கடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.
காலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.
தமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.
ஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.
பிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.
நண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.
நா.கிருஷ்ணா