மூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேசபாண்டியன்

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
ந. முருகேசபாண்டியன்

Naa.mu
பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s