மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சனங்கள்-10: ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவல் குறித்து -க. பஞ்சாங்கம்

 வலியை உற்பத்தி பண்ணும் எழுத்து-க. பஞ்சாங்கம்

panchu

மொழி அறிந்த மனிதராகப்பட்டவர் எழுத்தாளராக மாறும் புள்ளி பிறரைப் பார்ப்பதுபோலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும்போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண்கொண்டு பார்க்காமல் பிறர் கண்கொண்டும் பார்க்க வேண்டும். பாரீஸ் பண்பாட்டோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக்கொள்வதற்கான சூழலில், அவரின் எழுத்து மொழி தமிழாக இருந்தாலும், புனைவெழுத்து உலகம் தழுவி நீட்சிபெறுவதை அன்னாரின் நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்தப் புனைவும் செக்நாட்டைச் சேர்ந்த பிராஹா, பிரஞ்சு நாட்டைச் சார்ந்த பாரீஸ், கொல்மார், ஸ்ட்ராஸ்பூர், ஜெர்மனியைச் சார்ந்த பிராங்பர்ட், ஈழத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, இந்தியாவின் வடக்குப் பகுதியான புதுடில்லி, ரிஷிகேஷ், தென்பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி, கன்னியாகுமரி என உலகம் தழுவிய ‘களத்தில்’ கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பருவ காலம் – பொழுதுகள் என்ற முதற் பொருளும், தெய்வம், உணவு, மரம், விலங்கு, பறவை, ஆறு முதலிய கருப்பொருட்கள் பலவும் உலகம் சார்ந்ததாக அமைந்துள்ளன. எடுத்துரைப்பின் இந்தப் புதிய பின்புலங்கள் அது பேசும் புதியபுதிய வடிவங்களுக்குக் கூடுதலான அழகைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. எப்பொழுதுமே எழுத்தின் அழகியல் அது பேசும் பொருளில் மட்டும் இல்லை, புதிய களங்களைக் கட்டமைக்கும் வடிவ நேர்த்தியிலும்தான் குடிகொண்டுள்ளது.

இவ்வாறு உலகம் தழுவிய பின்புலத்தில் மனித வாழ்வின் அபத்தங்கள், ஆண் – பெண் உறவின் ஊடே வினைபுரியும் அசிங்கங்கள், மரணம் குறித்த மனித உயிர்களின் விளக்கங்கள், ஈழப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வாழநேர்ந்தாலும் போட்டி, பொறாமை, காமக் குரோதம், சூழ்ச்சி என ஒன்றிலும் சிறிதும் குறையாமல் ஒரு சிறிதும் மாறாமல் வழக்கம்போல் தரமற்ற வாழ்க்கையையே எவ்வாறு நடத்த முடிகிறது என்ற வியப்பில் எழும் எழுத்துக்கள், பிரான்ஸில் வாழ ஆசைப்பட்டு, ஏதாவதொரு பிரான்ஸ் நாட்டுக் குடிமகளைத் திருமணம் முடித்துக்கொண்டு, அவளின் ‘நாய்க்குட்டியாக’த் தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் புதுச்சேரி வாழ் தமிழர்களின் துக்கம், ஈழத்திலிருந்து பிரான்ஸில் முறையற்றுக் குடியேறியதால் வழக்கில் சிக்கிக்கொண்ட ஈழத் தமிழர்கள், நீதிமன்றத்தில் கூறும் வாக்குமூலங்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் அனுபவங்களைச் சித்திரிப்பதன்மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், ‘அங்கே இங்கே’ என்று விவரிக்கும் தன்மை என நாவல் பன்முகமாக விரிகிறது; வாசகர்களையும் தன்னோடு உரையாடியே தீருமாறு தனது எடுத்துரைப்பு மொழிமூலம் சாதித்துக்கொள்கிறது.

புலம்பெயர்ந்து வாழநேர்ந்த ஒருவர்க்குள் தன் மண்சார்ந்த நினைவுகளும் விசாரணைகளும் கூடிவந்து வினைபுரிவதைத் தவிர்க்க முடியாது. நாவலாசிரியர் காஃப்காவின் நினைவுகளோடு உலகம் தழுவிய ஒரு சூழலில் நாவலை நடத்திக்கொண்டு போனாலும், தன் மண்சார்ந்த தமிழர்களின் வாழ்வு இருக்கும் நிலை குறித்து உள்ளம் நோகாமல் இருக்க முடியவில்லை. இன்று உலகப் பரப்பு முழுவதும் தமிழர்களாக அறியப்பட்டவர்கள் படர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் சீக்கியர்கள்போல, வங்காளிகள்போல, குஜராத்திகள்போலச் சென்ற இடங்களில் பெருமைப்படும்படியான சுயமரியாதை வாழ்வு வாழ்கிறார்களா? படைப்பாளி நேரில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் புண்பட்ட மனத்தைத் தன் எழுத்தின் ஊடே பல இடங்களில் பதிவுசெய்துகொண்டே போகிறார்:

கிரகங்களிடம் தங்கள் தலை எழுத்தை ஒப்படைத் திருக்கிற தமிழர்கள் (ப.223)

தமிழ் படிச்சவரு புண்ணியக்கோடி. அவர் குதிரைபோல் கனைத்தார்; வேறொன்றுமில்லை; அவர் சிரித்தது அப்படி. காபி அடித்துப் பேரு வாங்கும் கூட்டம் (ப. 225)

ஒரு விஷயத்தை நிறைய வார்த்தைகளிட்டுப் பேசுகிறார்கள் (ப.248)

தமிழர் பேச்சில் போலியும் பகட்டும் அதிகம் (ப142)

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் பார்வையில் தமிழ் வாழ்வின் தரமற்ற தன்மை பளிச்செனப் புலப்படுத்துகிறது. இந்தப் பார்வையின் நீட்சியாக, ‘அங்கே, இங்கே’ என்று ஒப்பிட்டுப் பார்க்கும் எழுத்து முறையும் நாவலில் இடம்பெறுவதைப் பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மனத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரே ஒரு சான்று:-

ஒரு மரணத்தால் ஏற்படும் துக்கமோ மகிழ்ச்சியோ பிறருக்கேயன்றி, அம்மரணம் நிகழ்ந்த உடலுக்கில்லை என்கிறபோது எதற்காக அனுபவித்திராத மரணத்தை நினைத்து ஒருவர் கவலையுறவோ அஞ்சவோ வேண்டும்? தெரிதா முதல் எபிகூரஸ் வரை சொல்வதும் இதுவே. மரணத்தினால் ஓர் உயிரின் இருப்பு முடிவுக்கு வருகிறது என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது… கிழக்கில் வேறு சிந்தனை இருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது, எடுத்த தேகம் இறவா நிலையைப் பெறுவதற்காக, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை அடைவதற்காக…(252-253)

புலம்பெயர் வாழ்வு தரும் வலிகளையும் சலுகைகளையும் சிக்கெனப்பிடித்துக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் படைப்பாளி, எழுத்தின் நுட்பம் அறிந்தவராதலால் பலவிதமான சோதனைகளையும் நாவலுக்குள் செய்துபார்க்கிறார். அவற்றில் தலையாயது ஒரு கணம் தோன்றும் மாயத்தோற்றங்களை நூலேணிபோலப் பிடித்துக்கொண்டு மேலேறும் எழுத்துமுறை சிறப்பாகக் கூடிவந்துள்ளது. விவேகசிந்தாமணியில் ஒரு காட்சி: பொழில் விளையாட்டிற்காகக் காட்டிற்குள் செல்லும் தலைவி, நாவல் மரங்கண்டு காலிழுக்க அடியில் போய் நிற்கிறாள்; ஒரு பழம் உருண்டுதிரண்டு கர்ரேரென்று கிடக்கிறது; கையில் எடுக்கிறாள்; ஆனால் அது தேனுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு. தலைவியிடம் ஒரு கணம் தோன்றிய அந்த மாயத் தோற்றத்தைப் பிடித்துக்கொண்டு கவிஞர் மேலேறுகிறார்; அந்த வண்டு தலைவியின் உள்ளங்கையைத் தாமரைப் பூவின் இதழ் என்று அறிவது போலவும், விழித்துப் பார்த்தால் அவள் முகம் முழுமதிபோன்று தெரிவதால், தாமரைப்பூ உடனே கூம்பிவிடுமே, நாம் பூவுக்குள் மாட்டிக்கொள்வோமே என்று பயந்து அவசரம்அவசரமாக ‘றெக்கையை’ விரித்து விர்ரென்று பறந்து போனதாம்; அதைப் பார்த்த தலைவி மீண்டும் ஒரு கணம் மாயத்தோற்றத்திற்கு உள்ளாகிறாள்; ‘பறந்தது வண்டோ பழமோ’ என்று சொல்லும்போது கவித்துவத்தின் அழகியலுக்குள் நாமும் வண்டாய் மயங்கிவிடுகிறோம்.

