பிரெஞ்சு புனைவுவுலகம் இன்று

நேற்றைய சிந்தனைகள் என்பது இன்றைய சிந்தனைகளின் ஆணிவேர், படைப்பிலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இயல்பாகவே கட்டற்றச் சுதந்திரத்தில் ஆர்வங்கொண்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் தங்கள் மன உந்துதலுக்கேற்ப புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள். பிரெஞ்சு படைப்புலகில் நேர்ந்த இவ்வுருமாற்றங்கள் பெற்ற ஞானஸ்தானங்களையும் அறிந்திருக்கிறோம். பட்டியல் நீளமானது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்து மறைந்த கவிஞர் பிரான்சுவா வியோன் ஆகட்டும்; ஹ¤மானிஸம் என்கிற மனிதநலக்கோட்பாடு வழிவந்த கவிஞர் பிரான்சுவா ரபெலெ ஆகட்டும்; மதம், சமூக நெறி முரண்பாட்டாளர்களைக்கொண்ட ‘லிபெர்த்தென்’ கூட்டத்தினராகட்டும்; உயர்ந்த கோட்பாடு, மேட்டிமைத்தனமென்று மரபுகளில் நம்பிக்கைக்கொண்ட ‘கிளாசிஸம்’ என்கிற செந்நெறிவாதத்தினராகட்டும்; அவர்களைத் தொடர்ந்து வந்த ‘ரேஷனாலிஸ்டுகள்’ என்கிற நியாயவாதிகளாகட்டும்; உணர்ச்சிகள், மிதமிஞ்சியக் கனவுகள், ஏக்கங்கள், அனுபவப் பங்கீடுகளென விரிந்த ரொமாண்டிக்யுக படைப்பாளிகள் விக்தொர் யுகோ, ஷத்தோபிரியோன் போன்றவர்கள் ஆகட்டும்; இருத்தலியல் புரவலர் ழான் போல் சார்த்துரு ஆகட்டும்; இன்றைக்கு எழுதிக்கொண்டிருக் கிறவர்களாகட்டும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பிரெஞ்சு படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்று பிரெஞ்சு படைப்புலகத்தின் நிலையென்ன?

இன்றைய படைப்புலகம் என்பதை இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டு படைப்புலகம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தாக்கத்திலிருந்து முற்றாக நாம் விடுபட இல்லை. இன்றைய  இலக்கிய உலகைப்புரிந்துகொள்ள இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1. படைப்பாளியின் மரணம்  2. எழுத்தாளன் யார்? விவாதங்கள் தவிர்க்கமுடியாதவை:

