எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு. சொந்த நூலை வாசிப்பது பெற்ற பிள்ளையைத் தாலாட்டிக்கொண்டிருப்பதுபோல. ஆனால் விமர்சகனாக இருப்பது என்பது வேறு.
‘எனது முதல் நாவல் நீலக்கடல்’. என்னைக்குறித்து எவர் பேசினாலும் நினைவுக்கு வருகிற ஒரு படைப்பாக இருந்தபோதிலும், நெருங்கிய நண்பர்களிடத்திலும், எனது படைப்புகளைக்குறித்து எழுதுகிறபோதும் நீலக்கடல் எனக்கு திருப்தியானதொரு நாவலல்ல என்பதாகவே கருத்து தெரிவித்து வந்திருக்கிறேன். நீலக்கடல் நாவல் மொழியிலோ,உத்தியிலோ, எடுத்துரைப்பிலோ, கதைமாந்தர்கள் வார்ப்பிலோ குறைசொல்லக்கூடியதல்ல. எனினும் அந்நாவல் நன்கு எடிட் செய்யபட்டு வந்திருந்தால் மிகக்கூடுதலான வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. எனது எழுத்து அனுபவம் நாவலின் மறுவாசிப்பில் அநேகத் தவறுகளை காலப்போக்கில் உணர்த்தியது. அவற்றை, அடுத்துவந்த நாவல்களில் நாவல்களில் தவிர்த்திருக்கிறேன்.
மார்கரெட் சிட்டெண்டென், ஒரு பெண் புனைகதையாளர். அவர் ஆற்றலைத்தெரிவிக்க நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் இலக்கியங்கள் உண்டு. அவரது புனைகதைகள் விறுவிறுப்பாகவும், மர்ம முடிச்சுகளுடனும் சொல்லப்படுபவை. அவரது பெயர் பெரிய எழுத்திலும், நூலின்பெயர் சிறிய எழுத்திலும் போட்டு புத்தகங்கள் விற்பனையாகின்றன என்பதைவைத்து வெற்றி பெற்ற எழுத்தாளர் என சொல்லலாம். இவ்வெழுத்தாளர் ஒரு படைப்பில் தொடக்கம் – நடுப்பகுதி – முடிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் பெயர்: How to be your own critic.
மனித உடல்போல மூன்று பகுதிகள் ஒரு நாவலுக்குமுண்டு. முதலாவதாக தலைப்பகுதி. படைப்பில் அல்லது ஒரு புனைவில் தலையென்று நான் நினைப்பது நாவலின் தொடக்கம். புனைவின் ஆரம்பம். எனது கட்டுரைகளில் பல முறை நாவலின் தொடக்கத்திற்குள்ள முக்கியத்துவத்தை எழுதியிருக்கிறேன். வாசகனின் கையைப்பிடித்து நூலின் இறுதிச்சொல் வரை தரதரவென்று இழுத்துச்செல்வது புனைவின் தொடக்கம். நான் படித்த பல புனைவுகள் பலவற்றுள் தொடக்கம் மிக மெதுவாக -கொட்டாவி விட்டுக்கொண்டு எழுத்திருக்க மனமில்லாமல் போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு உறங்கும் மனிதர்களைப் போல இருந்திருக்கின்றன. அதனாற் படிக்கத் தயங்கியிருக்கிறேன். உங்களுக்கும் அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். நாவலின் தலைப்பகுதியை அடுத்து வருவது மார்பும் வயிறும் சேர்ந்த இடைப்பகுதி. இப்போதெல்லாம் ஆயிரம் கி.மீட்டர் நடக்கவேண்டும் என்பதுபோல பக்கங்களை எவ்வளவு கூட்டமுடியுமோ அப்படி கூட்டினால் பெரிய நாவல் (?) என்றதொரு கருத்தியல் இருக்கிறது. அவைகளுக்குப் பரிசுகள் கொடுப்பதும் சுலபம், படிக்க வேண்டியதில்லை. எடைபோட்டு பார்த்து தேர்வு செய்யலாம். மூன்றாவதாக உடலின் இடுப்பும் காற்பகுதியும்போல இருக்கிற அதன் முடிவுப் பகுதி. அநேக புனைவுகளில் அவை நீளமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கின்றன.
