நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து வித்தியாசமான ஐந்து சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நவீன உத்திகளைப் பின்பற்றி இந்தச் சிறுகதைகள் அமைந்துள்ளன. காலசுவடு பதிப்பித்திருக்கிறது.
எவ்லன் காலன், பத்ரிக்மோதியானோ, மார்கெரித் துராஸ், லெ கிளேஸியோ மற்றும் அலென் ஸ்பீஸ் ஆகியோரின் சிறுகதைகள் அவை.
இந்த ஐந்து கதைகளுமே மனித மனங்களில் உறங்கிக்கிடக்கும் உள்ளுணர்வுகளை உணர்வுபூர்வமான வார்த்தைகளில் விவரித்து சொல்கின்றன. இக்கதைகளில் வரும் கதை என்ன? சொல்ல இயலாதவை, படித்து மட்டுமே சிலாகிக்ககூடியவை. மனித மனங்களின் ஊடாடும் உணர்வுகளை உள்ளது உள்ளபடி இக்கதைகள் விவரிக்கின்றன.
ஒளிரும் சிவப்பும் ஓர் நிறமே என்ற எவ்லன் காலனின் கதையில் ஒரு பெண்ணின் உள்மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் எழிலார்ந்த தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.
சேன்நதி என்ற பத்ரிக் மோதியானோவின் கதையில் தன் உதிரத் தொடர்பற்ற ஒரு குழந்தையின் பிரிவால் ஏற்படும் துயரினை உரித்து காட்டுவதோடன்றி படிப்பவர்களின் மனதில் உணர்வதிர்வலைகளை உண்டுபண்ணுகிறது.
படிப்பவர்களை முன்னிறுத்தி மனித மனம் உடல் ரீதியாக உணர்வுகள் ஓங்குதலையும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனாலும் நிலை நிறுத்தி விடுகின்ற இயல்புத் தன்மைகளை விவரிக்கிறது மார்க்கரித் துராஸ் எழுதிய உயிர்க்கொல்லி என்னும் கதை. இதுவே நூலின் தலைப்பு.
பாசத்திற்காக ஏங்கித் தவித்து ஒவ்வொரு கிளைகள் போன்ற சமூக அமைப்பினரின் பிரதிநிதிகளிடம் தஞ்சம் புகுந்து ஒரு ஆன்மீகத் தேடலையோ அதற்கும் மிஞ்சிய ஒரு சொல்லவியலாத தேடலைத் தேடி அலைகிறான் மோந்தோ என்ற அனாதைச் சிறுவன். இக்கதை லெ கிளேஸியோவால் எழுதப்பட்டுள்ளது. எதையோ தேடி அலைவது அந்த மோந்தோ சிறுவன் மட்டுமல்ல, இந்த உலகம், இந்த நாடு, இந்த மக்கள், ஏன் நாமும்கூட. மோந்தோ என்ற தலைப்பில் மிக அற்புதமான உயிர் விரவிய கதை.
ஒரு மனநலம் பாதித்தவன், மன நல காப்பகம் ஆகியன உள்ளார்ந்த வாழ்வு நிகழ்வுகளை ஏக்கமான பரிதாபக்குரலில் எடுத்துரைக்கிறது அலன் அஸ்பிஸ் எழுதிய ஏன் என்ற கதை.
ஐந்து கதைகளும் வெவ்வேறு வகையான உள்ளீடுகளை உணர்வுகள் என்ற தொனி என்கிற அஸ்திவாரங்களில் மிக எளிமையாக, மிக அருமையாக அமைகின்றன. இக்கதைகளில் உலவி வாழும் கதை மாந்தர்கள் மனம் விட்டுப் பேசுவதை படிப்பவர்களாகிய நாம் நிச்சயம் கேட்டு உணரமுடியும்.
நன்றி சிற்றேடு ஜூலை – செப்டம்பர் 2014