புலம்பெயரியத் தமிழிலக்கியம் : சில உட்பொருண்மைகள் – தமிழவன்

Tamizavan(எதிர்வரும் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் மூன்று நாட்கள்கோயம்புத்தூரில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு என்று கலந்துகொள்ளும் நிகழ்வு. அதுபற்றிய  விபரத்தினை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு இங்கு வெளியிடுகிறேன். இந்த ஆய்வுக் கட்டுரை  சிங்கப்பூரில் நவம்பர் 2011ல் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்னாள் ஆந்திர திராவிடப் பல்கலைகழக தமிழ் துறை தலைவரும், இலக்கிய விமர்சகரும், அமைப்பியல்வாதியும், பின் நவீனத்துவத்துவ முதன்மை படைப்பிலக்கியவாதியுமான முனைவர் தமிழவன் வாசித்தது, அவர் ஓப்புதலுடன் இங்கே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. )

 அறிமுகம்

தேச அமைப்புகள் உருவாகி அதன் பல்வேறு  பரிமாணங்களையும் பெறும்போது புலம்பெயர்தல் தேச அமைப்பை ஏதோ ஒருவகையில் மீறுவதாகும். உள்நாட்டுபோர், பஞ்சம் பட்டினி, அல்லது வேலையின் பொருட்டு , அல்லது சரித்திரக் காரணங்களின் (இதில் நாடுகள் சுதந்திரம் பெறுவதும் புதிய ஆட்சி ஏற்படுவதும் கூட அடங்கும்) பொருட்டுத் தேசத்தையும் பிறந்த மண்ணையும்விட்டுப் பெயர்தல் ஏற்படுகிறது.  இவ்வாறு நிலம் பெயர்ந்து வாழ்தல் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு புதிய உண்மைகளையும் உருவாக்குகிறது. இப்படி பெயர்பவர்கள் புதிய மண்ணில் வாழ்க்கையை, தமது குடும்பத்தை நிலைநாட்டும்போது புதுப்புது உணர்வுகள், மனநிலைகள், வரலாறுகள்? ஞாபகங்கள்? உலகப் போக்குகள் படைக்கப்படுகின்றன. (இவற்றை ஆங்கிலச் சொற்களாம் தங்களுக்குள் Diaspora, International, Expatriate, Exile என்று எல்லாம் பறிமாறிக்கொள்கிறார்கள் ஆய்வாளர்கள்.)

இத்தகைய புலம்பெயர் நிலைமை பற்றிய ஆய்வுகள் தமிழில் இல்லை. சமீபகால பல்கலைக் கழக ஆய்வாக மானுடவியல், அரசியல், வரலாறு, இலக்கியவியல் துறைகளில் இது மேற்கில் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்பெறுகின்றது. எனினும் புலம்பெயர் நிலைமைக்குத் தமிழ்ச்சமூகம் பல காலமாக ஆளானது என்பது உண்மை. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கும் தென் ஆப்ரிக்கா, பிஜி, மேற்கிந்திய தீவுகள், பர்மா, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதுபோல அடுத்தகட்டமாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று தென்னிந்தியாவிலிருந்தும் தமிழீழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தார்கள்.

இந்தப் புலம்பெயர் நிலைமை பற்றிய இலக்கியங்கள் இன்று போதிய அளவில் எழுதப்பட்டுள்ளன அவற்றைப் பற்றிய இந்த ஆய்வில் ஈடுபடுமுன்பு நாம் சில கருத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும். வலைப் பின்னல்களில் பொதுவாய்ப் பலராலும் பலவிதமான புரிதல்களுடன் புலம்பெயர் நிலமைசார்ந்த கருத்தாடல்கள், விவாதங்கள், வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இக்கட்டுரை இவற்றில் வெகுசில வரையறைககளையே பயன்படுத்தித் தன்கருத்தியல் உலகை முன்வைக்கிறது. பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய சர்ச்சைகள் கீழ்வரும் கருத்தாடல்களை முன்வைப்பதுண்டு.

புலம் பெயரியம் பற்றிய சர்ச்சைகள்

குவலயமாக்கம் (Globalsation) வேறு; புலம்பெயர்தல் வேறு. குவலமயமாக்கத்தில் பொருளாதார அலகுகள் (economic units) மற்றும் தொழில் நுட்பக்கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது புலம் பெயரியத்தில்ஒரு வாழ்வியக்கம் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்ற வரைவிலக்கணம் பயனுள்ளது. அதாவது ஒரு நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஞாபகம், கனவு, மீள்நினைவு (Nostalgia) பிரிவால்  மன உளைச்சல், புதிய நாடுகள் தரும் ஆசைகள், புதிய அனுபங்கள் இப்படி ஒரு கலப்பான மன எதார்த்தம் தோன்றுகிறது.

இதுபோல வேறொரு அம்சமும் தொழில்படுகிறது புதிய உலகம்  அல்லது புதிய நாடு  தனது அல்லது தனது குடும்பத்தின் எதிர்காலத்தோடு இணைக்கப்படும்போது அங்கு ஒரு மேல்-கீழ்  என்ற தாரதம்மியம் (Hierarchy) ஏற்படுகிறது. அதில் தனது புதியநாடு ஒளியாகவும் தன் பழைய நாடு அல்லது பிறப்பிடம் ஓரளவு இருளாகவும் மனதில் பதிவுறுகின்றன. தனது குழந்தைகள் ஒளிரும் நாட்டிலும் தனது தாய் தந்தை மற்றும் உறவுகள் தன் இருள் சூழ் நாட்டிலும் வாழ்வது தெரிகிறது. ஆகப் பிறப்பிடம் கடந்து போனதாகவும் வாழ்விடம் நிகழ்காலமாகவும் ஆகிறது. அதாவது காலம் தனது பரிமாணத்தைப் பழையது/புதியது என்று பிரித்து எதிரிணையைப் படைக்கிறது. நாடு இரண்டுபடுகிறது. எனவே இந்தப் புலம்பெயரியல் ஆய்வு எப்போதும் தவிர்க்கவியலாமல் இரண்டு நாடுகளின் குடிமகனைப் (Dual Citizenship) பற்றிப் பேசும் புது சிந்தனையாகிறது. இவ்வித ஆய்வு அர்ஜுன் அப்பாத்துரை போன்ற ஆய்வாளர்களுக்குக் கற்பனை (imagination)யிலிருந்து மிகவும் வேறுபாடுள்ளதல்ல. (1)

 பல சிந்தனையாளர்கள் புலம்பெயரியம் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு முன்னாலும் பின்னாலும் முகங்கொண்டு பார்க்கிற கிரேக்கத் தேவதையான ஜேனஸ் பற்றிப் பேசுவதை இங்கு நாம் நினைவுகொள்வது நம் சிந்தனைக்கு ஓர் அகில உலக முக்கியத்துவத்தைத் தரும். இந்த உருவகம் (Metaphor) ஒற்றைமுக கருத்தாக்கங்களால் நாடு கடந்த உண்மைகளைப் பேசுவதில் உள்ள கஷ்டத்தைச் சுட்டிக்காட்டும். எனவே இந்தத் துறையில் ஆய்வுகளின் முறையியல் (Methodology) கூட புதியதாக இருக்க வேண்டுமென்பது முக்கியமாகிறது.

அடுத்ததாக இடம் பற்றிய பெயர்ப்புப் (Dislocation of site) பற்றி யோசிக்கவேண்டும். அதாவது இடம், தனது முந்தைய காலத்தோடும் அதுபோல் தனது இன்றைய காலத்தோடும் முதன்முதலாகத் தொடர்கிறது. அதனால் மனித உணர்வு, அதன் வரலாறு அதன் ஞாபகம், கற்பனை முதலியன எந்த முன்மாதிரியும் அற்றதாகிறது. அதாவது முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் நாடு பெயர்ந்தவன். இது புரிதலுக்கு ஓர் இருண்மையையும் வளைவு நெளிவுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. ஒன்று இன்னொன்றோடு சதா முரண்பட்டுக்கொண்டே (perpetual contestation) இருக்கிறது. இறுகிப்போன கருத்தாங்களாய் எதையும் பார்க்கக்கூடாது.

