ஓர் அசல் படைப்பிலக்கிய வாதி நேர்க்கோட்டில் நடக்க முயன்று தோற்பவன். அ ந் நேர்க்கோடு அவனைச் சர்ந்த சமூகம் ‘தனக்கன்று பிறர்க்கு’ எனப் போட்டுவைத்திருக்கும் கோடல்ல, தனக்கென்று நித்தம் நித்தம் அழித்தழித்துப் போட்டுக்கொள்ளும் கோடு. மீறுதல் அதற்காகத் தன்னை வருத்திக்கொள்ளுதல் என்கிற சுய விதிக்குள் வருவது. செந்தில் பாலா என்ற இளைஞரும் தனக்கென கோடுகளைக் கிழித்துக்கொண்டு அல்லாடுபவராக இருக்கிறார். எவ்வித முகப்பூச்சுகளுமற்று அகப்பசிக்கு கவிதை சமைக்கும் இந்த இளைஞர்களால் தமிழ்க்கவிதை யின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
மேற்குலகில் கலை கலைக்காக என்ற குரல் எழலாம். ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக உள்ள நாட்டில் , இறந்தபிணத்தை எடுத்துச் செல்லவும் சாதிபார்க்கும் ஒரு நாட்டில் சமூகப் பிரக்ஞையற்று ஒருபடைப்பிலக்கியவாதி இருக்க முடியுமெனில் அவன் நேர்மை குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பு குறித்து மேலே செல்வதற்கு முன்பாக இளைஞர் செந்தில் பாலாவுக்கு வைக்கும் வேண்டுகோள், தனி மனித மயக்கத்தில் ஆழ்ந்திடாமல் அவ்வப்போது சகமனிதனைப் பற்றிய பிரக்ஞையுடனும் எழுதுங்கள்.
கலை கலைக்காகவா ? அல்லது கலை மக்களுக்காகவா ? என்ற விவாதம் மேற்கத்தியர்களுக்கே கூட இன்று அலுத்துவிட்ட து. ‘எனக்குத் தொழில் கவிதை’ என் கிறவர்கள் என்ன செய்கிறார்கள் ? வெகுசனப் புரிதலுக்கு உட்படாத அல்லது சாதாரணக் கண்கள் காணப் போதாதக் காட்சியை மொழிபெயர்க்கிறார்கள். சார்த்ரு ( Jean Paul Sartre) « ஒரு கலை படைப்பின் பிரதான நோக்கம் நமது வாழ்க்கையின் மிகமுக்கியமானவற்றை கவனத்திற்கொள்ளச் செய்வது » என் கிறார். கலை, படைப்பிலக்கியம் என இயங்கும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் இக்கூற்று பொருந்தும். ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?‘ என இக்கவிதைத் தொகுப்பில் ஓரிடத் தில் செந்தில் பாலா கேட்பது கூட அந்தப் பொருளில்தான்.
அண்மையில் இந்தியா வந்திருந்தபோது புபுதுச்சேரி, கடலூர் சிதம்பரம், கும்பகோணம் எனப் பேருந்து நிலையங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. எல்லா பேருந்து நிலையங்க்களிலும் கூச்சமின்றி மனிதர்கள் கால் நடைகள்போல மூத்திரம்போய்கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் சிவப்பு புடவை அணிந்த பெண்கள் கூட பேருந்தை சாலை ஒரத்தில் நிறுத்திவிட்டு எவ்விதக் கூச்சமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பார்க்க நேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிலர்தான் பதற்றத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்து. அக்காட்சி என்னுடன் பயணம் செய்த பலருக்கு ப் பழகியது என்பதை அவர்களில் இயல்பான செயல்பாடுகள் உறுதிசெய்தன. எனக்குங்க்கூட இவை உறுத்தாதவையாக இருந்துள்ளன- அதாவது – ஆண்கள் மட்டுமே இதற்குக் காப்புரிமை பெற்றவர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவரை. அன்றையதினம் அதிசயம்போல பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அனேகர் செந்தில் பாலா போல ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?’ எனக் கேட்பவர்களாகத்தான் இருந்தார்கள்.
