அ. இலக்கிய சொல்லாடல்கள்
1. அபத்தம்
அபத்தம் அல்லது l’absurde என்ற பிரெஞ்சு சொல்லை பிரெஞ்சு படைப்பாளியும் சிந்தனாவாதியுமான அல்பெர் கமுய் தன்னுடைய The Myth of Sisyphus (1942) என்ற நூலில் மெய்யியல் சிந்தனையாக வைத்திருந்தார். இச்சிந்தனை உலகின் நிச்சயமின்மையைக் கவனத்திற்கொண்டு உருவானது. அபத்தமும், நிச்சயமின்மையும் ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ குணத்தைக்கொண்ட சிந்தனைகள். ழான் போல் சார்த்த்ருவை பொறுத்தவரை தம்மைப் பெரிதும் ‘நிச்சயமின்மை’ சிந்தனையோடு (Being and Nothingness(1943) இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். எனினும் ‘அபத்தம்’ என்ற சொல்லை முன்பே சார்த்த்ருவும் அவருடைய இலக்கிய பங்காளி ‘அல்பெர் கமுய்’ யும் அவரவர் படைப்புகளில் கையாண்டிருக்கிரார்கள். சார்த்த்ரு எழுதிய ‘Nausea’ (1938) நாவலிலும், அல்பெர் கமுய் எழுதிய ‘The Stranger'(1942) நாவலிலும் ‘அபத்தம்’ என்ற சொல்லாடல் வருகிறது. ‘அல்பெர் கமுய்’ யைப் பொறுத்தவரை ‘உலக நடப்போடு ஒட்டி ஒழுகாதது, நம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தல், விளையும் கசப்புணர்வு அனைத்தும் ‘அபத்தம்’. இவர்கள் இருவரின் நாவல்களில் இடம்பெறும் கதைமாந்தர்களை மேற்குலகில் வேறுசில படைப்பாளிகளின் எழுத்திலும் காணமுடிகிறதென்றாலும், பரிவை நிராகரிக்கிற விரக்தி மனநிலை; சமூகத்துடன் ஒட்டுதலின்மை அதன் அபத்தங்களை அடையாளப்படுத்தியும், அவற்றுக்கு மாற்றாக உலக இயல்பிற்கு பொருந்தாத (தன்னிலிருந்தே தன்னைப் பகிஷ்கரித்துக்கொள்கிற) சமயம், வரலாறு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு சிந்தனையை இட்டு நிரப்புதல் என்கிற புதிய தேடலுடன் அபத்தம் கையாளப்படுவது இவர்களிடம் மட்டுமே நிகழ்கிறது.
சார்த்ருவின் ‘Nausea’ கதை நாயகன் Antoin Roquentin ஓர் அதிசயமான உயிரி, கடந்த காலத்திலிருந்து பறிக்கப்பட்டவன், இருத்தலில் மட்டுமே விழிக்க நேர்ந்தவன், இழந்த காலத்தை திரும்பவும் சந்திக்க வாய்ப்புகளற்றவன், இனி அவனுக்கும் அவனைக் கட்டமைத்த சாரத்திற்கும் (essence) எவ்வித பந்தமுமில்லை, எல்லாம் முடிந்தது. அல்பெர் கமுய் படைக்கும் மாந்தர்கள் எவ்வித கடப்பாடுமின்றி இருத்தலை தொடர்பவர்கள்; தற்காப்பற்ற காரியங்களில் இறங்குபவர்கள்; ஆதியந்தமில்லாத, கடவுளைக் காணமுடியாத ஓர் உலகில் துணிந்து காரியம் ஆற்றக்கூடியவ்ர்கள். அபத்தம் என்பதே அர்த்தத்தை, பொருளை, நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துவது. ஆக மொழிக்குறித்த நமது பார்வையையே புரட்டிப்போடுகிறது. சொல்லப்போனால் அபத்தம் என்பது “ஏதோ ஒன்று” அர்த்தத்தை இழந்து சக்கையாகிப்போவதால் உருவாவது அல்ல, அந்த ஏதோ ஒன்றை தேடுகிறபோது அதனைக் கண்டடைய முடியாமற்போகிற நமது இயலாமையால் உருவாவது.
ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?
வால்ஸ் கேட்:
பிரான்சு நாட்டில் நடப்பது அதிபர் ஆட்சி, இரண்டு கட்டகளாக நடக்கும் அதிபர் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற்வர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஐந்தாண்டுக்கு ஒரு முறை (அண்மைக்காலம் வரை ஏழு ஆண்டுகளாக இருந்தது) , அதிபரை நேரடி தேர்வுமுறையில் முடிவு செய்கிறார்கள். சோஷலிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரான்சுவா ஹொலாந்து (François Hollande) தற்போதைய அதிபர். இவருடைய கட்சியில் அதிபராக வருவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றிருந்த நபர் பாலியல் வழக்கில் சிக்கிக்கொள்ள அதிர்ஷ்ட்டம் இவரைத் தேடிவந்தது. கட்சியின் உட்கட்டதேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக எதிரெதிராக நின்றவர்கள்தான் ஹொலாந்தும், மனுவல் வால்ஸ¤ம்(Manuel Valls): முன்னவர் அதிபர், பின்னவர் பிரதமர்.
