எடுத்துரைப்பியலில் கதைமாந்தர்களின் முக்கியத்துவம் என்ன? கடந்தகாலங்களில் கதைமாந்தர்கள் நமக்கு எவ்வித கற்பிதத்தை உருவாக்கினார்கள். தற்காலத்தில் கதை மாந்தர்களின் தன்மை என்ன? என்பதையெல்லாம் இதற்கு முந்தையை கட்டுரையில் பார்த்தோம். இனி இக்கதைமாந்தர்களின் உருவாக்கம் எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது? அதற்க்கென நியதிகள் இருக்கின்றனவா, இருந்தால் அவை என்னென்ன? என்பதை பேராசிரியரின் எடுத்துரைப்பியல் பற்றிய திறனாய்வின் இப்பகுதி நமக்கு விளக்கிச்சொல்கிறது.
கதைமாந்தர் உருவாக்கம்
“கதைமாந்தர் என்பவர் அரூபமான கதைக்குள் இருந்து கட்டமைக்கப்படுகின்ற ஒருவராவார்; இதை மாந்தர்களின் சாயல்களால் பின்னப்படும் வேலைப்பாடு என விளக்கலாம். ” என்கிறார் கட்டு¨லாசிரியர். அவரது கருத்துப்படி “கதைமாந்தர் உருவாக்கத்திற்கு ப் பயன்படுத்தப்படும் ஒரேவிதமான உத்திகளைப் பல்வேறுபட்ட எழுத்தாளர்கள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தக்கூடும். ஒரே எழுத்தாளர் ஒரே உத்தியைத் தன்னுடைய பல்வேறுபட்ட படைப்புகளிலும் பயன்படுத்தக்கூடும். மேலும் சில நேரங்களில் பல்வேறு உத்திகள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படலாம்.” (பக்.196 ந.இ.கோ)
எடுத்துரைப்பில் இடம் பெறும் மாந்தரை வடிவமைக்க இரண்டு அடிப்படையான பண்புக்கூறுகளை எழுத்தாளர்கள் கடைபிடிப்பதாக அறிகிறோம். முதலாவது நேரடியான பண்பு விளக்கம் இரண்டாவது மறைமுகமாகப் புலப்படுத்துதல். இவை இரண்டிற்கும் பொதுவான நான்கு பண்புகளும் சொல்லப்படுகின்றன.
அ. பெயரைச் சொற்களால் குறிக்கப்படும் தனிக்கூறு: உ.ம். அவன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருந்தான்.
ஆ. அரூபமான பெயற்சொற்களால் கட்டப்படும் பண்புக்கூறு: உ.ம். அவனுடைய நல்ல குணத்திற்கு எல்லையே கிடையாது
இ. இயலக்கூடிய வேறுவகையான பெயற்சொற்கள் கொண்டு கட்டப்படுவது: உ.ம். அவள் ஓர் உண்மையான சிறுக்கி.
ஈ. ஒருவகையான பேச்சுமுறையிலும் கட்டமைக்கபடும்: உ.ம். அவன் தன்னை மட்டுமே விரும்புகிறவன்.
