“இன்று, ‘அம்மா இறந்திருக்கிறார்’, ஒருவேளை சம்பவம் நடந்தது நேற்றாகக் கூட இருக்கலாம். ‘அம்மா இறந்தது இன்றா? ஒருவேளை நேற்றா? என்னிடத்தில் பதில் இல்லை. காப்பகத்திலிருந்து தந்தி வந்திருந்தது, “அம்மா இறந்துவிட்டார்கள்”, நாளை அடக்கம் – ஆழ்ந்த அனுதாபத்துடன்” என்கிற வாசகங்களில் என்ன பெரிதாய் புரிந்துகொள்ள இருக்கிறது. ஒருவேளை நேற்றுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு. முதியோர் காப்பகம் ‘அல்ஜீயஸ்’ நகரிலிருந்து 80. கி.மீ தூரத்திலிருக்கும் ‘மராங்கோ’ வில் உள்ளது. அதிகாலை இரண்டுமணி பேருந்தைப் பிடித்தால், பிற்பகல் அங்கிருக்க முடியும், ஆதலால் ‘அடக்கத்தை’ முடித்துக்கொண்டு நாளை மாலை ஊர் திரும்பலாம். முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறேன், இதுபோன்ற காரணத்திற்கு விடுமுறையை அவரால் மறுக்க முடியாது. மனிதரிடத்தில் சந்தோஷமில்லை. ‘தவறு என்னுடையதல்ல’, என்றேன். மனிதர் வாய் திறக்கவில்லை. அப்படி சொல்லியிருக்கக்கூடாதென நினைத்தேன். இவ்விவகாரத்தில் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியவன் நானில்லை, அவர். தனது வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் அவர்தான் இருந்தார். நாளை மறுநாள் அடக்கத்திற்குப் பிறகு, துக்கச் சடங்கைக் கடைபிடிக்கிற சூழலில் என்னை சந்திக்கிறபோது தெரிவிப்பாரென நம்பலாம். இதைக் கொஞ்சம், தற்போதைக்கு அம்மா இறக்கவில்லை’ என்பதாக வைத்துக்கொள்ளலாம். அடக்கத்திற்கு பிறகு நிலமை வேறு, அது முடிந்தபோனதொரு விடயம், அவ்வளவிற்கும் உத்தியோக பூர்வமானதொரு புதிய வடிவம் கிடைத்துவிடும்.” – ‘அல்பெர் கமுய் எழுதிய ‘அந்நியன்’ நாவலின் தொடக்க வரிகள் இவை.
இவ் வரிகள் சொந்தத் தாயின் மரணச் செய்தியைக்கேட்ட, பிள்ளையின் கூற்றாக வருகின்றன. இவ்வரிகளை படர்க்கைக் கூற்றாக எழுதிப் பாருங்கள். என்ன சொல்ல முடியும் என யோசித்துப் பாருங்கள். படைப்பாசிரியனுக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே உள்ள இலட்சுமணக்கோட்டை உங்களால் உணரமுடிகிறதா? அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா? படர்க்கையில் கதைசொல்ல முற்படுகிறபோது ஆசிரியர் எதை எழுதுவார்?
– தந்தியைபடித்த கதைநாயகனின் கண்ணீரை, சிவந்த கண்களை, மூடிய இமைகளை, உதடுகளின் அதிர்வுகளை, கன்னக்கதுப்புகள், முகவாய் இரசாயண மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம் எழுதலாம்.