நம் கவனத்திலிருந்து தப்பக் கூடாத இன்னொரு சிந்தனை தன்னிலைகள் (Subjectivities) பற்றியது. தன்னிலை என்பது மனித ஆன்மா அல்ல. மனிதனின்/ மனுஷியின் உள் ஆளுமை அது. அது முக்கியமாக, பொருள்மயமானதென்றனர் அமைப்பியல் சிந்தனையாளர்கள். நாம் பேசுகின்ற மொழிகளின் பொது அமைப்பால் உருவானது தன்னிலை. இந்தத் தன்னிலை எழுதப்படுகிற பிரதியில் (text) அமைந்திருக்கின்ற விதம் பற்றிய ஆய்வு புதிய உண்மைகளைப் பிரதிகளிலிருந்து நமக்குக் கொண்டுவந்து தருகின்றது.

பியர் மாஷெரி (Pierre Machery) போன்ற பிரெஞ்சு நாட்டு சிந்தனையாளர்கள் எழுத்தை ஒருவித உற்பத்தியாகப் பார்த்தனர். அதுபோல புலம்பெயர்வியல் ஆய்வாளர்கள் புலத்தில் உள்ள வாழ்வு என்பதை ஒரு கலாசார உற்பத்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது பெயர்ந்து வாழ்வது என்பது ஒரு கலாசாரத்தைவிட்டு இன்னொரு கலாசாரத்தைத் தழுவுதல் அல்ல. இரண்டு கலாசாரங்களும் முடிந்து போனவையோ, கல் போன்று இறுக்கமானவையோ அல்ல. மனிதர்கள் அந்தக் கலாசாரத்தில் உயிர்வாழும்போது அவ்விரு கலாசாரங்களும் தம்மை உற்பத்தி செய்கின்றன. அவை ஒரு செயலில் இருக்கின்றன. இது முக்கியமான காரியமாகும். இதனை நாம் புலம்பெயர்ந்தவன் எழுதும் எழுத்தில் எதிர்கொள்கிறோம். கலாசாரம் எப்படி உற்பத்தியாகிறதென்று அறிகிறோம்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள பண்புகளைப் பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய கருத்தாக்கங்களாக இன்றைய அகில உலகச் சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்தப் பின்புலப் பரிச்சயத்துடன் தமிழ்மொழியில் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம் எப்படி வடிவமைப்புக்கொண்டு  வருகிறதென்பதைப் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம்.

இக்கட்டுரை புலம் பெயர்ந்த எழுத்தாளர்களாக எஸ். பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி, மெலிஞ்சி முத்தன் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களையும் அதுபோல் காஞ்சனா தாமோதரன் என்ற அமெரிக்கா வாழ் எழுத்தாளரையும் நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பாரீஸ் வாழ் எழுத்தாளரையும் அணுக விழைகிறது. இவர்கள் அத்தனைபேரும் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய உரைநடை வடிவங்களைப் பயன்படுத்தி எழுதக்கூடியவர்கள். எனவே மிகக் குறுகிய இரண்டு இலக்கிய வடிவங்களைக் கையாளும் எழுத்தாளர்கள் – அதுவும் பரிமாணம் கொண்ட ஒரு புதிய வாழ்முறைத் தன்மையை எப்படி உருவம் பெற வைக்கிறார்கள் என்ற நோக்கில் இக்கட்டுரை ஆய்கிறது.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருநாடுகளுக்கிடையில் நடத்தும் ஒரு இருதலைக் கொள்ளிவாழ்க்கை நிலை ஏற்பட்டிருப்பது மிக மேம்போக்காக்கப் பார்ப்பவர்களுக்கே தெளிவாகும். இந்த இருவகைநாடுகளும் ஒரே தரத்தனவாக எழுத்தாளர்களிடம் இல்லை. பிறந்த நாடு என்பது ஒருவகை விதைபோல் இவர்களிடம் செயல்படுகின்றது. இங்குக் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் ஈழமும்  அதுபோல இந்தியாவின் பகுதியான தமிழ்நாடு என்ற மாநிலமும் (காஞ்சனா தாமோதரன்) பாண்டிச்சேரி மாநிலமும் (நாகரத்தினம் கிருஷ்ணா) இந்தத் தாய்பூமி (Home land) எனும் விதை நிலமாகின்றன. ஒரேவிதை இருவித நிலங்களில் வேறுபட்டு வளர்வதுபோல தாய் நிலத்தின் உறவும் ஞாபகமும் பிள்ளைப் பருவமும் சரித்திரமும் எதார்த்தமும் அது பற்றிய கனவும் அது பற்றிய படிப்பறிவும் அங்கு நடக்கும் தற்கால வாழ்வும் போராட்டமும் சமாதானமும் இன்னொரு நாட்டின் தற்சமயத்துடன் பின்னிப்பிணைகின்றன. இரு நாடுகளின் உறவும் சரளமானதோ, கொள்வினை கொடுப்பினை உறவோ, பயணி ஒருவரின் உறவோ இல்லை. ஆங்கிலத்தில் இன்று பலர் எழுதுவதுபோல (ஸல்மான் ருஷ்டி, ஷ்யாம் செல்லதுரை, நைப்பால், சிவானந்தன், ரோஹிண்டன் மிஸ்ரி முதலியோர்) அமையாமல் இரு தேசங்களில் காலூன்றி இதயத்தின் மொழியான தாய்மொழியில் எழுதும் எழுத்து  அகில உலக முக்கியத்துவமுள்ள புது மனோநிலைகளைக் கண்டுபிடிக்கும் காரியமாகும். தமிழர்கள் என்ற பழம் பெருமைகொண்டு காலம் காலமாகத் தனது பிறந்த பூமியை மறக்கமால்  அப்பூமியின் நினைவிலிருந்து தன் வாழ்வுக்கு ஒரு புது உந்துதலையும் புதுப்பொருளையும் காணும் இனம் ஒன்று நிலம் பெயர்ந்து வாழ்வில் அடையும் அனுபவம் வெறும் இலக்கியத்துறை ஆய்வுப் பொருண்மை மட்டுமல்ல. இவ்வெழுத்தாளர்கள் சென்று வாழும் நாடுகள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்றவையாதலால் இது அனைத்துலகப் பண்பு மாற்றம் பற்றிய ஆய்வில் முக்கியமான தரவாகவும் அமைகிறது. எனவே இலக்கிய வரையறைகளை மட்டும் கருத்தில் கொண்டு அத்துறையின் குணவியல்புகளுக்கு ஏற்ப மாற்றம் பற்றிய ஓர் ஆழமானதும் பொருள் பொதிந்ததுமான ஆய்வாகவே அது அமையும்.

