மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s