அ. தலைப்பகுதி யென்கிற நாவலின் தொடக்கம்:
ஒரு நாவலின் தொடக்கத்தில் இடம்பெறும் சொற்கள் அல்லது வாக்கியம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவையென ஏற்கனவே இத்தொடரில் எழுதியிருக்கிறேன். இது தவிர நாவலின் தொடக்கத்திற்கென வேறு சில குணங்களும் இருக்கின்றன. அக்குணங்கள் பொருந்துகின்றதா என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். முக்கிய கதை மாந்தர்கள் அறிமுகம், கதைக் களம், எப்பிரச்சினையைவைத்து கதைபின்னல் நிகழ இருக்கிறது ஆகிய மூன்றும் ஒரு புனைவின் தொடக்கத்தில் தவறாது இடம்பெறவேண்டியவை என்கிறார் ‘மார்கரெட்’. இவை மூன்றிர்க்கும் மார்கரெட் கூற்றை ஆமோதித்து புனைவின் தொடக்கத்தில் இடம் கொடுத்தால் பிரச்சினை முடிந்ததா? நாவலின் முதல் பக்கத்தில் இடம் பெறும் முதல் வார்த்தை எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்பதை பலமுறை அழுத்தமாகக் கூறியிருக்கிறேன். அதற்கென, கதையை முன்நகர்த்துமுன்பே வாசகனை சொற்குவியலில் மூழ்கடிக்க வேண்டுமென்பதில்லை. பெரும்பாலான புனைவுகளின் முதல் பத்திகள், கண்ணன் பாஞ்சாலிக்கு அருளிய ஆடைபோல முடியாது நீளும். நாமும் துச்சாதனன்போல வாசித்து களைத்து விழவேண்டும். ஆரம்பத்திலேயே நெட்டிமுறித்து வர்ணனைகளை நீட்டி முழக்குவது அவசியல்ல. அவ்வாறே முதல் அத்தியாயத்திலேயே முக்கிய கதை மாந்தரின் பூர்வாங்கத்தை விலாவாரியாகச்சொல்லவேண்டுமென்ற அவசியமுமில்லை. அவ்வப்போது நேரம் கிடைக்கிறபோது சொல்வதற்கென்று சிலவற்றை ஒதுக்கிக் கொள்ளலாம். ஒரு புனைவைத் தொடங்குவதற்கு முன்பாக பாத்திரங்கள்: அவரின் குலமென்ன கோத்திரமென்ன, படித்த ஆசாமியா படிக்காத ஆசாமியா, பழகுவதற்கு எளிமையானவாரா, உம்மனாமூஞ்சியா? அவருக்கு என்ன நடந்தது? என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் நமது பாத்திரங்களைக்குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்போம், ஆனால் அவற்றை உடனுக்குடன் எழுதியாகவேண்டுமென்ற கட்டாயமில்லை. முதல் பத்தியிலேயே: வயது; தலைமுடியின் நிறம், பெற்றோர்கள், காதல், வாங்கிய பட்டம், படித்த கல்லூரி வேண்டவேவேண்டாம். முக்கிய பாத்திரத்தைக்கொண்டு தொடங்கும் புனைவு. அது ஆணோ பெண்ணோ ஏதாவது செய்வதுபோலவோ, எங்காவது போய்க்கொண்டிருப்பதுபதுபோலவே, எவருடனாவது உரையாடுவதைப்போலவோ, தொடங்கலாம். தொடக்கத்தில் அதிகம் உறுத்தாத சிறிய முடிச்சைப் போட்டு அதைக்கொண்டு கதையை நகர்த்துவதற்கு பழகியிருக்கிறேன். எனது மூன்று நாவல்களிலும் இது ஒரு மரபாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. தீக்கங்குபோல அது கனிய ஆரம்பித்து நாவலின் இடைப்பகுதியில் நன்கு தீப்பிடித்து இறுதியில் இயல்பாக அணையும்படி கவனமாக எழுதலாம்.