இங்குப் பெருவாரி எழுத்தாளர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களாக இருந்தாலும் அமெரிக்காவிற்குப் பணியின் பொருட்டுப் புமபெயர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் புது இலக்கிய பரப்பும் ஆழமும் இவரை ஒரு அனைத்துலகப் புலம் பெயரிய எழுத்தாளராக (ஆனால் எழுதுவது தமிழில்) அடையாளம் காணத் தூண்டுகிறது. அதுபோலவே நாகரத்தினம் கிருஷ்ணாவும் பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சுநாட்டுக் காலனி ஒன்றின் தமிழ் எழுத்தாளராய் இன்றைய அனைத்துலகப் பரிமாணம் கொண்டு விளங்குகிறார். அனைத்துலக இலக்கிய அடையாள அள்வுகோலால் அவரை அளக்க வேண்டியதன் தேவையைத் தமிழரங்குக்குக் கொண்டு வருபவராய் தனித்து விளங்குகிறார். இவ்விருவரில் எழுத்துகள் பற்றிய சர்ச்சையோ முக்கியத்துவமோ இன்றைய தமிழிலக்கிய சூழலில் இல்லாதது இவ்விருவரின் எழுத்தின் கோட்பாட்டு அறிவு தமிழிலக்கிய சூழலில் இல்லாததால் என்றும் கூறலாம். எனவே “தமிழ்ப் புலம்பெயரியம்” ஒரு கோட்பாடாய் வடிவப்படுத்தப்படவும் அதை ஒரு பொது இலக்கிய விவாதத்திற்குக் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்துவதும் இன்றைய தமிழின் நிலையை அனைத்துலக மட்டத்திற்குக் கொண்டுவருவதும் ஒன்று இன்னொன்றோடு பிணைந்ததாகும். இவ்விரு படைப்பாளிகளில் காஞ்சனா அவர்கள்(2) எதார்த்த இலக்கிய நடை மூலம் உச்சமான இடங்களைத் தொடுவதும் கிருஷ்ணா பன்மைக் கதையாடல் ( Multilevel Narration) மூலம் தன் நாவலைத் தொடங்கி மேலெடுத்துச் செல்வதும் காணக்கூடியதாகும்(3). அ. முத்துலிங்கம்(கனடா) நாவல் (பார்க்க முன்னுரை) என்று அழைத்து ஒருவித கதைக் கோர்வையை உண்மைகலந்த நாட்குறிப்புகள்  என்ற பெயரில் தந்துள்ளார்(4). எஸ்பொ. அவர்கள் (ஆஸ்திரேலியா) மாயினி என்ற நாவலாய் ஒரு இலங்கை சரித்திரத்தை மறுவரைவு செய்கிறார்(5). ஷோபாசக்தி தனது நாவல் மூலம் இலங்கையின் தமிழ்ப்போரை உள்ளடக்கமாக்குகிறார்(6) கருணாமூர்த்தி பல்வித வடிவங்களில் ஈழத்தையும் தமிழகத்தையும் பெருவாரியாய் எழுதுகிறார்(7) மெலிஞ்சிமுத்தன் என்ற எழுத்தாளர் தான் கண்ட புது உலகையும் ஈழத்தையும் கதை என்னும் புது அறிதலாய் மாற்றுகிறார்(8). இங்கு குறிப்பிட்ட இவர்களின் எழுத்துகள் இக்கட்டுரையில் பல்வேறு உட்பொருண்மைகளாய் ஆயப்படுகின்றன.

இங்கே குறிப்பிட்ட ஆசிரியர்களை மையமாக்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு மேலே சென்று கற்றல்(study) மேற்கொள்வதும் தேவை இல்லை. எஸ்.பொ. அவர்கள் பிறந்து தன்னாளுமையை உருவாக்கிய நாட்டில் இருக்கும்போதே பல படைப்பாக்கங்களுக்கு ஆசிரியர். அவரே பிற்காலத்தில் வேறொருநாடு சென்று எழுதும்போது அப்படைப்பு எவ்வாறு புலம்பெயரிய படைப்பாகுமென்று சிலர் கேட்கலாம். இங்கு மாயினி நாவலின் சிறப்பு ஒன்றைச் சுட்டலாம். மிகை எளிமைக்குட்பட்ட கதைசொல்லல் முறை இருந்தாலும் இன்றைய பின் நவீனத்துவ அகில உலகக் கதை உத்தியைத் தமிழில் உள்ளிருந்தே மாயினி என்ற பிரதி பெற்றுள்ளது. அதாவது வெளியில் இப்படியொரு உத்தி இருக்கிறதென்று தேடிச்சென்று அதைக் கற்காமலேயே தன் புலம்பெயர் ஆதங்கத்திலிருந்து (Expatriate anxiety) உள்முகமாகத் தன் கதைச்சொல்லல் உத்தியை நிறுவியுள்ளது இந்த நாவல். இலங்கையின் சிங்கள ஆட்சி குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் கதையைப் பிரதியாக்கம் (textualize) செய்கிறது மாயினி. இது போலவே ஏற்கனவே தமிழ் எழுத்தாளராய் ஈழத்தில் வாழ்ந்த அ.முத்துலிங்கம் உண்மை கலந்த நாட்குறிப்புகள்மேற்கொள்ளும் பிரதியாக்க முறை அதனைப் புலம்பெயர் நுட்ப உணர்வுகளை உள்வாங்கிய ஒரு பிரதியாய்க் கருத வைக்கிறது. அந்நாவல் வேறு நாவல்கள் போன்று எழுதப்பட்டதல்ல . நாற்பத்தாறு இயல்களும் நாற்பத்தாறு அனுபவங்கள்போல தொகுக்கப்பட்டவையாகும். நாற்பத்தாறு இயல்களும் ஒரு நபர் (அதாவது அது முத்துலிங்கமா?) அனுபவமாய் வருகின்றன. நாவலில் கதைசொல்லியின் அனுபவம் வேறு; எழ்துபவரின் அனுபவம் வேறு. நாவல் என்று அழைக்கப்படும் இந்த நூலும் சுய அனுபவங்களைத் தாண்டி இன்னொருவராய் எழுதுபவரைக் காட்டக்கூடிய தொனிகளுடன் பல இயல்களை அமைத்திருக்கிறது. உதாரணமாய் இயல் 41இல் அமைந்துள்ள கதையில் கதைசொல்லி (ஆசிரியனல்ல) ஒரு பாலஸ்தீனியரை முதன்முதலாய் சந்திக்கும் செய்தி வருகிறது. கற்பனையும் உண்மையும் சேர்ந்து எழுதப்பட்ட நாட்க்குறிப்புபோன்ற  இந்த நூல்  பாலஸ்தீனியரை ஒரு கற்பனையாகவும் படைக்கமுடியும். இந்தச் சாத்தியப்பாடு நாட்குறிப்புபோன்று கட்டமைக்கப்பட்ட பிரதியை நாட்குறிப்பின் உண்மைத்துவத்திலிருந்து நாவலின் கற்பனைக்குள் கொண்டு செலுத்துகிறது. இந்த உண்மை/ கற்பனைதான்  தேசக்கற்பனையின் தோற்றுவாய் என்கின்றனர் பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றோர்(9).

மற்ற எழுத்தாளர்களின் உந்துதல் நிலம் பெயர்ந்த வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்கனவே எதுவாக இருந்தார்களோ அதற்குமான முரணினிலிருந்து தோன்றியவை எனலாம். எழுத்தாளுமை நிலம் பெயரியக்கத்திலிருந்து  இங்கு முகிழ்க்கிறது. இதில் பல்வேறுவகை மாதிரிகளை ஒவ்வொரு எழுத்தாளரும் முன் வைக்கிறார்கள்.

 எழுத்தாளுமை – பல்வேறுவகை மாதிரிகள்

பொ.கருணாகரமூர்த்தி, மெலிஞ்சி முத்தன், ஷோபா சக்தி போன்றோரிடத்தில் தாங்கள் பிறந்த நாடுகள் பற்றிய கதைகளே தங்கள் கதைகளாக வெளிப்படுகின்றன. கருணாகரமூர்த்தியின் கதையாகிய சிநேகிதனைத் தொலைத்தவன்என்ற கதையில் பாலசந்திரன் என்ற பழைய நண்பனைத் தேடிக்கொண்டுவரும் கதைசொல்லி தனது பள்ளிக்கால நண்பனைக் கண்டு பிடிக்கறதில் பெரிய மகிழ்ச்சி அடைகிறான். கடைசியாகப் பாலச்ந்திரனைக் கண்டு இளம்வயதில் இருவரும் கழித்த நாட்களை நினைவூட்டும் கதைசொல்லியை நோக்கிப் பாலசந்திரன் தனக்கு யுத்தத்தில் இடப்பெயர்வு ஏற்பட்டதாலும் யுத்தத்தின் விளைவாலும் ஞாபகமறதி அடிக்கடி ஏற்படுவதைக் கூறி தன் வாழ்வின் துயரை மறைமுகமாய் தெரிவிக்கிறான். கதைசொல்லி ஜெர்மனியிலிருந்து வந்து தனது நாட்களைப் பழைய ஞாபகத்தில் திளைக்கவிட்டுத் திரும்ப நினைக்கயில் யார் மச்சான் நீஎன ஒரு கேள்வியைப் போடுகிறான் பாலசந்திரன்.