1. நேரடியான பண்பு விளக்கம்:
இதில் கதைமாந்தரின் பண்புநலன் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தையும் கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
“மாதவி என்பவள் பலவிதமான கொள்கைகளையுடைய ஒரு இளம்பெண்ணாக இருந்தாள். அவளுடைய கற்பனை ஆற்றல் என்பது குறிப்பிட்டுக்கூறத்தக்க செயலாக்கம் மிக்கதாக இருந்தது.. அவளுடைய எண்ண ஓட்டங்கள் தெளிவில்லாத முறையில் சிக்கல் வாய்ந்த ஒர் தளத்தில் இயங்குவதாக இருந்தன.” ஆனால் இந்த வெளிப்படையான கூறலை முழுமையான வெளிப்படைக்கூறலாக நாம் கருதக்கூடாதென்கிறார். அவர் சொல்லும் காரணம் ” கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்தும் தன்மை வெளிப்படையாக இருந்தாலுங்கூட ‘நேரடியாகபண்பு விளக்கம் பெறுதல்’ என்ற வகைக்குள் எப்பொழுது அடங்குமென்றால், பனுவலில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு அவருக்கே உரிய அதிகாரத் தொனியோடு அமையும் போதுதான்” என்கிறார். மேற்கண்ட கூற்றை கதைசொல்லியைத் தவற வேறு மக்கள் பேசுவதாக வைத்துக்கொண்டால் “இந்த அளவிற்கு கனமும் முக்கியத்துவமும் அமையாது ” என்கிறார் நமது திறனாய்வாளர். எனவே ‘நேரடியான பண்பு விளக்கம்’ என்ற எடுத்துரைப்பு முறையானது ” காரண காரியத்திற்கு உட்பட்ட அதிகாரத் தொனியோடு கூடிய நிலையான ஒரு பதிவினைக் கதைமாந்தர் குறித்து உருவாக்கிவிடுகிறது” என்பது அவர் கருத்து. இத்தகைய முறையால் கதைமாந்தர் பற்றிய (கதை சொல்லி வாசகரிடத்தில் உருவாக்கும்) கருத்து இறுதிவரை குறைவதற்கு வாய்ப்பில்லை என்கிறபோதும் திறனாய்வாளர் அதை வலியுத்திச்சொல்ல தயங்குகிறார். காரணம் பனுவலில் அக்கதைமாந்தரின் பண்பை உணர்த்த எழுத்தாளர் கையாளும் பிற உத்திகள் பலவும் அம்மாற்றத்திற்குக் காரணமாகலாம் என்கிறார்.
2. மறைமுகப் புலப்படுத்துதல்
கதைமாந்தரின் பண்பு நலனை தெரிவிக்கும் இரண்டாவது முறை – மறைமுகமாக புலப்படுத்துதல். இதனை விளக்குவதற்கு முன்பாக நாவல் இலக்கியத்தின் தொடக்கத்தில் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை கதை மாந்தர்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டனர் என்பதை நினைவுகூறும் பேராசிரியர் ”நிகழ்காலத்தில் குறிப்பாக கூறுவதும்; முடிந்த முடிவாக எந்த ஒன்றையும் கூறாமல் விடுவதுதான் சிறந்த முறையெனக் கருதப்படுகிறது” என்கிறார்.
இம்மறைமுகப் புலப்படுத்துதலில் நான்கு வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன: அ. செயல் ஆ. பேச்சு இ.. சூழல் ஈ. துணைவலுவாகப் பயன்படும் ஒப்புமை.
அ. செயல்
இப்பண்புக்கூறு பனுவலில் கதைமாந்தரின் ஒரு செயல் மூலமாகவோ அல்லது அடிக்கடி அவர் ஈடுபடும் செயல்களின் மூலமாகவோ கட்டமைக்கப்படும் என்கிறார். “ஒரேதடவை நிகழும் செயல், அந்த கதை மாந்தரின் ஆற்றல் மிகு பண்பினை வெளிக்கொண்டுவந்துவிடும்….பெரும்பாலும் கதை மாந்தரின் மாறாத நிலையான பண்புக்கூறினை வெளிப்படுத்துகிற போக்கினை உடையதாக அமையும் ” எனவும் “இந்தச் (ஒரு) செயலினால் கூடிவரும் நாடகத் தன்மை பல தடவை நிகழும் செயல்களைவிட அதிகமாகவும் தரமான முறையிலும் மிக நுட்பமாக கதைமாந்தரின் பண்பினை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும்” என்கிறார்.
இச்செயல்கள் நான்குவகை படுகின்றன.