கதை மாந்தனின் புற உலகின் முள்வேளியை தாண்டமுடியாத ஒரு கணம் அங்கே வரும், அந்நேரத்தில் படைப்பாசிரியர், கதைநாயகனின் சமூகம் அதன் பண்புகள், மரபுகள், வழக்காறுகள், வாழ்க்கை நெறிகள் ஆகிய சட்டப்புத்தகங்களைப் புரட்டி அதன் அடிப்படையில் கதைநாயகனைப் புரிந்துகொள்ள நம்மைக் கூவி அழைப்பார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகம், புறம் என்ற இரண்டு இயக்கங்கள் உள்ளன. புறவாழ்க்கை நமது அக உணர்வுகளைத் தண்டித்தே வாழப் பழகியிருக்கிறது, பெண் என்ற பிறப்பு ஆணுக்கென்று பழகிக்கொண்டதுபோல. அதன் சுதந்திரமெல்லாம் அடுக்க¨ளைவரை என்கிற ஆணாதிக்கத்திற்கேயுரிய அறமும், கோட்பாடும் செல்நெறியும், மனித வாழ்க்கையின் புற உலகு அரசியலோடு பெரிதும் பொருந்தக்கூடியது. இந்த அகமென்ற அடுக்களை பெண்ணை எப்படி புரிந்துகொள்வது, எளிதான வழி அவளாக வாழ்ந்து பார்ப்பது, அவளாகச் சிந்திப்பது, அவளை பேச வைப்பது, அவளை செவிமடுப்பது, அவளை செயல்படவிடுவது. அதைத்தான் தன்மைக்கூற்றில் கதை சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் செய்கிறார்கள். ‘அந்நியன்’ கதை நாயகன் என்ன சொல்கிறான் எனக் காதைக் கூர்மைப்டுத்திக் கேளுங்கள்; அச்சொற்களை மூளையின் உணர்வுதளத்தில் இசைகோர்வையை எடைபோடுவதுபோல இரசியுங்கள், அதன் துடிப்பும் சுவாசமும் சொல்லவருவதென்ன என்பது எளிதாக விளங்கும். ‘அம்மா இறந்துவிட்டாள் இன்றா நேற்றா என்றைக்கு நடந்ததென்ற ஒரு கேள்வி? தந்தி வந்திருக்கிறதே போய்த்தானே ஆகவேண்டுமென்பதுபோல பேருந்து பிடித்து அடக்கத்தில் கலந்துகொண்டு நாளை திரும்பிவிடுவேன் என, சமூக எதிர்பார்ப்பிற்கு, சமூக நியதிகளுக்காக ஒரு பதிலை வைத்திருக்கிறான். சொந்தத் தாயின் இறப்பு அவனுள் எவ்வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற ஓர்மை நாவலின் தொடக்கத்தில், ஒரு சித்தன் போல உரைப்பதில் தெளிவுபடுத்தப்படுக்கிறது. சொல்லப்படவிருக்கும் நாவலில் கதைமாந்தனின் பிரம்மாண்டமான ‘இருப்பை’ அவ்விருப்பில் ‘நாடா புழுக்களாக நெளியும்’ முரண்களுக்கு, கதைமாந்தனின் ஆரோக்கியத்தில் உள்ள பங்கை கோடிகாட்டிவிடுகிறது. வாசகன் முதல் வரியைப் படித்ததும் அதிர்ந்து போகிறான். கா·ப்காபின், ‘விசாரணை’ நாவலையும் தன்மைக் கூற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பன்மைக்கூற்றில் பொதுவாக என்ன நடக்கிறது. கதைமாந்தர்களிடையே கூடுபாய்ந்து விவரணையைகூட்ட முடியுமென்கிற பொதுவானதொரு உண்மையைத் தவிர, கிடைக்கும் பிறபலன்கள் என்ன? என்ற கேள்வியை நானும் பலமுறைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, ஆக அதற்கேற்ப ஒரு தந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாகப் பன்மைக்கூற்றில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். வேணியோ வாணியோ ஒருத்தியை கூடுதலாகவோ குறைத்தோ – பெண்னென்றால் குறைத்து என்பதற்கு சாத்தியமில்லை, எழுதுகிறோம் முதல் அத்தியாயத்தில் என்றில்லாவிட்டாலும் மூன்று அத்தியாயங்களுக்குள் கூந்தலை முடித்துக்கொண்டோ முடியாதவளாகவோ வந்துவிடுவாள், அவள் கதை நாயகனை அலுவலகத்திலோ, பேருந்து பிடிக்கிறபோதோ சந்திக்கலாம், தற்போது கதைநாயகி ஊடாக ஆசிரியர் கதைநாயகனின் மகோன்னதங்களை எழுதுவார். படைப்பாளி ஆணாக இருந்தால் கதை நாயகனை முதலிலும், படைப்பாளி ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை முதலில் அறிமுகப் படுத்துவது நடைமுறையில் உள்ளது.
வாசகராக இருந்து இதற்குப் பதில் நேடுவோம். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரம்; நான் நிறைய வாசித்திருக்கிறேன், எனக்கு எல்லாவற்றையும் குறித்து அபிப்ராயங்கள் இருக்கின்றன, அதுபற்றி சொல்லப்போகிறேன்:. கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் நல்லது, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பிற்கோ, கொத்ஸ¤ செய்து சாப்பிடாலோ அத்தனை ருசி; அடுத்து இந்தத் திராவிடக் கட்சிகளெல்லாம் குப்பை தமிழர்களின் மூளையை பிரச்சாரமொழிக்குப் பழக்கி, வெட்கமின்றி பிறர்காலில் விழவைத்துவிட்டன; மார்க்ஸ் மூலதனம் நூல் ஓர் பழங்கதை என்று எதையாவது மூச்சுவிடாமற் பேசிக்கொண்டிருக்கலாம், பேசுவதை அல்லது நினைத்ததை எழுத படைப்பாளிக்கு பூரண உரிமை இருக்கிறது, ஆனால் வாசகனாகிய நாம் இதனைச் சகித்துக்கொள்வோமா?