ஆ. புனைவின் மார்பும் வயிறும் என்கிற இடைப்பகுதி:
ஒரு புனைகதையை நீட்டிச்சொல்ல இப்பகுதி உதவுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பிட்ட பக்கங்களுக்குப் பிறகு ஏற்கனவே தீர்மானித்த வகையில் புனைகதை சுருக்கத்தை எழுதி வைத்திருப்பீர்கள். அச்சுருக்கத்தை அத்தியாயங்களாகப் பிரித்து இங்கே கதையை நீட்டுகிறோம். இங்கும்ங்கூட முக்கிய கதைமாந்தரை தலைமுதல் கால்வரை தெளிவாக வாசகனுக்கு அறிமுகப்படுத்திவிடவேண்டுமென்ற நினைப்புகள் வேண்டாம். நமது முக்கிய கதைமாந்தர்களின் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் எப்படி நடந்கொள்வார்கள் என்பதை நமது வாசகர்களைக்கொண்டே ஊகிக்க வைக்கலாம். அல்லது வெவ்வேறு பகுதிகளில், அவ்வப்போது உரையாடலில், பிறருடைய பேச்சில், கதை மாந்தரின் எண்ணத்தின் ஊடாக தெரிவிக்கலாம். புனைகதையின் சுருக்கத்தை எழுதுகிறபோது முக்கிய நிகழ்வுகள் அனைத்துமே நாவலின் இம்மைய்யப் பகுதியில் அமையுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நாவலை நீட்டுகிற களம் இதுவென்றாலும், நாவலின் தொடக்கத்தில் நீங்கள் கட்டமைத்திருந்த விறு விறுப்பை இப்பகுதி ஒருபோதும் குலைத்துவிடக்கூடாதென்பதில் நண்பர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இம் மைய்யப் பகுதிக்கென மார்கரெட் தரும் யோசனை ‘காரணமும் விளைவும்’ என்கிற சூத்திரம். அடுத்தது என்ன என்ற கேள்வி வேண்டாமென்றும், இக்காரணத்தால் என்ன விளவுகள் வரும்? என நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டுமென்கிறார். புனைகதை சுருக்கத்தை எழுதிமுடித்தபிறகு ‘காரணமும்-விளைவும்’ என்கிற சூத்திரத்தோடு, நாம் எழுதுகிற புனைவு எத்தனை விழுக்காடு பொருந்துகிறது என்பதைப்பொருத்ததே இப்பகுதியின் வெற்றி என்கிறார்.
‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ – நாவலை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதன் கதைச் சுருக்கம் என்ன? ஹரிணி என்றொரு பெண் தனது சொந்தவாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளால், தனது தாய் பிறந்த மண்ணிற்கு வருகிறாள். புதுச்சேரியில் ‘ழான் தெலொஷ்’ என்கிற செஞ்சிக்கோட்டை ஆய்வாளரை சத்திக்கிறாள், அவரால் இவளிடம் ஏற்பட்ட உந்துதல் என்ன? சந்திக்கிற மனிதர்கள் யார்? அவர்களால் அவளுக்கு நிகழ்வது நன்மைகளா? தீமைகளா? அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? என்கிற மாரகரெட்டின் ‘காரணம்-விளைவு’ சூத்திரம் பெரிதும் எனக்கு உதவி இருக்கிறது, நீங்களும் முயற்சிக்கலாம்.