1. பொறுப்பாக செய்கிற செயல் – கதை மாந்தரால் நிகழ்த்திக்காட்டப்படும் ஏதாவது ஒரு செயல்
2. செயலை செய்யாது விடுதல் – கதைமாந்தரால் செய்யமுடியும் -ஆனால் செய்யாதிருத்தல்
3. ஆச்ந்து சிந்தித்து செய்யும் செயல் – இது கதை மாந்தரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல்.
இச்செயல்கள் அனைத்தும் கதை மாந்தருக்கு ஒரு குறீயீட்டுத்தன்மையை வழங்குவதாக அறியவருகிறோம்.
ஆ. பேச்சு
பேச்சு என்பது இங்கே மௌனமாகவும் இருக்கலாம். எனவே பேச்சு (உரையாடல் அல்லது மௌனம்) “தனது உள்ளடக்கத்தின் மூலமாகவும் வடிவத்தின் மூலமாகவும் கதைமாந்தரின் ஒரு பண்புக்கூறினையோ அல்லது பல்வேறு பண்புக் கூறுகளையோ விள்க்குபவைகளாக அமையும்” என்ற விளக்கம் கிடைக்கிறது
கதைமாந்தர் உருவாக்கத்தில் மறைமுகமாக அவர் பண்பினைக் கட்டமைத்தலில் செயலைக் காட்டிலும் பேச்சுக்கு முக்கித்துவம் கொடுக்கப்படுகிறது. கதைசொல்லலே உரையாடல் சார்ந்தது;அல்லது உரையாடலையே பெரிதும் நம்பி இருக்கிறது. கதை சொல்லியில் ஆரம்பித்து கதைமாந்தர்கள்வரை சொற்கள் மற்றும் தொனியின் துணைகொண்டு பிறமையுடன் உறவாட வேண்டிய நெருக்கடி எடுத்துரைப்பியலில் உண்டு. எனவே கதைமாந்தர் உருவாக்கத்தில் ‘பேச்சு’ தனித்து நிற்கிறது. “கதைமாந்தர்களின் உள்முரண்பாடுகளையும், ஆழத்தில் உறைந்துகிடக்கும் படிமங்களையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சு பெரிய பங்களிப்பினைச் செய்கிறது” என்கிற கட்டுரை ஆசிரியரின் கருத்தை இங்கே கோடிட்டுக்காட்டவேண்டும். செயலைக்காட்டிலும், மறைமுகப் புலப்படுத்தலில் ‘பேச்சு’ முன்நிற்பதற்கு காரணம் ஒரு கதைமாந்தர் மற்றொரு கதைமாந்தரைப் பற்றி பேசும்சந்தர்ப்பம் அமைவதால் கதையில் இடம்பெறும் ஏனைய மாந்தர்களின் பண்பினைத் தீர்மானிக்கவும் ‘பேச்சு’ வாசகர்களுக்கு உதவுகிறது. இங்கே ஆசிரியர் எழுத்தாளர் கி.ரா.வின் கரிசல் காட்டு கதை மாந்தர்களை புரிந்துகொள்ள ‘பேச்சு’ எங்கனம் உதவியிருக்கிறதென நினைவுகூர்கிறார்.
மேற்கண்ட செயல் மற்றும் பேச்சு கொண்டு கதை மாந்தர்களை கட்டுகிறபோது சூழல் அல்லது இடம் வெளிப்புற தோற்றங்கள் ஆகிய உண்மைகளும் உதவுகின்றன எனத் தெரியவருகிறது. இவை இரண்டும் (இடம், வெளிப்புற தோற்றங்கள்) பாத்திரமயமாக்கலில் அல்லது கதைமாந்தர்களை உருவாக்குவதில் மேலாதிக்கம் செலுத்துவதில்லை என்கிறபோதும், கதைமாந்தர்களின் அலங்கோலமான நிலை அல்லது ஒழுங்கு அவர்கள் புழலும் இடத்தின் தராதரம் ஆகியவை கதைமாந்தர்களை புரிந்துகொள்ள உதவுகின்றன என்பது உண்மை. வெளிப்புறதோற்றத்தை சற்று கவனமாக புரிந்துகொள்ளவேண்டுமென்கிறார். ஏனெனில் இதில் ஒரு மனிதனின் இயற்கையான உடல் அமைப்பு ( உயரம், நிறம், மூக்கின் நீளம், கண்கள் அமைப்பு…) இருக்கிறது. பின்னர் அவன் விரும்பி அல்லது விரும்பாமல் அமைத்துக்கொள்கிற சிகை அலங்காரம், உடை அலங்காரங்கள் உள்ளன.