கூட்டம் கூட்டமாக அவசரகதியில் எந்திரத் தனமாக இயங்கும் இவ்வுலகில் கவிஞன் மாத்திரம் எதையோ காதில் வாங்கியபடி நிற்கிறான். எதையோ கண்டு மெய்சிலிர்க்கிறான். அகத்தில் திரையிட்டு தேம்பி அழுகிறான், சிரித்து மகிழ்கிறான் அல்லது அருவருப்புடன் முகம் சுளிக்கிறான். அவ்வனுபவத்தை மொழிபடுத்தினால் அவன் கவிஞன், தவறினால் பைத்தியக்காரன் என்பதற்குக் கீழ்க்கண்ட இச்சிறிய உருவகக் கவிதை நல்ல உதாரணம்:
« இன்றைய எனக்கான பகல் நேரம்
ஜன்னலில் எட்டிப் பார்த்தபடி காத்திருப்பது கண்டு
தாழ்ப்பாளுக்கு ஓய்வளித்து கதவு திறக்க
வெப்பத்தின் வலிபொறுக்காது
புரண்டுகொண்டிருந்தன
நேற்றைய குப்பைகள் »
« இன்றைய எனக்கான பகல் நேரம் » என்று எழுத எவருக்கும் சாத்தியம். ஆனால் « வெப்பத்தின் வலிபொறுக்காது புரண்டுகொண்டிருந்தன நேற்றைய குப்பைகள் » என்று எழுத வெகுசனப் பார்வையிலிருந்து விலக்கப்பட்ட்ப் பார்வையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
‘கணக்கின் கணக்கு ‘
கீழ்க்கண்ட கவிதைக்கு செந்தில் பாலா பெயர் சூட்டவில்லை. என்னுடைய சௌகரியத்திற்காகவும் உங்க்களுடைய சௌகரியத்திற்காகவும் ‘கணக்கின் கணக்கு’ என்ற பெயரை கவிதைக்கு வைத்தேன். கவிதைப் பனி உறைந்த நீர்படுகையை நினைவூட்டுகிறது. ஆழமற்ற நீர்பரப்ப்பு போல அமைதி பூசிய கவிதை. கால்களை, சில்லிட்ட நீரில் வைக்கிற்போது பாசியும் நொய்மணலும் சேர்ந்தொரு கலவை முழகாலைத் தொட்டு , முதுகுத் தண்டைக் குறுகுறுக்கச் செய்கிற கவிதை, வாழ்க்கையை வரவு செலவு கணக்கில் வைக்கிற மனிதம் பற்றிப் பேசுகிறது.
எல்லாவற்றிர்க்கும் அல்லது எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது
மௌனத்துக்குள்ளும் முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கைப் பார்ப்போருக்குள்ளுங்கூட
ஒரு கணக்கு இருக்கிறது
அனைவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக்கொண்டே இருக்கிறது
எல்லாவற்றிர்க்கும்
கணக்குப் பார்க்க முடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது
உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்
ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துபோகின்றன
அனாயசமாக
கணக்கு
அது ஒரு கணக்கைப்போட்டுவிட்டு
மிக இயல்பாகப் போய்கொண்டிருக்கிறது.
இங்கே மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு கணக்குடன் முகமன் கூறி , ஏதோவொரு கணக்கில் கட்டியணைத்து, ஏதோவொரு கணக்கின் அடிப்படையில் பிரிவையும் தீர்மானிக்கின்றனர். எல்லோருக்குமே விடைசரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை. ஆனால் நமக்கும் மேலே கணக்கோ வேறொரு கணக்குடன் நமது விதியை எழுதிக்கொண்டிருக்கிறது.