இந்தப் படைப்பு நுட்பத்தை நாவலாசிரியர், பிராஹாவில் சுற்றுலாப் பயணிகளோடு பயணியாக, ‘இளம் மஞ்சள் வெயிலில்’ சுற்றி வரும்போது அனை வரும் ஒரு கணம், ஓரிடம் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கும் நாய்களாகத் தோற்றம் அளிக்கிறார்கள்; அந்தக் கணத்தைப் பயன்படுத்திக்கொண்டு நூலேணியில் ஏறுகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எளிமையாக அதிகாரம் செலுத்துவதற்கான ஒருமுறையில் மற்றவர்கள் தங்களிடம் ‘நாயாக’ நடந்துகொள்ள வேண்டுமென நனவிலி மனத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரு பாவனையில் எழுத்தை அற்புதமாக நடத்திச் செல்கிறார்.

துணை, நட்பு, உறவு, அன்பு என்ற பதாகையின் கீழ் புதைந்துகிடக்கும் அதிகார வேட்கையின் அம்மைபோட்ட முகத்தை, போலான முறையில் நாவலா சிரியர் புனைவெழுத்தாக்கி உள்ளார். இந்த மாயத்தோற்றத்தைப் பயன்படுத்தி “விலங்குகள் வேற, மனிதர்கள் வேற இல்லை” என்றும் உரையாடுகிறார்.

“மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்துகொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா? அவைகளுக்கு வேறு மொழிகள் இருக்கின்றன. வேறுவகையான உரையாடல்கள் இருக்கின்றன” (292) என்று எழுத்து வேகமாக நகரும்போது வாசிக்கின்ற வாசகர் உட்பட எல்லோரையும் காஃப்காவின் ‘நாய்க் குட்டிதான்’ என்ற தீச்சுட்டு, ஒரு கணம் மரத்துப்போய்க் கிடக்கும் நாம் உயிர்ப்புறுகிறோம்.

எலும்பின் மஜ்ஜைக்காக ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொள்ளும் காஃப்காவின் நாய்கள்தாம் நாமும் என்ற பார்வை நாவல் முழுவதும் உள்ளோடிக் கிடந்தாலும், வெளிப்படையாக அது புலப்படுவது ஈழப் போராளியாய்ச் செக்குச் சுமந்து வேறு வழியின்றி பாரீஸில் இருக்கும் தமக்கையின் கணவனாகிய மத்யூஸிடம் வந்து மாட்டிக்கொள்ளும் போராளி ‘நித்திலா’ பற்றிய பக்கங்களில்தான். தனது மனைவி கமலாவின் தங்கை நித்திலாவை அடைவதற்காக மத்யூஸ் போடுகிற திட்டங்களும் நடத்துகிற கபட நாடகங்களும் நிகழ்த்துகிற கொடுமைகளும்

மஜ்ஜைக்காக நாயைவிடக் கேவலமாக நடந்துகொள்ளும் மனிதர்களின் பேரவலத்தைப் படம் பிடிப்பவையாக அமைந்துள்ளன. இவ்வாறு எல்லாவிதமான கயமைத் தனத்தையும் பயன்படுத்தி அடையப்பட்ட மஜ்ஜை, அடைந்த அந்தக் கணத்திலேயே விஷமாகி விடும் யதார்த்தத்தை நாவல் வலுவாக முன்வைக்கிறது. ஈழப் போராட்டமானாலும், நீதிமன்ற நடவடிக்கைகளானாலும், ஒருத்தரையொருத்தர் நாயாய் நடத்த முயலும் ஆண் – பெண் உறவானாலும், கன்னியாகுமரி முதல் பிராஹாவின் வெல்ட்டாவா நதிவரை அலைந்து திரியும் சாமியாரானாலும் கவர்ச்சி காட்டி அங்கும் இங்கும் அலைபாயவிட்ட அனைத்தும், கைப்பற்றிய அந்தக் கணத்தில் மனிதர்களுக்கு எதிரானவைகளாக அப்படியே தலைகீழாக மாறிவிடுகிற நெஞ்சைச் சுடும் மெய்மையினால் பிறக்கும் வியப்பின் வெளிப்பாடுதான் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்த நாவல்.

ஒரு நல்ல எழுத்து, வாசகருக்குள் புதைந்துகிடப்பதை அவருக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் ‘வலியை’ உற்பத்தி பண்ணிவிட முயற்சிப்பதுதான். இந்தநாவல் அதைச் செய்கிறது

நன்றி : காலச்சுவடு பிப்ரவரி 2016 இதழ்

———————————————————————

காஃப்காவின் நாய்க்குட்டி
நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் & 629 001
பக்கம்: 312
விலை: ரூ.295

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s