இ. சூழல்
ஒரு கதைமாந்தருக்கு திறனாய்வாளரின் கருத்துப்படி இருவகை சூழல்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஒன்று அவரின் உடல் சார்ந்தது – அறை, வீடு, தெரு, நகரம். முதலியன. மற்றது கதை மாந்தரின் சமூகம் சார்ந்தது -குடும்பம், வர்க்கம், சாதி, மதம், கட்சி. இவைகளை “கதைமாந்தரின் பண்புக்கூறுகளை வெளிப்படுத்தும் ஆகு பெயர்களாக அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்பதைக்கூறி, வெளிப்புறத் தோற்றத்திற்கும் பண்புகூறுகளுக்குமான உறவை காரண காரிய அடிப்படையில் அணுகுவதுபோல சூழலையும் கதைமாந்தர் உறவையும் காரணகாரிய அடிப்படையில் அணுகமுடியாதெனச் சொல்லப்படுகிறது
ஈ. துணை வலுவாகப் பயன்படும் ஒப்புமை:
கதைமாந்தர் உருவாக்க வழிமுறைகளில் இது நான்காவதாக இடம் பெறுகிறது “கதை மாந்தர்களை ஒப்புமைபடுத்திப் பேசுவதானது கதைமாந்தர்களின் தனிப்பண்பினினை வெளிப்படுத்தப்பயன்படும் ஒன்று என்பதைவிட, பாத்திரமயப்படுத்துவதற்குத் துணை வலுவாக” பயன்படுகிறது என்கிறார் பேராசிரியர். உதாரணத்திற்கு “ஒரு சாம்பல் நிற நிலப்பரப்பு” மட்டுமே ஒரு பாத்திரத்தின் அவநம்பிக்கை அல்லது தோல்வி மனநிலையைப் புலப்படுத்திவிடாது. மாறாக அந்தப் பாத்திரத்தின் செயல் பேச்சு புறத்தோற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே வாசகர் அறிந்து வைத்திருக்கக்கூடிய அந்தப் பாத்திரத்தில் அவநம்பிக்கையை காட்டுவதற்குப் பயன்படலாம்” என்கிறார். ஒப்புமை என்ற சொல் பயன்பட்டிருப்பினும் முரண்பட்டிருத்தல் (அதுவும் ஒருவகையில் ஒப்புமைதான்) என்ற கூறினையும் இதனுடன் இணைத்து திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வொப்புமையை மூன்று முறையில் விளக்கியிருக்கிறார்:
1. ஒத்திசைவான பெயர்கள்
2. ஒத்திசைவான நிலக்காட்சி
3. கதைமாந்தர்களுக்கு இடையிலான ஒத்திசைவு.