சில எழுத்தாளர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும் படர்க்கையில் சொல்லப்படுகிற படைப்புகள் வெற்றி பெறாமலா இருக்கின்றன, உலகமெங்கும் நாள் தோறும், பல மொழிகளில் வரத்தான் செய்கின்றன, வாசகர்களால் வாசிக்கவும் படுகின்றன. வியாபார அளவில் போட்டமுதலை எடுக்கவே செய்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் நூலக ஆ¨ணைகிடைத்தால் போதாதா, அதை நம்பித்தானே பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் படர்க்கையில் சொல்லப்படுவது கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலவென்றும் அது வெளிப்புற காட்சிகளை படம் பிடிக்க மட்டுமே உதவும், பாத்திரங்களுக்குள் உள்ளே நுழைந்து அவர்கள் மனங்களை எடைபோட அவ்வெழுத்துக்கு இயலாது என ‘டொனால்டு ஹாமில்டன் என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறுகிரார். இவர் தீவிர இலக்கியவாதி அல்ல, குற்றபுனைவுகளையும், வட அமெரிக்காவின் மேற்குலகு மரபு கதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு நல்ல வாசகன் கங்காரு வகை எழுத்தை ( ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவும்), அதாவது படர்க்கையில் சொல்லப்படும் எழுத்தை இரசிப்பதில்லை என்கிறார். தனது எழுத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லவிரும்பும் எந்த எழுத்தாளனும் தன்மை கதைசொல்லல் வகையையே தேர்வு செய்வார்கள் என்கிறார். கா·ப்கா, அல்பெர் கமுய், துராஸ், பிரான்சுவா சகாங், குந்தெரா தன்மைக்கூற்று எடுத்துரைப்பை தேர்வு செய்து, படைப்பை சாசுவதப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சங்ககால கவிதைகளிலேயே இம்மரபுக்கு வித்திடப்பட்டுள்ளது.
உண்மையைச் சொல்வதெனில் தன்மைக்கூற்று கதை சொல்லலில் சில நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெல்ல தனித் திறமையும் பயிற்சியும், ஆழ்ந்த உளவியல் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இவற்றில் எத்தனை விழுக்காடுகள் நீங்கள் தேர்ச்சி பெற்றவரோ அதற்கு நேர்மறை விகிதத்தில் உங்கள் படைப்பும் சோபிக்கும், எழுத்தும் வெற்றி பெறும். தன்மைக்கூற்று எடுத்துரைப்பில் உள்ள தலையாய பிரச்சினை விளிம்பையும் மையத்தையும் கையாளும் திறன். இத்தன்மைக் கூற்றில் ஒற்றை உயிரியை முதன்மைப்படுத்துகிறோம் அதாவது மையம்; பிற பாத்திரங்கள் விளிம்புகள், மையக்கோளைச் சுற்றிவருபவை. இவ்விளிம்புநிலை பாத்திரங்கள், மையத்தை நம்பி இருக்கின்றன, இவற்றின் இருப்பும் அசைவியக்கமும் மையத்தினால் தீர்மானிக்கப்பட்டவை – ஆக விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளி இம்மையத்தின் ஊடாக விளிம்புகளைப்பார்க்கிறான். ஒருவித ஒற்றை பார்வை, எதேச்சதிகார நோக்கு- எனக்கு முன்னால் நீங்கள் (விளிம்புகள்) எல்லாம் குப்பைகள் என்ற பார்வை. இச்சர்வாதிகாரபோக்கு பிறமனிதர்களை -பிற உயிரிகளை பருண்மை அற்றவைகளாக -செல்லாக் காசுகளாக மாற்றிவிடுகின்றன.
இந்த அபாயத்திலிருந்து தப்பவும், இந்த ‘உப’ பாத்திரங்களுக்கு சாப விமோசனம் தரவும் எனது நாவல்களில் அப்பாத்திரங்களுக்கு அவ்வப்போது தன்மைக்கூற்றின் குரலை இரவல் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன், இவ்வுபாயம் ஓரளவு வெற்றியையும் ஈட்டியுள்ளது.படர்க்கையில் சொல்லுகிறபோதும் எனக்கென ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவுகிறபோதும் அங்கே ஆசிரியனாகிய என்னை ஒளித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாத்திரங்களே கதையை நடத்துவதுபோல கொண்டு செல்வேன். வாசக நண்பர்களுக்கு ஒரு படர்க்கை கதை சொல்லலில் தன்மைக்கூற்று எடுத்துரைப்பிலுள்ள அத்தனை நன்மைகளையும் அளிக்க முயற்சிக்கிறேன்.
——————————————-