மொழிவது சுகம் -ஜூன் 22 2014

1. Procrastination அல்லது தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல் என்ற சொல்லை நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு மன நோய்தான். இம்த மனநோய்க்கு நானும் பலியாகி இருப்பதின் அடையாளம் தான் எனது எழுத்தில் உள்ள தொய்வுக்கான காரணம். கடந்த காலங்களைப் பார்க்கிறபோது இவ் வருடத்தில் எழுதியது குறைவுதான். 2013 ஆரம்பத்திலிருந்து 8 சிறுகதைகளோடு ஒரு தொகுப்பு நிறைவுறாமல் இருக்கிறது.  வெகு நாட்களுக்குப்பிறகு சொல்வனம் நண்பர் கிரிதரன் அன்பினால் அவர்களுக்கு ஒரு சிறுகதையை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எனது கடைக்கு வருகிற மொரீஷியஸ் வாடிக்கையாளர்கள் அவர்கள் நடத்தும் ‘மாரியம்மன் கஞ்சி’ என்ற பண்டிகைக்கு அழைத்திருந்தார்கள். வருடத்தில் மூன்று பண்டிகைகள் நடத்துவார்கள்; எல்லா பண்டிகைகளுக்கும் போக முடிவதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அல்லது முன்னிரவுகளில் அவற்றை நடத்துகிறார்கள். குறைந்தது 3 மணிநேரம் அந்நிகழ்ச்சிக்கு ஒதுக்கவேண்டும். கடைவைத்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மனங்கோணக்கூடாது எனப் போகவேண்டியிருக்கிறது ஒரு சிறுகதைக்கான கரு கிடைத்தது.  உடனே எழுதாமற் தள்ளிப்போட்டுவந்தேன்.  சிறுகதைத் தொகுப்பைப்போல,  பிரெஞ்சு இலக்கியத்தைப்பற்றிய கட்டுரைத் தொகுப்பும் முடியாமல் இருக்கிறது. கூடுதலாக நான்கைந்து கட்டுரைகள் எழுதினால் முடித்துவிடலாம். போன வருடத்தில் அம்பை சிறுகதைகளை மொழி பெயர்க்க உட்கார்ந்ததில் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியதாயிற்று. பிரெஞ்சு பெண்மணியோடு இணைந்து செய்வதால் நேரம் பிடித்தது.  மொழி பெயர்ப்பு எனது படைப்புத் திறனை (?) கூர்மையைத் சிதைப்பதாக உணர்கிறேன்.  சோம்பலுக்கும் தள்ளிபோடும் மனநோய்க்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணம். காலூன்றி இருக்கிற வலைத்தளங்களிலும்ங்கூட அவற்றின் தாக்கம் எதிரொலிக்கிறது. தள்ளிபோடும் மனநோயிலிருந்து விடுபடவேண்டும் என நினைப்பதே  நல்ல அறிகுறிதான். ஆனால் அதையும் தள்ளிப்போடக்கூடாதல்லவா?

சொல்வனம்  இணைய இதழ் 16-6-2014

இந்த இதழ் சிறுகதை இதழாக வந்துள்ளது. நாஞ்சில் நாடன்மொழியில் சொல்வதெனில் ‘அரைக்கோட்டை விதைப்பாடு வேணும்னாலும் எழுதித் தரலாம்” அப்படி வாச்சிருக்கு. நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், குட்டி ரேவதி வ.ஸ்ரீனிவாசன், ரெ. கார்த்திகேசுவின் படைப்புக்களோடு, மொழி பெயர்ப்புளும் உள்ளன.

வல்விருந்து – நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை.

வழக்கம்போல மனிதர் சிலம்பம் சுழற்றுகிறார். நாஞ்சிலார் எழுத்து. ஒப்பிடமுடியாதது. லாசாரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சு.ரா. என சேர்ந்ததொரு கலவை. கும்ப முனியின் எண்ணைகுளியலை ஓர் பத்துதடவையாவது வாசித்திருப்பேன். எதையாவது எழுதி கிச்சு கிச்சு மூட்டுவதென்பது வேறு. பிறரைக் காயப்படுத்தாத நக்கலும், கேலியும், குத்தலும், கோபமும் எத்தனை படைப்பாளிகளுக்குச்சாத்தியம். அவர் வீட்டில் கட்டுதறி இருக்குமென்றால் களவாடிடணும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாவே இருந்துவருகிறது.

குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அ·தென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.
– (வல் விருந்து- சொல்வனம் 16-6-20014)
இடுக்கிகோல்ட். -குட்டி ரேவதி.

கதைசொல்லலிலும் தாம் வல்லவர் என்பதைக் குட்டி ரேவதி நிரூபித்திருக்கும் சிறுகதை. அவருடைய படைப்பாற்றலை – மொழிக்கும் அவருக்குமான பிணைப்பை ஒருவரும் குறைசொல்லிவிடமுடியாது. சில பகுதிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. அது ஒரு குறைதான். எனினும் அவர் எழுத்தாற்றல் பிரமிப்பதாக இருக்கிறது. தக்க தருணத்தில் தமது இருப்பை உறுதிசெய்திருக்கும் ஆக்ரோஷமான எழுத்து. பிரெஞ்சில் துராஸ் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு கவிதையை ஒதுக்கிவிட்டு உரைநடைபக்கம் வாங்களேன் என்ற கோரிக்கையை தாராளமாக நாம் வைக்கலாம்.

சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை”(இடுக்கிகோல்ட் – சொல்வனம் 16-6-20014)

“கவிதை எழுதுகிறவர்கள் உரைநடயிலும் ஜெயிக்கக்கூடும்” என்று சொல்வதுண்டு – இச்சிறுகதை உதாரணம்.

பிற சிறுகதைகளில் யுவன் சந்திரசேகரின் “உலகளந்த நாயகி” ரெ.கார்த்திகேசுவின் ‘வேளைவந்துவிட்டது’ வ.ஸ்ரீனிவாசனின் ‘தீட்டு’ ஆகியவை வாசித்துள்ள பிற சிறுகதைகள். மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தி.கசியை நினைவுகூரும் வித்தியாசமான இருகட்டுரைகள். பெரியவர் வெங்கட் சுவாமிநாதனும், சுகாவும் தந்திருக்கிறார்கள். அசோகமித்திரனின் ‘இரண்டு விரல் தட்டச்சு’ம் இருக்கிறது. மூவருமே நன்றாகசொல்ல க்கூடியவர்கள் என்பதால், படிக்க சுவையாக இருக்கிறது.

குன்னி முத்து : இந்த வாரம் படித்து முடித்த நாவல். அரசியல்விமர்சகரின் நாவல்போல இருந்தது. அரசியல்கட்சிகள், இந்துமதம், கிறித்துவ மதத்தின் உட்பிரிவுகள் (இஸ்லாமை கவனமாகத் தவிர்த்துவிட்டு) விமர்சனத்திற்குள்ளாகின்றன. நாவலில் வரும் இருளி, சுந்தரி, கிரேசி, என அவ்வளவுபேரும் விரும்பியோ விரும்பாமலோ சோரம்போகின்றார்கள். அதிக எதிர்பார்ப்புடன் படித்ததாலோ என்னவோ பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அது இலக்கியம். இதையே குட்டி ரேவதியோ அம்பையோ எழுதினால் அவர்கள் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் தந்திரம்.  இதில் வலிந்து சொல்லப்பட்டவை அதிகம். ஒருவேளை நமக்குத்தான் இவர்களின் இலக்கிய அரசியலெல்லாம் பிடிபடவில்லையோ என்னவோ?
—————————

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s