மெலிஞ்சி முத்தனின் ஒரு கதையின் பெயர் பனி மூடிய நதி‘  என்பது. வெளிநாட்டில் நடந்து திரிகிற கதைச்சொல்லி தான் எதற்கு வீட்டிற்குப் போகவேண்டும் என்று யோசிக்கிறான். நிலம் முழுக்க பனி கொட்டி வெள்ளை வெளீரெண்டு கிடக்கேக்க ஏதோ ஒரு பிரச்சினையுமில்லாத வெள்ளை உலகத்தில் நடந்து திரிகிற உணர்வு தான் எனக்குள வருதுஎன்று கூறும் கதைச்சொல்லி தன் கிராமத்தை நினைக்கிறான். பள்ளிக்கூட நாட்களில் அவனும் அம்மய்யாவும் சேர்ந்து காணி துப்புரவாக்கியதும் அவர் ஆசீர்வதித்துத் தந்த உப்பை மோட்டுவளையில் கட்டியதும் ஞாபகம் வருகிறது. சிவன் கோயிலடியில் ஆமிஇறங்கி வாறான் என்று கேட்டு இடம் பெயர்கிறார்கள். கடைசியில் அம்மய்யாவின் மனப்பிறழ்வுடன் தன் வாழ்க்கையும் ஒரு மனப்பிறழ்வுதான் என ஞாபகம் கொண்டு கதை முடிகிறது.

ஷோபாசக்தியின் லைலாஎன்ற கதையும் தனது நாட்டைப்பற்றிய ஞாபகத்தில் புனையப்பட்ட ஒரு கதைதான். இந்தக் கதையானது கதைசொல்லியின் புலம் பெயர் வாழ்க்கையைப் பற்றிக்கூறிவிட்டு ஈழ போராட்ட குழுக்களில் இருந்த ஒரு பெண் பற்றிய கதையைச் சொல்கிறது. “பிரான்சில் ஆப்ரிக்கர்களும் அரபுக்களும் சிந்திரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்துவாழும் பகுதியில் ” கதைச்சொல்லி பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி சுத்திகரிக்க ஆசைப்படும்பொரு நபராய் வாழ்கிறான். அவன் வாழ்வது பதின்மூன்று மாடிகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. கதைசொல்லி ஒருநாள் வெள்ளை நாயுடன் ஒரு பெண்னை லிப்டில் பார்க்கிறான். பின்பு அவள் முன்பு ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவள் என்று கதை விரிவடைகிறது. கதை முடியும்போது இறந்து இரண்டு மூன்று நாள் ஆன பிணத்தைப் போலீஸ்வந்து எடுத்து செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு பாரிஸில் நடக்கும் ஒரு போராட்டத்தில் பிரபாகரன் படத்துடன் பிரஞ்சு மொழியில் உரக்க முழங்குகிறாள் அப்பெண். போராட்ட இயக்கம் பற்றிய கதாசிரியனின் நுட்பமான கிண்டல் வெளிப்பட எழுதப்பட்ட கதை இது. இக்கதை புலம்பெயர் எழுத்துகள் ஒரு பார்வை உடையன அல்ல என்பதை விளக்குவதுபோல் எழுதப்பட்டுள்ளது(10).

இதுபோன்று பல கதைகளாகக் கொண்டு வந்து பல மலர்களால் கட்டப்பட்ட மாலைபோல் அமைக்கப்பட்ட புத்தகமான உண்மை கலந்த நாட்குறிப்பில்ஒரு கதை எழுத்தாளரின் / கதை சொல்லியின் தந்தை சொன்ன ஒரு வாசகத்தை மையமாக்குகிறது. இலங்கையில் மவுண்லவினியா என்ற, கொழும்புவிற்குச் சற்று தூரத்தில் இருந்த ஊரில் 1958ம் ஆம் ஆண்டு மே மாதம் பண்டாரா நாயக்கா தனிச் சிங்களம் சட்டத்தைக் கொண்டு வந்ததால் அதனைத் தமிழர்கள் எதிர்த்த போது நடந்த கலவரத்தில் கதை சொல்லியின் குடும்பத்தை ஒரு சிங்கள்வர் பாதுகாக்கிறார். பின்பு கதைசொல்லியின் குடும்பம் அகதி முகாமுக்குப் போகிறது. சிறுவனான கதைசொல்லிக்குக் கிடைத்த நான்குபேர் நுழையக்கூடிய பெரிய சட்டையுடன் முகாமில் தஞ்சமடைகிறான். பின்பு நாலுநாள் கப்பல் பயணம் செய்து “தங்கள் தேசத்துக்குச்” (யாழ்ப்பாணம்) செல்கிறார்கள். கதை சொல்லி தான் அகதிமுகாமுக்கு விரட்டப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட ராபின்சன் குருசோ நாவலைக் கப்பல் சத்தத்துக்கிடையே படித்தபடி இருக்கிறான். குருசோ தனியாய் தாஅள் இல்லாத தீவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவன். மீண்டும் கதை சொல்லி கொழும்புபோகப் புறப்படுகையில் அவரது தந்தை ஒருதடவை அடித்து ருசிகண்டவன் திரும்பவும் அடிப்பான். இது பாதுகாப்பான நாடு இதை யாரும் பறிக்கமுடியாது என்கிறார் யாழ்ப்பாணம் பற்றி.  கதை கேர்ணல் கிட்டு விளக்கத்துடன் முடிகிறது. கதையின் தலைப்பு “ஐயா சொன்னது” .

இங்குக் குறிப்பிடப்பட்ட நான்குவித கதையுண்மைகளிலும் பல்விதமான கருத்தம்சங்கள் பின்னியுள்ளன. “சிநேகிதனைத் தொலைத்தவன் கதையில் ஞாபகம் பற்றிய உள்ளடக்கத்தோடு புலம்/பிறப்பிடம் என்ற எதிரிணை தொடர்பு கொள்கிறது பிறப்பிடத்தின் யுத்தம் பின்னணிக் கரு ஆகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை புலத்தில் ஏற்படும் நினைவுப்பிறழ்வுடன் பிறப்பிடத்தின் கொடூர யுத்தத்தால் ஏற்படும் அம்மபய்யனின் நினைவுப் பிறழ்வுடன் சம்பந்தப்படுகிறது. “லைலா” கதை இன்னும் சுவாரஸ்யமாய் யுத்தத்தில் (ஓர் இயக்க செயல் பாட்டாளியாய் இருந்ததால்) இலங்கை நாயகி தன் அழிவை உள்ளேற்று ஒரு நாள் பாரிஸின் ஒரு மூலையில் கதைசொல்லியின் கேலிக்குள்ளாகிப் பிணமாய் நாறுகிறாள். முத்துலிங்கம் கதையில் கதைசொல்லியின் ஞாபகத்தில் ஐயா சொன்ன வாக்கியம் அடிப்பதில் ருசிகண்டவன் நிறுத்தமாட்டான் என்பது தனது தாயக நினைவாகிறது. எல்லா கதைகளிலும் (ஜெர்மனி-ஈழம்; கனடா-ஈழம்; பிரான்சு-ஈழம்) இரு நாடுகளுக்கு மத்தியில் அலைபடும் நினைவு-நினைவினமை, உடல்(புலத்தில்) – உயிர் (ஈழத்தில்) என்ற இரு முக மன முரணில் (Tension) ஏற்படும் பலவித இழைகள் கதையாடலாகின்றன. கோட்பாட்டளவில் அறிஞர்கள் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் மனமுறுகல், உரையாடல் தீர்வுகள் (Negotiation) என்று விவரணப் படுத்தப்படும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களில் எவ்வாறு இன்னும் ஆழம் பெறுகின்றன என்பதை இந்த நான்கு கதைகளை உதாரணமாய் வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

வேறுபட்ட புலம் பெயரியம்

புலம்பெயரிய இலக்கியம் (Diaspora or Transnational Literature) என்று தமிழ்ச்சூழலில் வழக்கமாய் பேசும்போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்துக்களை மட்டுமே மனத்தில்வைத்து எழுதுகிறார்கள். இன்றைய தமிழ் எழுத்துச் சூழல் மிகவும் ஆழமானதாகவும் அகலமானதாகவும் உள்ளது. தமிழ்த்துறைகள் பழைய இலக்கியங்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்தும் தற்கால இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து செயல்படுவதால் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் பற்றிய அறிமுகம் இல்லாதிருக்கும் சூழலில் இரண்டு முக்கியமான புலம்பெயர் எழுத்தாளர்கள் காஞ்சனா தாமோதரன் மற்றும் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவர்.

