புரையோடிய நிலமும்
வற்றிய குளமும்
துப்பிய வெயிலில் …
துவளும் ஆட்டைத்
தூக்கி நிறுத்தினான பூசாரி
மஞ்சள் நீர்த் தெளித்து
பூச்சரத்தைக் கழுத்திலும் இட்டான் !
சிலிர்த்தன ஆடுகள்
தலையை உயர்த்தின !
விழிகளில் தெரிவது
நன்றியா ? புரட்சியா ?
ரௌத்திரத்துடன்
பூசாரியைப்பார்த்தாள்
தொடைக்கட்டியுடன்
உட்கார்ந்திருந்த அம்மன் !
புரிந்தவன்போல
அரோகரா !வென கூக்குரல் செய்தான் !
தரை விழுந்த பின்னும்
மூடாத விழிகள் !
ஆத்திரத்துடன்
பூசாரியைப் பார்த்தாள்
அவை ஆடுகளம்மா !
புரட்சிகள் அறியாதவை என
விளக்கப் போதாத பூசாரி
இரண்டாவது முறையாக
அரோகரா ! என்றான்.
– நாகரத்தினம் கிருஷ்ணா