இ. புனைவின் இடுப்பும் கால்களூம்:
‘காரணமும் -விளைவும்’ என்ற சூத்திரத்தைப் ஒழுங்காகப் புரிந்து கதை சொல்ல தெரிந்தால், புனைகதையின் முடிவும் பொருத்தமானதாக நம்பக்கூடியதாக அமையும் என்கிறார் மார்கரெட். எனது நாவல்களில் மாரகரெட் சொல்வது போன்று அது நீலகடலாக இருக்கட்டும், மாத்தா ஹரியாக இருக்கட்டும் அண்மையில் வெளிவந்த செஞ்சி பற்றிய நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியிலும் மர்மம் ஓர் ஊடுபாவாகத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நீள்கிறது. விளைவாக வாசக நண்பர்களை நிர்ப்பந்தமின்றி இயல்பாக இறுதிபக்கம் வரை வாசிக்கவைக்க என்னால் முடிந்தது.
” நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.” – நீலக்கடல் விமர்சனம் – முனைவர் -ரெ.கார்த்திகேசு
“பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தா?ரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.” – மாத்தாஹரி -விமர்சனம் திரு வெ.சபாநாயகம்.
நாவலின் முடிவுக்கு வேறொரு பண்பையும் மார்கரெட் சிபாரிசு செய்கிறார். அது ‘நம்பகத்தன்மை’. உதாரணத்திற்கு, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் வருவதைப்போன்றோ அல்லது ஒரு சில திரைப்படங்களில் காண்பதைப் போன்றோ, 120 நிமிட வில்லனை ஓரிரு நொடியில் நல்லவனாக மாற்றி கதை நாயகியோடு சேர்த்துவைக்கிற உத்தி, நாவலின் நம்பகத்தன்மைக்கு எதிரிகள்.
விமர்சகராக மாறுங்கள்:
ஒருவழியாக நாவலை எழுதி முடிக்கிறீர்கள்: நெருங்கிய நண்பர், மனைவியென கருத்தை கேட்குமுன் முதலாவதாகச் செய்யவேண்டியது தொடக்கத்திலிருந்து இறுதிவரை அதனோடு சம்பந்தப்படாத மூன்றாவது பேர்வழியாக இருந்துகொண்டு அதனை நாம் படிப்பது -விமர்சகனாக இருப்பது. உங்களால் வாசிக்க முடிகிறதா? வாசிக்கிறபோது சங்கடங்களை உணர்கிறீர்களா? எதைச் சொல்லவேண்டுமோ அதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர் என்ற நினைப்பு உங்களுக்கு வருகிறதா? எங்கேனும் தேவையில்லாமல் எதையோசொல்ல நினைத்து அவரோடு நம்மையும் ஏமாற்றுகிறார் என்றெல்லாம் உள்மனது பேசுகிறதா? அவ்விமர்சனத்தை எவ்வித தயக்கமுமின்றி ஏற்று, திருத்த வேண்டிய இடத்தில் திருத்தம் செய்து, ஒருமுறைக்கு பலமுறை வாசித்து உங்களிடத்திலுள்ள விமர்சகன் அனுமதித்தால் பிறறிடம் காண்பியுங்கள்.
தொடக்கத்திற் கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறேன்:
எந்தப் படைப்பிற்கும் முதன் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது.
————————————————-
வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html
கீத மஞ்சரி வலைத்தள நண்பர்களுக்கு மிக்க நன்றி
வணக்கம்.
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் நண்பரே மிக்க நன்றி
நிஜந்தான்… இப்போதெல்லாம் ஆள் வைத்துத்தான் தூக்கிப் படிக்க முடிகிற அளவில் பெரிய பெரிய புத்தகமாக எழுதுவதே மதிப்பு என்ற மனப்போக்கு வளர்ந்துதான் வருகிறது. கூடவே புரியாத வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட, நீண்ட நெடிய வரிகளை எழுதி, சராசரி வாசகனை தலைசுற்ற வைப்பதும் கண்ணில் படுகிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் எழுதுபவரே முதல் விமர்சகரானால்…. நன்றாகவே இருக்கும் படைப்பும்! நாவலின் ஆரம்பம், நடு, இறுதி பற்றிய அத்தனை விவரங்களும் மிகமிகப் பயன்மிக்கவை. பகிர்ந்தமைக்கு நன்றி!
வணக்கம் நண்பரே மிக்க நன்றி