இவ்விருவரும் முற்றிலும் வேறுபட்ட புலம்பெயர் அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தின் கலாசார மற்றும் எழுத்துச்சூழலைப் பெரும்பாலும் உள்வாங்காமல் புலம்பெயர்ந்தபின்பு ஏற்பட்ட பன்முக உந்துதலில் இருந்து இலக்கியத்தை ஒரு வாழ்நிலைச் சட்டகமாய் (Life Paradigm) இயல்பில் கண்டிருப்பவர்கள். இது இவர்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்று தருகிறது. ஈழத்தவர்களின் புலம்பெயரியம் வேறு, இவர்களின் புலம்பெயரியம் வேறு என்று சொல்லுமளவிற்கு இவர்களின் எழுத்துக்களின் தத்துவ பின்னணி மாறுபட்டதாகவுள்ளது.

முதலில் இவ்விருவரின் புனைகதைகளின் ஒட்டுமொத்த வடிவமைப்பே வித்தியாசமாகவுள்ளது. காஞ்சனா அவர்களின் “மரகதத்தீவு” என்ற கதைத் தொகுப்பும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஒரு நாவலும் (மாத்தா ஹரி) இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்களின் புலம்பெயர்க் காரணமும் வேறு. தாயகத்தில் எந்த இனயுத்தமுமில்லை. இவ்வாறு முற்றிலும் வேறான புலம்பெயரியம் இவர்களின் வாழ்விலும் எழுத்திலும் காணப்படுவதை மறக்காமல் இவர்கள் எழுத்துக்களைப் பார்க்கவேண்டும். இலக்கியம் என்பது எழுதப்பட்ட பிரதி(written text) மாத்திரமே என்ற நிலைபாட்டை புலம்பெயரிய ஆய்வாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும். இலக்கியத்தையும் வாழ்வையும் சேர்த்து ஒரு பிரதியாகக் கருதி அணுக வேண்டும். இலக்கியம் எழுத்துக்கு வெளியில் வந்து பரவுகிறது. வாழ்வால் அது ஒரு புதுத் தன்மை அடைகிறது. அது ஒரு நிகழ்த்தலாகிறது.

மரகதத்தீவு” தொகுப்பில் புலம் எவ்வாறு கட்டமைக்கபடுகிறது? அத்தொகுப்பின் ஐந்து நீண்ட கதைகளும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்து ஆவணமாகத் தெரிகின்றன. “மரகதத் தீவு” என்ற 42 பக்கக் கதையும் ஒரு மிக வித்தியாசமான கதைசொல்லலை அறிமுகப்படுத்துகின்றன. கெல்லி என்ற இளம்பெண் அமெரிக்காவுக்கு அயர்லாந்திலிருந்து  வந்து குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்து பிறந்தவள். அவள் கீழ்நிலைப் படிப்பை முடித்துவிட்டுப் பல்கலைக்கழகத்துக்குப் போகையில் தந்தை வாங்கிக்கொடுத்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி அயர்லாந்து செல்கிறாள். அந்த  மண்ணையும் தன் தந்தையின் குடும்பத்தையும் முதன்முதலில் பார்க்கும் பரவசய்த்தையும் அங்கு அவள் கண்டு லேசாகக் காதல் கொண்ட இளைஞனை மீண்டும் அமெரிக்காவில் காண்பதையும் கதை கூறுகிறது.

அடுத்த கதையான கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியில் வாழ்ந்த க்யூபர்களைப் பற்றியது. ஒபாமாவுக்கு ஓட்டுப்போடும் தலைமுறையைச் சார்ந்த கூப இளைஞர்களும் இளம்பெண்களும் பிறந்த பிறகு மீண்டும் புரத்ட்சிகர க்யூபாவைத் தேடிச்செல்லும் க்யூபர்களையும் படம் பிடிக்கிறது கதை. அவர்களின் பழக்க வழக்கங்கள், சாப்பாடு; நம்பிக்கை, ஆட்டம் பாத்தம் என எல்லாம் மிகத் துல்லியமாய்ச் சொல்லுகிற கதை.

 இந்த இரு கதைகளையும் சொல்வதற்குக் காஞ்சனா இரு புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் கதை வேறொரு களத்தில் புலம்பெயர்த் தத்துவத்தோடு பயணிக்கிறது. தமிழிலக்கியத்தில் ஒரு புது -இதுவரை இல்லாத அம்சத்தைத் தொட்டு ஒரு உயரத்தை எட்டுகிறது. கதை சொல்லிகளான இந்தப் பிரத்தியேகமான பாத்திரங்கள் மூலம் காஞ்சனாவும் தமிழ்க் கலாசாரத்தின் புலம்பெயர் அம்சம் பற்றிய வேறொரு விஷயத்தை நம் முன் வைக்கிறார். ஒரு எழுத்தாளர் தன் வாழ்விலிருந்து தன் மொழிக்குள் ஒரு பிரத்திதேக வழிப்பயனத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் புலன் அனுபவத்திற்குள் தன்னைப்போன்று இன்னும் சிலகாலத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்தவர்களின் உகலத்துக்குள் அவர்களிடமிருந்து வந்த ஒரு கதைசொல்லியின் மூலம் புகுகிறார். தமிழ் என்பது ஓர் உலகளாவியப் பரந்த வேர்ப்பற்றைக்கொண்டதென  சொல்லாமல் சொல்லும் கதைசொல்லலாகிறது. வெறும் எதார்த்த நடையில் புனையப்ட்ட இக்கதைகள் கண்ணுகுத் தெரியாத ஆழமான அர்த்தங்களைப் படைக்க வல்லனாவாகின்றன. இவ்விரு வந்தேறி சமூக இளஞர்களாய், காஞ்சனாவின் உள்ளே இருக்கும் தமிழ்க்குணம் பரிவர்த்தனை அடைகிறது. தமிழ் என்பது குறுகியதல்ல. அகில உலகத்தின் மூலை முடுக்குகளிலுள்ள தாய் நிலத்துக்குத் தமிழனின் தாய்நிலைப்பற்று இட்டுச்செல்லும்  என்று கதையமைப்பு மூலம் புரியவைக்கிறார். இதில் உள்ள ஆச்சரியம் கதை எந்தக் கருத்தையும் வலியுறுத்தவில்லை. கதையின் அமைப்பே வாசகனுடன் பேசுகிறது.

மாத்தா ஹரி” என்ற நாவலின் புனைவும் ஒரு முக கதைச்சொல்லலைப் பல்வேறு தளங்களில் நகர்த்துகிறது. ஒரு தளத்தில் மாத்தா ஹரி என்ற பெயரில் அக்காலத்தில் பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளில் பேசப்பட்ட ஒரு பெண்ணைப்பற்றி விளக்குவதும் இந்த நாவலின் கதாநாயகியான பவானி என்ற வழக்கறிஞர் பெண்மணியை மாத்தா ஹரியுடன் இன்னொரு தளத்தில் ஒப்பிடுவதும் நாவல் கதைக்கு வேறு பொருள்களைத் தருகின்றன.

இந்த நாவலின் புனைவுவழியாக பல நபர்கள் பேசுகிறார்கள்; கிழக்கத்தியர் பேசுகிறார்கள்; மேற்கத்தியர்கள் பேசுகிறார்கள்; மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் பேசுகிறார்கள்; பல்வேறு காலங்கள் பிரதிக்குள் நுழைந்து பேசுகின்றன. புலம் என்பது ஒரு பெரிய வாசல்போல் திறக்கப் பல அறைகள் உள்ளே இருப்பது தெரிகிறது. ஓரிடத்தில் நாவலாசிரியனும் ஒரு பாத்திரம்போல் நாவலின் பிரதியியல் வெளியில் (textual space) நுழைந்து இப்படி சொல்கிறான்.

பவானி நீ இன்னுமா இங்கே இருக்கிறாய்? போகவில்லை?

….இது நான் கேட்கவேண்டிய கேள்வி. அகால நேரத்தில் இப்படி எழுந்து உட்கார்ந்துகொண்டு..

வேண்டுமானால் இன்னொருமுறை படித்துபார்க்கிறாயா? நீ நினைக்கிறமாதிரிதான் மாத்தா ஹரியைப் பத்தி சொல்றதான்னு குழம்பிப்போறேன்.”

