மணற்கேணி ஆய்விதழ் இவ்வருட நிகரி சமத்துவ விருதுபெறும் சாதனையாளர்களை அறிவித்துள்ளது.. நண்பர் ரவிக்குமார் அழைத்திருக்கிறார்.
நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும்.
———————————————————————————–
நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என அழைக்கப்படும்.
இதற்கான விழா இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே .வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அவர்களது புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் விழாவுக்கான அழைப்பிதழும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் நிகழ்வு குறித்த செய்தியைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டு உதவவும் வேண்டுகிறேன்.
அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி