:லிடியா ஜோர்ஜ் (Lidia Jorge)
இவர் போர்த்துகல் நாட்டின் முக்கிய படைப்பாளி. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், நாடகம் எனதொடர்ந்து நவீன இலக்கியத்தின் கீழ் இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் இலக்கியம் என அவர் படைப்புகளை வகைப்படுத்தலாம். போர்த்துகல் நாட்டின் தென்பகுதியில் 1946ம் ஆண்டு பொலிக்கிமெ (Boliquime) என்ற இடத்தில் பிறந்தவர். லிஸ்பன் பல்கலை கழகத்தில் நவீன இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் போர்த்துகல் நாட்டின் காலனி நாடுகளில் வசிக்க நேர்ந்திருக்கிறது. காலனி நாடுகள் இல்லையென்றான பிறகு லிஸ்பன் திரும்பியவர், பல்கலைக் கழகத்தில் சிலகாலம் ஆசிரியப் பணியில் இருந்திருக்கிறார், பின்னர் அதிலிருந்து விடுபட்டு தற்போது தமது நேரம் முழுவதையும் எழுத்துப் பணிக்கென ஒதுக்கிக் கொண்டு செயல்படுகிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், வீட்டில் ஒரு பெட்டி நிறைய நல்ல புத்தகங்கள் இருந்ததாம், அவற்றைப் பால்ய வயதில் வாசித்துப் பழகியாதாலேயே தமக்கு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென பின்னாளில் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவருடைய எழுத்தார்வத்திற்கு தங்கள் நாட்டின் பிரபல எழுத்தாளரான Fernando Antonio Nogueira Pessoa காரணம் என்கிறார். எனினும் லிடியா ஜோர்ஜுவின் படைப்புகளை முழுவதுமாக வாசித்தவர்கள், ஆழமாக அவரது படைப்பு வெளியை உள்வாங்கிக்கொண்டவர்கள் பெஸ்ஸொவிடமிருந்து வெகுதூரம் விலகிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். லிடியா ஜோர்ஜ் படைப்புகள், தன்னை சுற்றியுள்ள சமூக பிர்ச்சினைகளில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதை சுட்டுகிறார்கள். நவீன உலகின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதன் பலவீனங்கள், வன்முறை தீர்வுகள், அவ நம்பிக்கைகள், ஊழல்கள் என்று அவருக்கு எழுத நிறையவே உள்ளன என்பது வெளிப்படை. மேற்கத்திய நாடுகளில் பல பரிசுகளை வென்றுள்ள லிடியா தம்மைச்சுற்றியுள்ள உலகமே தமக்கான எழுதுபொருள் என்பதை மறுப்பதில்லை. சமூக பிரச்சினைகளைக் கையாளுவதில் தேர்ந்தவர் என்ற போதிலும் அவரது கதை சொல்லல் தனித்தது என்கிறார் பிரெஞ்சு இலக்கிய இதழ் ஒன்றில் அந்நாட்டின் சக எழுத்தாளர் Maria Gracieta Besse.
அவரது படைப்புகள் குறித்து: (தகவல் உபயம் பிரெஞ்சு இலக்கிய இதழ்)*
1. The Day of Prodigies (1980)
பல நூற்றாண்டுகளாக தனது புறம் அகம் இரண்டிலும் எவ்வித மாற்றாத்திற்கும் உள்ளாத போர்த்துகல் நாட்டின் தென் பகுதி கிராமம் ஒன்றுதான் கதை நாயகன். முன்முடிவுகளும், அவ நம்பிக்கைகளும், சச்சரவும், குருட்டு சடங்களுமாக உறைந்துகிடக்கும் கரம்பு நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். லிடியா தமது முதல் நூலிலேயே தமது பெண் இனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர்களுடைய கவலைகள், சுதந்திரமாக இயங்குவதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள், ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டியக் கட்டாயம், தான் கதை சொல்கிற இந்த நூற்றாண்டிலும் பெண்கள் ஓர் ஆணுடமைச் சமூகத்தின் வாழநேரும் அவலம் குறித்த எழுத்தாளரின் துயரம் இப்படைப்பில் சொல்லப்படுகிறது.
2. The Wind Whistling in the Cranes
பெற்றோர்களுக்கு என்ன நடந்ததென அறியமுடியாத மிலென் என்ற பெண், தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறாள். உடனிருந்த பிற உறவினர்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடொன்றிர்க்கு சென்றிருந்த வேளை பாட்டி திடீரென இறந்துவிடுகிறாள். இளம்பெண்ணான மிலென் அவளை அடக்கம் செய்யவேண்டும். இந்நிலையில் பாட்டியால் ஏற்கனவே னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த குடும்பமொன்றுதன் பழக்கம் ஏற்படுகிரது. மெல்ல மெல்ல போதைப்பொருளுக்கும் அடிமையாகிப்போகும் பெண்ணின் வாழ்க்கை மேட்டுக் குடியினரின் வாழ்கைப்போக்கில் எவ்வாறு சீரழிகிறது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.
3. The Night of the Singing Women – 2011
ழிசெலா லிஸ்பன் நகரைச் சேர்ந்த பணக்கார பெண்மணி. கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதி ஆர்வம் காட்டுபவள், ஆனால் கண்டிப்பான பேர்வழி. அவளிடம் பயிற்சிபெற்று மேடையேற ஆசைப்படும் பெண்கள் குழுவினருக்கு ஏற்படும் அனுபங்களைக் கொண்டு ஆசிரியர் கதையை நகர்த்துகிறார். குழுவில் இருக்கும் ஒவ்வொருத்திக்கும் என்றாவது ஒரு நாள் தன்னுடைய பாடல் குறைந்தபட்சம் ஒன்றாவது பதிவு செய்யப்படும், விற்பனையாகும், பணமும் புகழும் வந்து சேரும் என்ற கனவு இருக்கிறது. எனவே ழிசெலாவினால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பணிந்து போகிறார்கள். முதல் அத்தியாயம், கடுமையான பல மாதப் பயிற்சிக்குப்பிறகு பயிற்சிபெண்களின் கனவு நனவாவதைப்போல பொதுமேடையில் அவர்களின் பாட்டு அரங்கேறுவதற்கான சந்தர்ப்பத்துடன் நாவல் தொடங்குகிறது, கதை சொல்பவள் அப்பெண்களில் ஒருத்தியான சொலான் என்பவள். சொலானுடைய தினசரிகள், அவள் உரையாடல், அவள் பாலுறவு, பயிற்சிபெண்களுக்கும் ழிசெலாவிற்குமான உறவின் ஏற்ற இறக்கங்கள், விரிசல்கள், ஒட்டுதல்கள் என அத்தியாயங்கள் வருகின்றன. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் லிடியா, பாட்டு பாடுகிற பெண்களைப்பற்றிய நாவல் என்றாலும், மக்களைப்பற்றிய நாவல் என்கிறார்.
நன்றி – * Le Magazine Littளூraire ஆகஸ்டு 2013
பி.கு. ஆசிரியரின் விருது மற்றும் பிற நூல்களைப்பற்றிய தகவல்களை ‘விக்கிபீடியாவிலிருந்து’ நீங்கள் பெறலாம்.
____________________________________