இந்த இடத்தில் இருநாடுகளின் சரித்திரங்கள், கதை சொல்முறைகள், ஒரு நாட்டின் காலனியம், அதுபோல் காலனியத்திலிருந்து விடுபட்டாலும் அதன் ஞாபகத்திலிருந்து விடுபடாமை, காலனியத்தின் ஆச்சரியங்கள் , ஏமாற்றங்கள், குற்றங்கள், மன்னிப்புகள் எல்லாம் கதையின் இழைகளாய் ஆகின்றன. இரண்டு தேசங்கள் வெறு வரை படங்களல்ல. அடுத்த தலைமுறையான ஹரிணி (பவானியின் மகள்) கதையை இழுத்துக்கொண்டு பல்வேறுநபர்களை ஒருமுனைபடுத்தியபடி பாரீஸில் அலைகிறாள். நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் மாறுபட்ட புலம்பெயர் இலக்கியம் உருவாவதை இங்கு அறிகிறோம். புனைவை ஒரு அந்நியப்பெண்ணின் பெயரில் மையப்படுத்தி நாவல் அவள் பெயரான மாத்தா ஹரியைத் தலிழுலகுக்குப் பறை சாற்றுகிறது. காஞ்சனாவின் புலம்பெயரியம் ஒருவிதமென்றால் இருநாடுகளை ஊடாடவிட்டுக் கதையமைப்பைக்கொண்டு வந்த நா.கிருஷ்ணா இன்றும் ஒரு காலை பாரீஸிலும் இன்னொரு காலை புதுச்சேரியிலும் ஊன்றியுள்ள தமிழினக் கதையாடலைத் தருகிறார்.

காஞ்சனா தன் கதையாடலை ஓர் உலகப் பொது ஓர்மையோடு (எல்லோரும் வந்தேறிகள்) இணைக்கிறார். தன்னதிலிருந்து பிறத்தியாரை நோக்கிய அக்கறை அங்கு முகிழ்க்கிறது ஆனால் நா.கிருஷ்ணாவிடம் தனதும் பிறரதும் பின்னிப் பிணைந்திருக்கும்  எதார்த்தத்தின் பல்வேறு கண்ணிகள் முடிச்சவிழ்ப்பதற்காய் வேண்டுகோள் விடுக்கின்றன. புலம்பெயரியம் எவ்வளவு வேறுபட்ட உலகத்தையெல்லாம் திறந்து விடுகின்றது என்று ஆச்சரியப்படுகிறோம்.

புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளனின் கதைகளில் தன் தாய் நாடு பற்றிய தேட்டம் அவனை முதுகுக்குப் பின்னாலிருந்து தள்ளி உந்துவதுபோல இன்னொரு அம்சமும் அவனை விரட்டுகிறது. தனது அன்றைய வாழ்நிலையோடு பிணைந்திருக்கிறது எதிர்காலம், எனவே சென்ற நாட்டை அறிந்துகொள்ளவும் தனது வாழ்வை வளமாக்கவும் விரும்பும்போது அந்த மண்ணில் காலை ஊன்ற விரும்புகிறான். அதனால் ஒன்று சேர்ந்த மண்ணையும் அவனால்/ அவளால் விட்டுவிட முடியவில்லை. பொ. கருணாகரமூர்த்தியின்  “ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்” என்றொரு கதையும் “முட்டர்பாஸ்”  என்ற ஜெர்மன் மொழித் தலைப்பைக்கொண்ட கதையும் ஜெர்மன் நிலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கதையாக வனைகின்றன. முதல் கதை ஒரு நகைச்சுவைக்குரிய வெளியைத் (space)  தன் எழுத்தில் ஏற்படுத்துகிறது. இது தன் தாயகத்தைத் தவிர எதுவும் தெரியாமல் புலத்தில் வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை  மறுக்கிறது. கஞ்சத் தனத்துடன் வாழும் ஜெர்மன் வகுப்புத் தோழி பற்றி ஒரு ஈழ மாணவி (காருண்யா) ஞாபகப்படுத்துவதுபோல கதை அமைந்திருக்கிறது. காருண்யா ஈழக்குடியேறியின் மகளாய் ஜெர்மன் மாணவியைக் கஞ்சத்தனமானவள் என்பது புலம்பெயர்ந்தவர்கள் தமக்கான ஒரு வெளியை (நகைச்சுவை உணர்வுடன்) உருவாக்குகிறார்கள் எனக் காட்டுகிறது. மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” என்ற கதை “எனது ஆடைகளைக் களைந்தார்கள்; நாக்கை உயர்த்தி ஆவெனும்படிக் கட்டளையிட்டார்கள்…” என்று தொடங்கி, ஐரோப்பாவில் தான் எப்படி அலைய நேரிட்டது எனக்கூறும் பாத்திரத்தை மையமாகக்கொண்டு விளக்குகிறது. பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ என்று அலைகிற புலம்பெயர்ந்த அகதி வாழ்க்கையைக் கூறுகிறது. நான் படுத்து கிடக்கிறேன் எனது மார்பகங்கள் வீங்கிக்கொண்டே வருகின்றன. எனது ஆண்குறியின் கீழே ஒரு பெண்குறியும் முளை விடுகிறது..என்று கதைசொல்லி பாலின அடையாளமற்றவனாக மாறுகிறான்.

புலம் பெயர்ந்தவன் தன் தாயை நினைப்பதுபோல் தாய் மண்ணை நினைக்கிறான். அப்படி புலம்பெயர்ந்தும் தன் தாய் மண்ணைப்பற்றி எழுதாத எழுத்துகளில் ஒன்றில் நகைச்சுவை தோன்றுகிறது. அல்லது கதை சொல்பவனின் உடல் ஆணாகவும் பெண்ணாகவுமின்றி மாற்றமடைகிறது.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலை பயணம்” என்றொரு கதையைக் காஞ்சனா தாமோதரன் எழுதுயுள்ளார். இக்கதையையும் ஆசிரியரின் உள்ளடக்கக் கவனம் பிற கதைகள் போல் ஐயர்லாந்து என்றோ க்யூபா என்றோ இல்லை. இக்கதைஆசிரியர் வாழும் அமெரிக்கா பற்றிய கதை. சுமார் 50 பக்கங்களுள்ள இக்கதை நியுயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துபோன மணி என்பவனின் காதலி மனைவியின் அனுபவமாய் விரிகிறது. அவள் ஓவியம் வரைபவள். அவள் அமெரிக்காவின் உடப்பரப்பையும் காலத்தின் நீட்சியை அளந்து அதன் ஆதிவாசிகள் மூகம் அம்மண்ணின் ஆதியையும் தொடுகிறார். பழையனவும் புதியனவுமாய் எல்லாரின் கடவுள்களும் கை கோர்த்து உலாவுகிற அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 11 மீண்டும் வருகிறது. இந்தியப் பெண் தனது அமெரிக்கா வாழ் புலம்பெயர் வாழ்வில் ஓரளவு அமெரிக்கனாகி விடுவதாய்  நம்மைப்போன்ற  இந்தியர்களுக்குப் படும்போது கதை முடிகிறது. அல்லது அயர்லாந்து கதைசொல்லியாக மாறும் தமிழ் மனம் அமெரிக்கனாக/ளாக மாறுவதில் முரண் ஏதும் இல்லை என்று கூறலாமா? ஆனால் கதை எழுத்து அசாத்தியமான வலுவுடன் அமைந்து நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

முட்டர்பாஸ்என்ற கதையில் மகிமாவும் ஆனந்த சிவனும் கணவன் மனைவியாய் வாழமுடியாமல் பிரிகிறார்கள். அவர்களின் இருபெண்குழந்தைகள் தந்தையோடு ஒரு கார் சவாரி செய்கின்றனர். குழந்தைகள் பிங்கலையும்  சாதனாவும் வழியில் போகிற அதியுல்லாச டிரக் வண்டியை ஜெர்மன் மொழியில் திட்டுகின்றன, பிரிந்துபோன அம்மா கொடுக்கும் இட்லியைச் சாப்பிட்டுவிட்டுப்போகலாமா எனத் தொலைபேசியில் பிங்கலை கேட்கிறாள். ஆனந்தகுமார் சரி என்ற பின் புறப்பட்டு பயணம் வரும் வழியில் குழந்தைகளிடம் ஒரு ஆண்ட்டியுடன் பேசிவிட்டுவருகிறேன் என்று கூறி அவன் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கிறான். அவள் இவன் பெயரின் அர்த்தம் பற்றிக் கேட்டபோது சதா உல்லாசமாக இருப்பவன் என்று கூறி அவள் உடலைச் சேர்த்து இறுக்குகிறான். பின்பு அவனது மகள் தாய்க்கு இவன் மூலம் பிறக்கப்போகும் மூன்றாவது குழந்தைக்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கேட்கச்சொல்கிறாள் என்கிறாள்.. அதற்குப் பார்க்கலாம் என்கிறான் ஆனந்த சிவன்.