1.ஒத்திசைவான பெயர்கள்:
இங்கே பிரெஞ்சுக்காரரான பிலிப் ஹார்மோன் என்ற இலக்கிய திறனாய்வாளர் கண்டாய்ந்த முடிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர் கதைமாந்தருக்கும் குறியீடுகளுக்குமுள்ள உறவை உறுதிசெய்தவர். பனுவலில் கதைமாந்தரை ஒரு குறியீடாக நிறுவமுடியும் என்றதோடு, அக்கதைமாந்தரை ஒற்றை குறீயீடாக மட்டு ¢ன்றி பல குறியீடுகளின் தொகுப்பாகவும் பிரதிநிதித்துவபடுத்தமுடியும் என்றவர். “கதைமாந்தருக்கு நாம் தரும் ஒத்துழைப்பு என்பது எடுத்துரைப்பிலுள்ள பிற கதைமாந்தர்களுக்கும் நம்மால் பெயர் சூட்டவும், நினைவுகூரவும் முடியும் என்பதும் அவர்களை விசாரணைக்குட்படுத்தவும், விசாரணை செய்யவும் முடியும் என்பதும்” ஆகும் எனக்கூறியவர்.
ஹாமொன் ஒத்திசைவான பெயர்களை நான்கு பிரிவுக்குள் கொண்டுவருகிறார் என அறிகிறோம். அவை அ. சாட்சி ஆ. ஓசை. இ. தெளிவாக உச்சரித்தல் ஈ. மொழிவடிவம். இதில் நான்காவதாக வருகிற மொழிவடிவத்தை வாக்கிய அமைப்போடு பொருத்திப்பார்க்க தேவையில்லையாம். “ஒத்திசைவான பெயர்கள் ஒத்ததை வலியுறுத்துவதைவிட பெயருக்கும் அந்த கதைமாந்தரின் இடையிலுள்ள முரண்களை வலியுறுத்தவும் கையாளப்படலாம்” எனவும் சொல்லப்படுகிறது.
2. ஒத்திசைவான நிலக்காட்சி:
“கதைமாந்தரின் சமூகம் சார்ந்த சூழலானது அந்தக் கதைமாந்தரின் பண்புக் கூறுகளை மறைமுகமான ஒரு முறையில் வெளிப்படுத்துகிறதென்று” கூறப்படுகிறது. அதாவது மனிதர்களைச் சமூகமும், சமூகத்தை மனிதர்களும் கட்டமைக்கிறார்கள் மாறாக இயற்கை நிலக்காட்சி யாரையும் சாராமல் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பது. எனவே இங்கே சமூகத்தைபோல காரணகாரிய அடிப்படையில் இயற்கை சூழலையும் மனிதர்களையும் பொருத்திபார்க்க முடியாதென்கிறார்கள். எனினும் சில ஆய்வுகள் இக்கருத்தியத்திற்கு மாறாக இயற்கைக்கும் மனிதருக்கும் ஒப்புமை அடிப்படையிலோ முரண் அடிப்படையிலோ ஒத்திசைவுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. பேராசிரியர் சங்க இலக்கியத்தில் வரும் கருப்பொருள் காட்சிகளை நினைவு கூர்கிறார்.
3. கதை மாந்தருக்கிடையில் ஒத்திசைவு
சில நேரங்களில் சில குறிப்பிட்ட சூழல்களில் “இரண்டு கதைமாந்தர்களின் நடத்தைகளுக்கு இடையிலுள்ள ஒப்புமை அல்லது முரணானது இரண்டு கதைமாந்தர்களின் பண்புக்கூறுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதாகக்” கூறும் க.பஞ்சாங்கம் ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தில் வரும் ‘கார்டிலியா மற்றும் அவளது சகோதரிகளுக்கிடையே உள்ள குண வேறுபாடுகள் அவ்விதியின்படி தெளிவாக பதிவாகியிருக்கின்றன, என்கிறார்
பாத்திரமயபடுத்தலிலுள்ள பொதுவான வழிமுறையை வகுத்துக்கொள்ள வேறுசில கூறுகளை பற்றிய புரிதலும் அவசியமெனக்கூறும் ஆசிரியர் உதாரணத்திற்கு ஒரு கதைமாந்தரின் பண்புநலன்களைப் புலப்படுத்தப் பயன்படும் கூறுகள், அந்தக் கதைமாந்தரின் ஒரு பண்பினைத்தான் சுட்டிக்கூற வேண்டுமென்பது இல்லையென்றும், தொடர்பான வேறுபல கூறுகளையும் பேசலாம், எனவும் தெரிவிக்கிறார்.