ஹொலாந்து பெரும்பான்மை மக்களின் வாக்கின்படி 2012ல் அதிபரானார். இவர் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. பிற நாடுகளில் நடப்பதைப்போலவே இவருக்கு முன்பு அதிபராகவிருந்த நிக்கோலா சர்க்கோசியின் எதிர்ப்புவாக்குகள் ஹொலாந்துவை அதிபராகத் தேர்வு செய்ய காரணமாயின. இவரும் பிற அரசியல்வாதிகளைப் போலவே வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அதிபர் ஆட்சி வழக்கத்தின்படி தமது கொள்கைகளை (?) நிறைவேற்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அணியிலிருந்து தமக்கிசைவான ஒருவரை பிரதமராக அதிபர் தேர்ந்தெடுப்பார். பிரதமர் தமது அமைச்சரவை சகாக்களை, அதிபரின் ஒப்புதலுடன் தேர்வு செய்வார். அதன்படி ஹொலாந்து அதிபர் தேர்தலில் வென்றதும் தனது கட்சியைச்சேர்ந்த ழான் ழாக் அய்ரோ (Jean-Marc Ayrault) என்பவரை பிரதமர் ஆக்கினார். 2014 மார்ச்வரை வண்டி ஓடியது. மக்களிடத்தில் அதிருப்தி பெருகியது சமாளிக்க அய்ரோவை நீக்கிவிட்டு, அப்போதைய உள் துறை அமைச்சர் மனுவல் வால்ஸை பிரதமராக்கினார்.
தற்போதையை கணிப்பின் படி பிரெஞ்சு மக்களுக்கு அதிபர் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. நாட்டின் எந்தவொரு அதிபரும் இதுநாள்வரை இப்படியொரு நம்பிக்கை இழப்பை எதிர்கொள்ளவில்லையென பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோஷலிஸ்டுகளுக்கு ஆதரவாக நிற்கிற இடதுசாரிகள்கூட ஹொலாந்தும் அவரது வழிகாட்டுதலில் நடக்கிற பிரதமர் ‘வால்சு’வினுடைய அமைச்சும் இடதுசாரிகொள்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர் . ஆளும் கட்சியினரின் ஒரு பிரிவினரும் (இதில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம்) இவர்களின் நடவடிக்கையை எதிர்ப்பதுதான் அதிபருக்குக் கூடுதல் தலைவலி. இந்நிலையில் தான் ‘வால்ஸ் கேட்’ பிரச்சினை கடந்த இரண்டுவாரங்களாக பிரெஞ்சு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டு அடங்கியது.
நான்காண்டுகளுக்கொருமுறை நடக்கும் ஐரோப்பிய காற்பந்தாட்டக் கோப்பைக்கான போட்டி இம்முறை 2016 ம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடக்க உள்ளது இது சம்பந்தமாக பேச பிரதமர் வால்ஸ் ஐரோப்பிய நாடுகளின் காற்பந்தாட்ட அமைப்பின் (UEFA) தலைவரைக்காண (ஜூன் மாதம் 6ந்தேதி சனிக்கிழமை) பெர்லின் சென்றார். இதற்கு அரசாங்கத்தின் விமானத்தை உபயோகிக்க வேண்டியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுபோலத்தோன்றும். ஆனால் எதிர்கட்சிகளும், பத்திரிகையாளர்களில் பெரும்பாலோரும், இடதுசாரிகளில் சிலர் உட்பட பிரதமரின் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணமிருக்கிறது.
முதலாவது காரணம் இதற்காக வால்ஸ் பெர்லின் செல்லவேண்டியதில்லை. பாரீஸிலேயே பிரதமர் நினைத்திருந்தால் UEFA தலைவரை சந்தித்திருக்க முடியும். UEFA தலைவர் மிஷெல் பிளாட்டினி பிரான்சு நாட்டின் முன்னாள் காற்பந்தாட்ட வீரர், அழைத்திருந்தால் பிரதமர் அலுவலகத்திற்கே வந்து அவரைச் சந்தித்திருப்பார். அன்றைய தினம் ஐரோப்பிய லீக் சாம்பியன் பெர்லினில் நடந்தததும் அதில் மோதிய இரு அணிகளில் ஒன்று ஸ்பெயின் நாட்டைசேர்ந்த பார்சலோனா என்பதும் ( பிரான்சு பிரதமர் மனுவல் வால்ஸ் பிறப்பால் ஸ்பெயின் நாட்டவர், குறிப்பாக பார்சலோனாவில் பிறந்தவர்) பார்சலோனா காற்பந்தாட்ட சங்கத்தின் பரம ரசிகர் என்பதும் கூடுதல் செய்திகள். பிரதமர் UEFA தலைவரைக் காணத்தான் சென்றார், ஐரோப்பிய லீக் இறுதிப்போட்டியைக் காண நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்தது என்பதை எவரும் நம்பத் தயாரில்லை, ஏனெனில் பிதமருடன் அவருடைய பிள்ளைகளும் ( இந்தியாவில் அதிபர், பிரதமருடன் அவருடன் தூரத்து உறவுகளெல்லாங்கூட அரசாங்க செலவில் பயணம் மேற்கொள்வது தப்பே இல்லை) லீக் போட்டியைக் காணச்சென்றிருக்கிறார்கள். பிரத்மர் வால்ஸ் ஏதேதோ காரணத்தைக் கூறி சமாளித்துப் பார்த்தார், எதிரான விமசனங்கள் குறைந்தபாடில்லை. இதுவரை காணாதவகையில் இடதுசாரி அரசின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்திருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்க வேறுவழியின்றி தம் பிள்ளைகளின் பயணச்செலவை (தன்னுடையதை அல்ல) அரசாங்க கஜானாவிற்குத் திருப்பி அளிப்பதாகக் கூறியிருக்கிறார். ஒருவாரத்திற்குப்பிறகு அவரது வீம்பைக் குறைத்துக்கொண்டிருந்தாலும் சோஷலிஸ்டுகள் அடுத்தமுறை ஆட்சியை பிடிப்பது கடினம்தான் என்கிறார்கள்.
——————–