இங்குப் புதிய நாட்டின் மூலம் தமிழ் பண்பாட்டில் வந்துசேரும் முற்றிலும் புதிதான வாழ்க்கைமுறையும் ஆனந்த சிவனின் குழந்தைகளிடம் அவன் காட்டும் சாவகாசமும் பொ.கருணாகர மூர்த்தியால் எழுதப்படுகின்றன. மொத்தத்தில் இந்த கதை உலகத்தில் ஜெர்மன் மாணவியின் கஞ்சத்தனம், ‘வேருலகுகதையின் ஆண்-பெண் பாலின மாற்றமாய் விளக்கப்படும் அலைதல், ‘முட்டர்பாஸ்கதையில் வெளிப்படும் புதிய தாம்பத்தியம், நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்த கணவைன் துக்கம் தாளாமல் அமெரிக்காவை அதன் ஆதிக்குடிகளின் வழி தன் ஓவிய மனத்தில் பதிவு செய்யும் தமிழ்ப்பெண் – இவர்கள் எல்லோரும் தங்கள் பிறந்த இடத்திலிருந்து கொண்டுசென்றவற்றை(பழக்கமாகவோ, நியதியாகவோ, விழுமியங்களாகவோ, நாகரிகமோ இருக்கலாம்) மட்டும் மீண்டும் வாழவில்லை. இவர்கள் சென்ற இடத்தில் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறார்கள். ஏதோ ஒரு புது அம்சத்தை தம்முடையதாகப் படைத்திருக்கிறார்கள். தாம் கொண்டுவந்ததும் அங்கு பெற்றதும் ஓர் உற்பத்திப் பண்பை பெற்றுள்ளன. பழைய உலகமும் புதிய உலகமும் இங்கு ஓர் உரையாடலை மேற்கொள்கின்றன. 21ம் நூற்றாண்டில் தமிழுலகம் விரிவடைந்து  அகில உலக நாகரிகத்தில் தனக்கும் ஒருபங்கு இருக்கிறதென காட்டுகிறது. யாப்பு உடையாக் கவிதையைக் கைவிட்டு புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டதுபோல் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பேசிய சமூகம் உலகின் எல்லா தலை நகர்களிலும் தன் காலைவைத்து நடமிட ஆரம்பித்துள்ள போது அதுவரை நினைத்து பார்க்காத வாழ்வை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. இச்சமூகம் அதற்குத் தயார் என்று கூறுகிறது.

இத்தகைய புலம்பெயர் எழுத்தாளர்கள் தம் தாய்மண்ணைப் பற்றி எழுதாதபோது வாழ இடம் கொடுத்த நாட்டைப்பற்றி எழுதுகிறார்கள். முட்டர்பாஸ்கதையில் நிறைய ஜெர்மன் மொழி சொற்களும் வாக்கியங்களும் வருகின்றன. அதுபோல் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் நிறைய பிரெஞ்சு மொழி சொற்களும் வாக்கியங்களும் உள்ளன. இது தமிழ் மொழி அமைப்பையும் அதன் உலகப்ப்ரவலின் போது ஏற்படும் உலகமொழிப் பாதிப்பையும் காட்டுகின்றது. இப்படி மெதுமெதுவாகத் தமிழ் பேசப்படும் மனங்களில் புதிய உலக, மொழிஅனுபவக் கூறுகள் நுழைவது ஆய்வுக்குறியதாகும். அதுவும் சமஸ்கிருதம், பர்ஷியன், அராபிக், ஆங்கிலம் என்ற வரிசையில் இப்போது ஜெர்மனும் பிரஞ்சும் சேர்ந்துகொள்கின்றன. அமெரிக்கா வாழ் காஞ்சனா கதையில் ஆங்கில மொழி எழுத்துக்கள் கதைக்குள் வருவதற்குப் பதில் கதையாடலில் உடலுக்குள் கதைவித்தை மூலம் அமெரிக்கா மனத்துள் நடத்தும் பாய்ச்சல் கவனிப்புக்குரியதாகும்.

இன்னொரு சிந்தனையாகப் புலம் பெயர் எழுத்துக்களில் காணப்படும் தாய் நாட்டின் அழிவு என்னும் ஒருவகை பேரழிவு சார் உருவகம் (Holocauste Trope) பற்றிக் குறிப்பிடவேண்டும்^. இது பொ.கருணாகரமூர்த்தியின் பதுங்கு குழி‘  என்ற கதையில் வெளிப்படுகிறது. சிங்களப்படைகள் பதுங்கு குழியில் யுத்தத்திற்குப் பயந்து ஒளிந்த மக்களை மண்போட்டு புல்டோசரால்மூடி நிரவிவிட்டு அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடியது என்ற வாக்கியத்தில் கதை முடிகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை (“பேர்த்தோக்கள் எப்போதாவது வருகிறார்கள்”) பிரேதங்களுக்கு வாழ்வுபற்றிய பயம் இருக்காதென்னும் நினைப்பு எனக்குள்ளிருந்து எழுவதால் நான் இன்னமும்  பிரேதமாகவில்லையென நினைக்கிறேன்என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது.  அதிகமும் கதை அம்சம் இல்லாத கதை இந்த ஈழ எழுத்தாளரின் மன நெருக்கடிபோல்  பசி மற்றும் பிணங்கள்  என்ற இரண்டு நினைவுகளையே சுற்றிசுற்றி வருகிறது. நான் மரணித்த பின்னர்என்னுடலைத் தின்பீர்களா? என்று கேட்கும் கதை சொல்லியின் குரல் தெளிவடையும்போது புலத்திலிருந்து இங்கே இப்பொ பத்து மணியாக இருக்கலாம் ஈழத்தில் இரவாக இருக்கும்என்று பிறந்த மண்ணின் காலத்தைத் தன் ஆன்மாவிலிருந்து மறக்க முடியாமல் நினைக்கிறது. கடைசியாக யுத்தங்களை நிறுத்துங்கள்‘  என் குரலை தயவு செய்து மொழி பெயருங்கள், மனித இனம் பிரபஞ்ச பேரியக்க பெருவட்டத்தின் சத்திய ஞான தளத்தில் பரிணமிக்க வேண்டியிருக்கிறதுஎன்ர விண்ணப்பத்தை முன்வைத்து கதை முடிவடைகிறது. இது கதையா கதைபோன்ற மனதின் கூக்குரலா என்று கூறமுடியவில்லை. அதாவது மெலிஞ்சி முத்தனின் சிறுகதை வடிவம் உணர்ச்சிக்கொந்தளிப்பால் வடிவ ஞாபகத்தை மீறியே செல்கிறது. இதுபோல் ஊரின் யுத்தத்தைப் புராண படிமங்கள், பேய்கள், ராட்சசர்களை ஞாபகங்களாகப் பார்க்கிர வேறு கதைகளையும் இவர் எழுதுயுள்ளார். (பார்க்க: கூட்டிச் செல்லும் குரல்‘(11) . பேய்களுக்கும் யுத்தத்துக்கும் உள்ள உறவு புறநானூற்றிலிருந்தும், கலிங்கத்துப் பரணியிலிருந்தும் தொடர்கிறது. இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் காஞ்சனாவின் ஒரு கதை ஏற்கனவே பார்த்ததுபோல் தாய்நாடுபற்றிய விபரீதத்தை ஈழத்திலிருந்து சென்றவர்கள் பேசுவதுபோல் புகலிட நாட்டின் இரட்டைக் கோபுரத் துயரத்தை கதை வடிவமாக்கியிருப்பதாகும். அதாவது புகலிட ஞானத்தில் (Expatriote Memory) இந்த பேரழிவு உருவகம் தவிர்க்கவியலாததாக இருக்கிறது.

