மொழிவது சுகம் ஜூன் 6 -2015

விரல் குறைந்த மாட்டுத் தரகர்கள்

 

உலகமெங்கும் கோலோச்சுக்கொண்டிருக்கிற கொக்கோ கோலாவிற்குக்கூட வாடிக்கையாளரை நிரந்தரமாக்கிக்கொள்ள தொடர்ந்து மீடியாவில், விளம்பரத்தில் இடம்பெற்றாகவேண்டும். காம்ரேட்டுகள் உலகிற்கும் சரி, இது பொருந்தும். தமிழ் படைப்புலகும் இதற்கு விதிலக்கல்ல. ஒவ்வொரு சிற்றிதழுக்கும் குழு இருக்கிறது, படைப்பிலக்கியம் என்ற பெயரில் போற்றுவதும் தூற்றுவதும் இருக்கிறது. கிராமங்களில் இலக்கிய உரையாடல்கள், சந்திப்புகள் என்ற பெயரில் பல நேரங்களில் ஊசல் பொருட்களில் வாசனாதி திரவியங்களைச் சேர்த்து “சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி” என வாதிட நண்பர்களை வைத்திருக்கிறார்கள். மாட்டுத் தரகர்கள் ஒரு மாட்டினை விலைபேச தன் கையையும் எதிராளியின் கையையும் ஒரு துண்டால் மறைத்து, விரல்களைபிடித்து விலை பேசுவார்கள். ஒரு விரலுக்கு நூறு ரூபாய் என்று கணக்கு. எங்கள் ஊரில் வெங்கிட்டு என்ற மாட்டுத்தரகரை 900த்திற்கு மேல் பேரம் பேச தெரியாது எனக்கிண்டல் செய்வார்கள், காரணம் அவருக்கு இடது கையில் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தன. இந்த வெங்கிட்டுகள் தமிழ்ப் படைப்புலகிலும் இருக்கிறார்கள் என்பதை சென்னையில் நடந்த ஒர் நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.
அண்மையில் ஒரு எழுத்தாளரிடமிருந்து மடல் வந்தது. எழுதியவர் என் வீட்டுத் துணைவியார் நலனையெல்லாம் விசார்த்துவிட்டு “தமது சிறுகதைகள் பிரெஞ்சில் வரவேண்டும் என்று நினைப்பதாகவும் அதற்கு என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? எனக் கேட்டிருந்தார். இதுதான் முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் அவரிடமிருந்து இதுபோன்ற கடிதங்கள் வந்திருந்தன. இவரைப் போல பலருக்குத் தங்கள் படைப்பு பிரெஞ்சில் இடம் பெறவேண்டும் என்ற அவா இருக்கிறது. எனக்கு எழுதவும் செய்கிறார்கள். தவறில்லை. இயல்பான ஆசைதான், யாருக்கு இல்லை? பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு என்பது குறிப்பாக பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அந்நாவல் வெளிவந்த மொழியில் பெற்ற வரவேற்பினை யொட்டி ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ இடம் பெறுகிறது.. தமிழ்ச்சூழலில் அது நல்ல நூலாக இருந்தாலுங்கூட அதைப்பற்றி படைப்புலகம் சார்ந்திராத பிறர் பேசுவது குறைவு. தமிழ்ப் படைப்புகளை படைப்புலகம் சார்ந்திராதவர்கள் வாங்குவதும் குறைவு. இந்த எழுத்தாள வாசகர்களை நம்பியே தமிழ் படைப்புகள் இருக்கின்றன இந்நிலையில் பெரும்பாலான படைப்பிலக்கியவாதிகள் ” நீ என்னைப்பற்றி எழுது, நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன், அல்லது நீ என்பின்னால் நில் நான் உன்னைப்பற்றி வலைப்பூவில் எழுதுகிறேன்” ” பரிசுக்கு ஏற்பாடு செய்கிறேன்” எனப் பரஸ்பர ஒப்பந்தத்துடன் செயல்படுகிறார்கள். எனவே நல்லப் படைப்பாக இருந்தாலுங்கூட, சந்தேகிக்க வேண்டியிருக்கிறது, தமிழ்ச் சமூகம் அப்படியொரு சூழைலை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. நீலக்கடல் நாவல் வெளியீட்டின் போது கி.பி. அரவிந்தன, புதுச்சேரியில் ஒருவர் பெயரைக்கூறி அவரைத் தெரியுமா? எனக்கேட்டார். தெரியாது என்றேன். இதென்ன புதுச்சேரியை சேர்ந்தவர் என்கிறீர்கள் அவரைத் தெரியாது என்கிறீர்கள் எனக்கூறி அவர் பெயரைத் தெரிவித்தார். நீலக்கடல் வெளியீட்டின்போது அவரைச் சென்று பார்த்தேன். வருகிற பத்திரிகையாளர்களுக்கு உறையில் வைத்து பணம் தரவேண்டும் என்றார். நான் பதில் பேசாமல் வந்துவிட்டேன். அண்மையில் ‘கா·ப்காவின் நாய்க்குட்டி நாவல் விழா செய்தி புதுச்சேரி நாளிதழ்களிலும் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த்த தமிழ்ச்சங்க தலைவரால் கிடைத்த விளம்பரம் அது, இல்லையென்றால் “கா·ப்காவின் நாய்க்குட்டி வெளியீட்டு விழா” வெளியில் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை ஆக பெருமாள் -பூங்குழலி தம்பதிகளுக்கு மீண்டும் நன்றி.

 

இந்தியாவிலிருந்து 28 மே திரும்பியிருந்தேன், பத்து நாட்கள் ஆகப்போகிறது. இங்கிருந்து போகிறபோது பல எழுத்தாளர்களைப் பார்க்கவேண்டுமென திட்ட மிட்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் எஸ். ராமகிருஷ்ணன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் தமிழவன், பாவண்ணன், ந. முறுகேசபாண்டியன், கி.அ. சச்சிதானந்தன் ஆகியவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும் என்ற ஆசையில் புறப்படுவதுண்டு. அது கைக்கூடுவதில்லை. மூன்றுவாரங்களை ஒதுக்கிப் போகிறபோது எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. போகிறபோதெல்லாம் வீடு பழுது பார்க்கின்ற வேலைகளில் கைவைப்பதால் அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை இதன் விளைவாக எழுத்துலக நண்பர்களைப் பார்க்க முடிவதில்லை. இந்தியாவில் நான்கைந்து மாதம் தங்கினால் நிறைய எழுத்தாளர் நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியும். இங்கும் கடைநிர்வாகத்தில் சிக்கலான நேரங்களில் எனது தலையீடு அவசியமாக இருக்கிறது. எனவே அதிகப்பட்சம் ஒருமாதத்திற்கு மேல் தங்க முடிவதில்லை. ஈரோது தமிழன்பன் வீடுவரைசென்று, “இந்த நேரத்தில் அவரைச் சந்தித்து தொந்திரவு செய்யவேண்டுமா?” எனத் திரும்பியதும் நண்பர் பஞ்சாங்கத்துடன் கூடுதலாக உரையாட வாய்ப்பு அமையவில்லை என்பதும் பெருங்குறை.

 

சில சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடந்தன நண்பர் பஞ்சாங்கம், நாயகர், தமிழ்மணி ஆகியோருடன் எனது கிராமத்தில் சில மணிநேரங்களைச் செலவிட்டோம். மறக்க முடியாத தருணம் அது. அதுபோல சென்னையில் தமிழவன் நண்பர் முத்துகிருஷ்ணனைச் சந்தித்தது, .

——————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s