எல்லாபடைப்பாளிகளிடம் காணக்கூடியதுதான். கவிஞன் நதியோ, நிலாவோ, தெற்கத்தி காற்றோ அல்ல. மனிதன். இச்சமூகத்தில் ஒருவன். உங்கள் அண்டைவீட்டுக்காரனாக இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் வலப்பக்கம் அமர்ந்து கோப்பு பார்ப்பவனாக இருக்கலாம். ஏன் உங்கள் சகோதரனாகவோ சகோதரியாகவோ கூட இருக்கலாம். உங்களிடம் கவிதையொன்று எழுதியிருக்கிறேன் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்கிறபோது, தவறாமல் இரண்டொரு நொடிகள் ஒதுக்கி அக்குழந்தைக் கட்டியது மணல்வீடென்றாலும் கோட்டையெனக் கூறப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு கவிஞனைப் போற்றுவது மரம் வளர்ப்பது போன்றது
« கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காடும்பொருட்டு
கவிதைக்குறித்தும் கவிதைக்களம் குறித்தும்
பேசத்தொடங்கிவிடுகிறேன்
எதிரிலிருப்பவர்கள் கவனம்
இங்கில்லை என்பதிலிருந்துதான்
தெரிந்துகொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக்கொண்டிருக்கிறேன் என்று »
செந்தில் பாலாவின் இக்கவிதையைப் படிக்க நேரும் எவரும் இனி ஒருபோதும் கவிதையையோ கவிஞனையோ அலட்சியம் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்.
‘அடைதலும் அடைத்தலும்’ இத்தொகுப்பிலுள்ள ஒரு முக்கியமான கவிதை. கவிஞனாக தனது இருத்தலைக் கற்பித்துகொள்வதால் எழுத நேரும் கவிதை. செந்தில் பாலா இயல்பை முன் நிறுத்திப்பாடிய கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. இக்கவிதை அவர் இயல்பே கவிதையாக ஒளிர்வதுதான் என்பதைப் பறைசாற்றும் விதத்தில் இருக்கிறது.
அடைதலும் அடைத்தலும்
« எல்லோரையும் போல வாரச்சந்தையில் வாங்கிவிட்டேன்
குருவிகள் வளர்ப்பது பெரும் பாவமென்று
எனக்குத் தோன்றவில்லை
அப்படிப்பார்த்தால் வளர்ப்பதென்பதே பாவம் தான்
……………………….
……………………………
வளர்க்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே வளருகின்றன
மாடுகளும், ஆடுகளும், கோழிகளும் கூட
வளர்த்தல் வேறு, வளருதல் வேறு புரிகிறது என்றாலும்
யாரும் வளருவதே இல்லை
…………………………
………………………….
கூண்டுக்குள் அடைபட்டுக்கிடப்பதை
பொறுக்க முடியாமல் பறக்கவிட்டுவிட்டேன்
ஆனாலும்
எங்களை யாரேனும் விட்டாலும் கூட
எங்கே செல்வோம் பறக்க. »
வினாக்குறியின்றி முற்றுபுள்ளிவைத்து கேள்வியையே பதிலாக முடித்து இச்சமூகத்தைப் பட்டியாக அல்லது தொழுவமாகவும் மனிதர்கள் வளர்ப்பு விலங்குகளாகவும் கண்டுவருந்துகிற கவியுள்ளம் இறுதியில் எங்களை யாரேனும் விட்டாலுங்கூட எங்கு செல்வோம் பறக்க எனக் கவிஞர் நமது சர்பாக போதாமையில் வருந்துகிறபோது, நம்மால் இயலக்கூடியது ஒன்றேஒன்றுதான் சமூகத் தொழுவத்தில் அடைபட்டு கிடப்பது.
« இறுதியாக
எதையாவது எழுதாமல்
தூங்கமுடிந்ததில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்குக் கிடையாது » என்றும்
« இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடி தூங்கிக் கொண்டிருக்கிறேன் » என்றும் செந்தில்பாலா சொல்கிறார்.
எனவே விழித்த தும் மறக்காமல் கவிதை எழுதும் பழக்கத்தை செந்தில் பாலா தொடர்வது தமிழ்க் கவிதை உலகிற்கு பயன் தரும் என்பதை நெருக்கமான நண்பர்கள் நினைவூட்டவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
_____________
மனிதர்களைக் கற்றுகொண்டு போகிறவன்
ஆசிரியர் : செந்தில் பாலா
பதிப்பாளர் : நறுமுகை, 25 /35 தேசூர்பாட்டை, செஞ்சி -605 202