இலக்கிய கதையாடல் வழி உணர்வுருவங்கள்

இனி இத்தகைய இலக்கிய கதையாடல்கள் (Literary Narratives) வழியாக ஊடி பரவிச் செல்லும் உணர்வுருவங்கள் பற்றிய விளக்கத்துக்குப் போகவேண்டும். பல இலக்கிய பிரதிகளில் ஒருவிதமான தோற்றம் தேடுதல் (search for the origin) உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் வரும் ஹரிணி பாரிஸில் இயற்கையாய் தன்னை இடம் பெயர்த்து வைக்கிறாள். அவளுக்கான தோற்றம் புதுச்சேரியில் உள்ளது. தன் தாயையும் அவளது வரலாற்றையும் மாத்தா ஹரியைப் பற்றி ஐரோப்பா தேடுவதுபோல் தேடுகிறாள். கடைசியில் கிருஷ்ணாவின் கதையாடல்தான் அதன் மூலம்-தோற்றம் என்று வாசகர்கள் நம்பும்படி கதை முடிகிறது. ஹரிணி தேடுகிறவளும் தேடப்படுகிரவளுமாகிறாள். அ. முத்துலிங்கத்தின் கதைசொல்லி தனது தன்மையை (அகம்-நான்) மீண்டும் மறு கட்டமைப்பு(Reconstitue) செய்ய முடியாமல் அமைவதால் வெறும் உதிரி நாட்குறிப்புகளாகவே முடிக்கிறார். தன் தோற்றம் (நாடு) பற்றிய கண்டுபிடிப்புத் தனது நாவலெழுத்தாய் மாறுகிறது. எஸ்.பொ.வின் எதிர்வரலாறு (Anti-history)  அதீத சக்தி படைத்த மருந்து ஒன்றால் வரலாறு கடந்து எப்போதோ இறந்துபோன மனிதர்களோடு உரையாடல் மேற்கொண்டு மனம் மகிழ்கிறது.  அதாவது எதார்த்தமும் புனைவும் மீண்டும் மீண்டும் வித்தியாசமில்லாமல் இணைகின்றன. இந்த இடத்தில் காஞ்சனாவின் இதுவரைக் குறிப்பிடாதக் கதையைக் கொண்டுவரவேண்டும். “சியர்ரா நெவாடா”  என்ற தலைப்பு கொண்ட கதையில் பனிமலையேறும் உள்ளடக்கம் வருகிறது. பல நூறுவருடங்களுக்கு முன்பு மலையேறிய ஒரு பெண்ணின் உடல் பனிக்கிடையில் கண்டுபிடிக்கப்டுவது கதையாகிறது. நவீனகாலத்தைச் சேர்ந்த ஒருவன் கடைசியாய் வந்து பார்க்கும்போது குகைக்குள் பெண்ணுடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட பைக்குள் ஒரு காகிதப் புத்தகத்தில் பழைய ஆங்கில எழுத்துரு காணப்படுகிறது. அங்குக் கிடப்பவள் பனிக்கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண். இந்தக் குறிப்பிட்ட மலையுச்சியில் நீர் வீழ்ச்சி இருந்திராத காலத்தைச் சார்ந்த பெண் அவள். நிலம் கண்டங்களாய் பிரிந்து கிடந்த காலத்தைச் சார்ந்த பெண். அதாவது இக்கதையின் முக்கியத்துவம் ஒரு மிகப்பழைய பெண்ணின் கோணத்தில் கதைச்சொல்லி கதையை அமைத்ததாகும். புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் தன் நாட்டின்  மொழியின் பழமையைத் தன் கதையின் கதைசொல்லிக்கு மறு அடையாளமாய் (Made-up Identity) வழங்கியுள்ளார். தோற்றத்தைத் தேடுதல் என்பது புனைவு தந்திரோபாயமாகிறது.

முடிவுரை

இதுவரை பார்த்தக் கருத்துகளிலிருந்து அகில உலகச் சிக்கல்கள், நாகரிகப் போக்குகள், மனோநிலைகள் போன்றவை சார்ந்த அளவைகள் தமிழின் வழியும் செல்லக்கூடியனவாக உள்ளன என்றறிகிறோம். தமிழ்ச் சமூகம் எங்கோ தென்னாசியாவின் ஒரு மூலையில் தன் பழமை என்னும் ஓட்டுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உள் சுருங்கி தனக்குள் மட்டும் பார்த்துக்கொண்டு முடங்கிப்போன சமூகமல்ல என்றறிகிறோம். ஐயர்லாந்தின் பிரச்சினையும் பிரான்சின் பிரச்சினையும் க்யூபாவின் பிரச்சினையும் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் கொண்டிருப்பதுபோல் தமிழ் பேசுவோரின் பிரச்சினையும் இவற்றோடு இணைகின்றன. தன் சமூக அழிவு விபரீதத்தை மறக்க முடியாவிட்டாலும் புதிய -தனது கலாசாரத்துக்குச் சம்பந்தமே இல்லாத – சமூகங்களோடு உரையாடத் தமிழ் சமூகம் கற்றுள்ளது என்பதை அறிகிறோம். பிறரைக் கேலிசெய்வதுபோல் தன்னையும் கேலிசெய்யக் கற்றுகொண்டுவருகிறது இச்சமூகம் அந்த வகையில் முட்டர்பாஸ்காதை பல பிரச்சினைகளோடு முகம் கொடுக்கிற கதையாகிறது.

தனது பழமையான மொழியைவைத்துக்கொண்டே மிக நவீனமான சமூகங்களில் கண்டுகொண்ட மொழிச்சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமல்லாமல் நினைவுகளையும் விழுமியங்களையும் அறிய முயல்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தமிழிலக்கிய உலகில் அதிக பிராபல்யம் பெறாததும் நம் விவாதத்துக்கு உட்படவேண்டும். தமிழ் சினிமா அளவு இன்னொரு கலை வெளிப்பாடான தற்கால இலக்கியம் தமிழர்களிடம் கால் கொள்ளாததோடு  அனைத்துலக அடையாளங்களையும்  சிக்கல்களையும் பற்றிப் பேசும் உலக மட்டத்தில் அமைந்துள்ள காஞ்சனா மற்றும் நாகரத்தினம் எழுத்துக்கள் தமிழர்களாலேயே கண்டுகொள்ளபடாதிருப்பது நமக்கு வியப்பைத் தரலாம். முத்துலிங்கம் மற்றும் எஸ்.பொ. எழுத்துக்கள் ஈழ வாசகர்களிடமின்னும் அதிக பிராபல்யம் பெற்றிருக்கின்றன என்ற கூற்று உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதாகும்.

இன்று அகில உலகமும் வர்த்தக அடிப்படைகளை அடையாள அடிப்படைகளாக மடைமாற்றிச் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆஸ்லோவில் நடந்த ஓர் இளைஞனின் செயல் உலகைத் திகைக்க வைத்துள்ளது. மரபான சமூகங்கள் இருக்கக்கூடிய நாடுகளில் இனங்கள், மதங்கள், மொழிகள் எவ்வாறு ஒன்று இன்னொன்றோடு இணைந்தும் பிணக்குண்டும் செயல்படுகின்றன எனவும் இவற்றிற்கிடையேயுள்ள இயக்கியலும் ஆயப்படுகின்றன. இந்த ஆய்வும் அத்தகையதே.

குறிப்புகள்

 1. Appadurai, arjun Ed. Globalization, Duke University  Press 2001

2. தாமோதரன், காஞ்சனா, மரகதத்தீவு, உயிர்மை, 2009

3. கிருஷ்ணா, நாகரத்தினம், மாத்தாஹரி, எனி இந்தியன் பதிப்பகம் 2008

4. முத்துலிங்கம்.அ. உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை 2008

5. பொன்னுதுரை எஸ். மாயினி, அர்ச்சுனா பதிப்பகம் 2007

6. ஷோபா சக்தி லைலா காலம் 36 2010

7. கருணாமூர்த்தி பொ. பதுங்குகுழி, உயிர்மை 2009

8. முத்தன், மெலிஞ்சி வேருலகு, உயிர்மை 2009

9. Anderson, Benedict Imagined communities, Verso

10. ஷோபா சக்தி லைலா காலம் 34 2010

11. காலம் 34, 2010

————————————————————

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s