கதைமாந்தர்கள் உருவாக்கம்?
நேற்றையை கதை மாந்தர்கள் இரு கூட்டத்தின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். நல்லவை தீயவை என்ற பொதுப்பண்பின் கீழ் அவர்கள் இனங்காணபட்டு, கதையாடலை இந்த இரு பண்பிற்குமான மோதலாக நடத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய எடுத்துரைப்பு சிக்க்லான மாந்தர்களை கையாளுகிறது அவர்களை மேற்கண்ட பொதுப்பண்பின் ஒன்றின்கீழ் அவ்வளவு எளிதாக நிறுத்திவிடலாமா?
அது தவிர இன்றைய படைப்புலகம் படைப்பாளியோடு வாசகனுக்கும் ‘கதைமாந்தரின்’ பண்பைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலை கொடுத்திருக்கிற காலம். பிரெஞ்சு எழுத்தாளர் செர்ழ் தூப்ரோஸ்கி கூறுவதுபோல “அச்சடித்த காகிதத் தளத்தில் எடுத்துரைப்பவனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்திதரும் சந்திப்பே கதைமாந்தர்”. அடுத்து ‘தன்னை எழுதல்’ என்ற புதிய வகை எடுத்துரைப்பியலில் கதைசொல்லியே சிறப்பு கதைமாந்தன் என்கிறபோது மிகக்கவனமாக கதைமாந்தர் உருவாக்கத்தைப் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நேற்றைய கதை மாந்தர்களும் இன்றைய கதைமாந்தர்களும் ஒன்றல்லவெனபார்த்தோம். இன்றைய மாந்தர்கள் குழைந்தைமுதல் பெரியவர் வரை சிக்கலான மனிதர்கள். ஆறுவயதில் தமது அறிவைக் கையாளத் தெரிந்த குழந்தைகளின் காலம் போய் இன்றைக்கு அப்பக்குவத்தை அவர்கள் தங்கள் மூன்றுவயதில் அடைந்திருக்கிறார்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த மீஎதார்த்தம், நாளை எதார்த்தமாகக்கூடும். அனுபவத்தால் கட்டமைக்கப்பட்ட நேற்றைய மனிதனுக்கும் அறிவால் கட்டமைக்கப்படுகிற இன்றைய மனிதனுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனவே மனிதனின் பரினாம வளர்ச்சி கதைமாந்தரிலும் எதிரொலித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது, நமது திறனாய்வுகள் பலவும் மேற்கத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டவை. மேற்கத்திய சமூகத்தை, மேற்கத்திய மனிதர்களை, அவர்களின் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டவை. கீழை தேசத்துக்கென கலப்பற்ற பண்பிருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. மேற்கத்தியரேனும் மேற்கத்தியர்களாக இருக்கிறார்கள் (பெரும்பாலோர்) என உறுதியாகக் கூறலாம். குறிப்பாக கீழைநாடுகளின் படித்த நடுத்தர வர்க்கம், மேற்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாசற்ற அறிவு, மாசற்ற உணர்வு போன்ற சொல்லாடல்கள் பொருளிழந்துவிட்டன. ஒருவித மன நோய்க்கு ஆளான மனிதர்கள். மையமும் விளிம்புமிணைந்த ஒருவித மயக்க நிலை நமது உயிர்வாழ்க்கை. இன்றைய கதைமாந்தர் உருவாக்கம் பல முகப்பினைக்கொண்ட கண்ணாடி, தோற்ற பிழைக்கு வாய்ப்புண்டு. எனவே இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தியே ‘ கதைமாந்தர்கள் உருவாக்கம்’ பற்றிய கட்டுரையை நாம் அணுகவேண்டும்.
(தொடரும்)