1. சியாட்டல் சுர ம்
ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பெரியமகள் குடும்பம் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து சியாட்டலுக்கு குடிவந்துவிட, நாங்களு ம் இங்கு வரவேண்டியிருந்தது. வந்த மறுநாள் முதல் காய்ச்சல். எனதுபெரிய மகளுக்கு அமெரிக்க வாழ்க்கை என்றான பிறகு நான்கைந்து முறை அமெரிக்கா வர நேர்ந்திருக்கிறது, ஆனால் உடல் நல பாதிப்பு என்பது இதுதான் முதல். பிற மேற்கத்தியநாடுகள் எப்படியென்று தெரியாது, மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும் மலைக்கும் மடுவுக்குமான பேதம் உள்ளது. பத்துநிமிட வாகனப் பயணத்திற்குப் பின்னரே ஒர் இருபத்து நான்கு மணிநேர கிளினிக் . ரிசப்ஷனிலிருந்த பெண் என் ஜாதகத்தைக் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். கேள்வித்தாள்களைக்கொடுத்து நிரப்பச்சொல்லிவிட்டு பதவிசாகவிரல் நகத்தைக் கொறிக்க ஆரம்பித்திருந்தார். கேட்டிருந்த கேள்விகள் சில மன உளைச்சலுக்கு ஆளாக்கின என்றுசொல்லி வழக்குப் போடலாமா ? என்றுயோசனை. சுப்பிரமணியசுவாமியை உங்களுக்குத் தெரியுமென்றால் கேட்டுச்சொல்லவும். உங்கள் இன்சூரன்ஸையெல்லாம் பிரான்சுநாட்டில் பார்த்துகொள்ளுங்கள், எங்கள் கட்டணத்தைப் பைசாப் பாக்கியின்றி கட்டிவிட்டு டாக்டரைப் பாருங்கள் என ரிசப்ஷன் பெண் மொத்தத் தொகையையும் கேட்டுவாங்கிக்கொண்டாள்.
டாக்டர் கேட்ட முதற்கேள்வி அண்மையில் ஆப்ரிக்கநாடொன்றிற்கு சென்று வந்ததுண்டா ? இல்லை என்றேன். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என்று கேள்விக் கணைகளைப் பெருக்கிக்கொண்டுபோன சீன டாக்டர் மீது எனக்கு எரிச்சல் வந்தது. எனக்குத் தெரிந்து பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்துதான் மாலி நாட்டிற்குச் சென்றுவந்தார், எனது சுரத்திற்கு ஒருவேளை அவர் காரணமாக இருப்பாரென சந்தேகிக்கிறீர்களா டாக்டர் என்றேன், அதன் பிறகு கேள்விகள் இல்லை, ஒரு மாத்திரையைக் கொடுத்து விழுங்கச்செய்தார். பிரிஸ்கிரிப்ஷன் கைக்குவந்தது. வெளியில்வந்தபோது ரிசப்ஷன் பெண் 0.51 செண்ட்ஸ் பாக்கியிருக்கிறது என்றாள். எதற்கு என்றுகேட்டேன். டாக்டர்கொடுத்த மாத்திரைக்குஎன்றாள். அந்த நிமிடமே அல்பெர் கமுய்யில் ஆர ம்பித்து கார்ல் மார்க்ஸ்வரையிலான மதுரை வீரன்களை மனதில் வரித்துக்கொண்டு தீவிர காம்ரேட் ஆகி ஏகாதிபத்யத்தை எதிர்ப்பதென்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆமென் !
2. இரண்டு இளைஞர்கள் இரண்டு மார்க்கங்கள்
« je ne suis pas les héros, je suis Lassana Bathily »
ஒட்டடைக் குச்சி உருவம், இளமையும் ஆரோக்கியமும் கடிமனம் புரிந்த உடல், வயதுஇருபத்து நான்கு, பெயர் லஸ்ஸானா பதிலி (Lassana Bathily), மார்க்கம் இஸ்லாம். ஒன்றிர்ண்டு விழுக்காட்டினரை வைத்து ஒட்டு மொத்த சமுதாயத்தைக் குறைசொல்லகூடாதென என்னைப்போலவே நீங்களும் எண்ணுகிறீர்களெனில் நமது வாதத்திற்கு வலுசேர்க்கும் இளைஞர்.
ஷார்லி ஹெப்டோ கொலைகாரர்களை பிரெஞ்சு போலிஸார் சுற்றிவளைத்த அதே வேளை, பாரீஸ் நகரின் மற்றொரு பகுதியில் ஒரு யூதர் கடையில் நுழைந்த மற்றொரு கொலைகாரன் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் நால்வரைக்கொன்றுவிட்டு மற்றவர்களைப் பிணையக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொள்கிறான். அந்த யூதரின்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் லஸ்ஸானா ஆபத்தையுணர்ந்து வாடிக்கையாளர்களில் இரண்டுவயது குழந்தைஉட்பட பதினைந்துபேரை தந்திரமாக நிலவறையிலுள்ள ஒர் குளிர்பதனிட இடத்தில்வைத்து க் காப்பாற்றிப் பின்னர் பத்திரமாகஅவர்களை வெளியேற்றியிருக்கிறார். இந்த இளைஞரின் உதவியினாலேயே பொலீஸார் தாக்குதலை நடத்தி தீவிரவாதியைக்கொன்று பிற பிணயக்கைதிகளிமீட்டிருக்கிறார்கள்,
அவரை ஹீரோ எனச் சித்தரித்து எழுதும் பத்திரிகைகளுக்கு :
« என்னை ஹீரோ எனச் சொல்லவேண்டாம், நான் ல்ஸ்ஸானா அவ்வளவுதான் » -என்பது அவர் பதில்
« நீங்கள் யூதர்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் « என அவரைச் சிலர் விமர்சிக்கிறபோது, « நான் மனித உயிர்களையல்லவா காப்பாற்றினேன் » என அடக்கமாகப் பதில் வருகிறது.
களவாய் பிரான்சு நாட்டிற்கு வந்து கடந்த பத்தாண்டுகளாக தற்காலிக விசாவில் இருந்த இளைஞருக்கு 19-1-2015 அன்று முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரான்சு நாட்டு பிரதமர், உள்துறை அமைச்சர் இருவருமாகக் கலந்துகொண்டு பிரெஞ்சு குடியுரிமையை வ ழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள்
———————————————————————————————-