்தகைய நிலைமையில்தான், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பயந்துபோன முதலாளித்துவம் « முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவோம் » என்ற பதாகையின் கீழ் ஒன்றுதிரண்டு பல்வேறு உத்திகளை கடைபிடிக்க முயன்று வருகிறது. ஆனால் இங்குள்ள புரட்சிகர சக்திகளே நிலைமையைத் தெளிவாக, நுட்பமாக அலசி ஆராய்ந்து அறிந்துகொள்ளும் திராணியைக் கொண்டு இருந்தாலும் ஒன்று திரண்டு போராட்டத்தை வரவழைத்து முன்னெடுத்துச்செல்லும்  போர்த்தந்திரங்களில் பின்தங்கிக் கிடக்கிறது. தீமைக்கு எதிராகப் போராடுவதென்பது பிரெஞ்சுப் புரட்சிபோல, மெரினாப் புரட்சிபோல ஒரு கட்டத்தில்  தன்னெழுச்சியாகப் பெரும் போராட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்; சமூக வரலாற்றின் அறம் அப்படிப்பட்ட துதான் என்றாலும், அதற்கான அடித்தளங்களை அமைத்து, முளைத்துக் கிளைகளாக விரிந்து பரவும் விதைகளை விதைத்துக் கொண்டே இருப்பது புரட்சிகார சக்திகளின்  கடமை. தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமூக சீரழிவிற்கான காரணிகளையும், அதற்கான தீர்வுகளையும், நான் அப்படித்தான் பார்க்கிறேன். வெறுமனே ஊடகங்கள் தனிமனிதர்களை முன்னிறுத்தித் திரைப்பட காட்சியாக்கி ரசனைகளை விதைத்து ரசிக்க வைப்பதுபோலக் கொடூரமானது வேறொன்றுமில்லை ; இதையும் முதலாளித்துவத்தின் நுண்ணரசியல் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் மக்கள் மத்தியிலிருந்து வரவேண்டும் ; அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவர்கள்தான் புரட்சிகார சக்திகள். அங்காங்கே பிரதேச அளவிலுள்ள பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவது என்பதையும் தாண்டி ஒட்டுமொத்தமாக வர்க்க அரசியலை முன்வைத்து, என்பதை நோக்கி இயங்க வேண்டும். சமூகத்தின் அறம் சார்ந்து  சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் அங்காங்கே இல்லாமலில்லை. ; அவர்களுக்கெல்லாம் ஒரு ‘களம்’  அமைத்துக்கொடுத்துப் பெரும் சக்தியாகத் திரளுவதை நோக்கி நகர வேண்டும் ! தீமையை அழிக்க வேறுவழி ஏதும் இருப்பதாக த் தெரியவில்லை.

———————————————–

\

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s