படைப்பாளிகளில் பலரும், ‘நாம் சாகாவரம் பெற்றவர்கள்’ என எண்ணிக்கொண்டிருக்க, அப்படியொரு எண்ணமிருப்பின், கிள்ளி எறியுங்கள், எனக்கூறி ‘எழுத்தாளன் மரணத்தை'(1968) அறிவித்தவர் ரொலான் பர்த் (Roland Barthes). அவரைத் தொடர்ந்து மிஷெல் பு·க்கோ (Michel Foucault), ‘எழுத்தாளன் என்பவன் யார்? எனக்கேட்டு அக்கேள்விக்குரிய பதிலையும் அளித்தார். இரண்டு கருத்துகளுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு வரலாறு என்ற நூலைப்படைத்த குஸ்ட்டாவ் லாசன் (Gustave Lanson) என்பவர் காரணம். இக்குஸ்ட்டாவ் லாசனுக்கு பல்கலைகழக மட்டத்தில் பிரெஞ்சு இலக்கியத்தின் தராதரம் பற்றி விமர்சிப்பதும், படைப்பாளியைப் படைப்பிலிருந்து தனிமைப்படுத்துவதும் ஏற்புடையதில்லை. அவருக்கு எதிராக மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust) ‘சேன் பேவ்க்கு எதிராக’ என்ற நூலை எழுதுகிறார். அத்தகைய சூழ்நிலையில்தான் மேற்கண்டவை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டன. ரொலன் பார்த்தும், மிஷெல் ·பூக்கோவும் பின்-அமைப்பியத்தையும் அதனைத்தொடர்ந்து ‘வாசிப்பு ஒழுங்கைப் புரட்டிப்போட்ட ழாக் தெரிதாவையும் கொண்டாடும் மனநிலையிலிருந்தனர். படைப்பு – படைப்பாளி இருவருக்குமான பந்தங்களும், ஒரு படைப்பு தரும் புரிதலில் நூலாசிரியனின் பங்களிப்புக் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ரொலான் பர்த் படைப்பாளிகளை இருவகைபடுத்துகிறார். முதலாவது வகையினர் ‘Ecrivant’ – தாம் கற்றதை, பெற்றதை பிறருக்கு கூடுதல் அல்லது குறைவின்றி கொண்டுபோய் சேர்க்கிறவர்கள்- மொழி இவர்களுக்கொரு கருவி: கட்டுரையாளர்கள், உரையாசிரியர்கள், பத்திரிகையாளர்களை இதற்கு உதாரணம். இரண்டாம் வகையினர் Ecrivain-  இவர்கள் மொழியைச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள், இலாவகமாகக் கையாளுவதிற் தேர்ந்தவர்கள். மொழியைக் கலைநேர்த்தியுடனும், தொழில் நுட்பத்துடனும் பயன்படுத்துபவர்கள். இவர்களிடத்திலும் பிறருக்குத் தெரிவிக்க தகவல்கள் உள்ளன, உண்மைகள் இருக்கின்றன. பிறரிடம் சேர்ப்பதற்குமுன் அவ்வுண்மைகளை இவர்கள் பரிசோதிக்கிறார்கள். மனக்குப்பியில்  அவ்வுண்மையைப் பலமுறைக் குலுக்கி, தெளிவுற்றபோதும் நிறைவின்றி, பிறரை அழைத்து தங்கள் சோதனையின் முடிவையும் தங்களையும் மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வற்புறுத்துகிறவர்கள். ரொலான் பர்த்துடையக் கருத்தின் படி படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே தொடர்பென்று எதுவுமில்லை  அல்லது சராசரியான செய்தித் தொடர்புகள் இவ்விருவருக்குமிடையில் இல்லை. ‘அதாகப்பட்டது’ என்ற கதா காலட்சேபம் செய்யும் பணியில் எழுத்தாளனில்லை. இதை மறுக்கிறவர்கள் இரூக்கிறார்கள். எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்துப்பார்க்கக்கூடாது, பிரித்துப்பார்க்க இயலாது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். எழுத்தாளன் இறந்துவிட்டான் என்ற பார்த்தின் முழக்கமே, ரொலான் பார்த்தோடு இணைந்ததுதான். ஒரு படைப்பாளியின் தொகுப்பை எழுத்தின் அடிப்படையிலல்ல, படைப்பாளியின் பெயரால் தொகுக்கிறோம். எழுத்துடனான எழுத்தாளன் உறவு துண்டிக்கப்பட்ட பிறகு காப்புரிமைகேட்பது எந்த உரிமையில்? என்பதுபோன்ற கேள்விகளை அவர்கள் வைக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் மேட்டுக்குடியினருக்கென்றிருந்த இலக்கியம் எல்லோருக்கும் என்றானது. இந்த ‘எல்லோரையும்’ ஒருபடித்தான பண்புடன் அடையாளப்படுத்த சாத்தியமில்லை. அடிப்படையில் இவர்கள் ஒருவர் -மற்றவர்-பிறர். உயிரியல் தன்மையினாலும், பிற காரணிகள் அடிப்படையிலும் வேறுபட்டவர்கள். சந்தைபொருளாதாரத்தைச் சார்ந்த இருபதாம் நூற்றாண்டு இலக்கியமும் இதை மறந்து செயல்படுவதில்லை. பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டிலும் படைப்புலம் விமரிசனங்கள், விளம்பர உத்திகள், எழுத்தாளரின் புகழ், வெற்றிபெற்ற படைப்புகளை முடிந்தவரை காசாக்கும் தந்திரம் என்பதுபோன்ற செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நூலாசிரியன்- அவன் நூல் இரண்டிற்குமிடையே பந்தம் குறித்துக் கேள்விகள் எழுகின்றன. இன்றெழுதும் எழுத்தாளனை- அவன் படைப்பு சார்ந்து அல்ல – எழுதும் பொருள்சார்ந்து மூன்றாகப் பிரிக்கலாம். வேறுவகையான கோட்பாடுகள் இஸங்களின் கீழ் அவர்களுக்கு நிழல்தர வாய்ப்புகளில்லை.

– ‘இது விலைபோகும்’ என்பதற்காக எழுதுபவர்கள்.

– ‘தான்’, எழுத்து வினை குறித்த அக்கறை – என்பதுபோன்ற சிந்தனைகள் வழிநடத்த – எழுத்துக்காக எழுதுபவர்கள்.

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகமுரண்கள், வரலாறு ஆகியவற்றைப் பதிவுசெய்ய எழுதுபவர்கள்.

ஒரு நாடு அதன் மக்கள்; ஒரு சமூகம் அதன் பண்பு என்ற சுவருக்குள்ளிருந்த பிரெஞ்சு படைப்புலகம் இன்றில்லை. மனிதம், மானுடம் அவற்றின் அனுபவங்கள், செயல்பாடுகள், நெருக்கடிகள்  “Poetry is not a turning loose of emotion, but an escape”, எனக் எலியட் (T.S. Eliot) கூற்றிர்க்கொப்ப ‘தப்பிக்கும் மனப்பாங்குகள்’ கொண்ட எழுத்துக்களை எங்கிருந்தாலும் பிரெஞ்சு படைப்புலகம் வரவேற்கிறது. பல்சாக், கி மாப்பசான், அல்பெர் கமுய் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களுக்கு ஈடாக காப்கா, ஜாய்ஸ் போன்றவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். பலவேறு இயக்கங்களைக் கண்ட பிரெஞ்சு படைப்புலகத்திற்குத் தற்போதைக்குப் புதிதாக ஓர் இஸத்தினை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை. ஒவ்வொருமுறையும் சுதந்திரமென்ற பேரால் தங்கள் எழுத்துக்கு இலக்கணம் கற்பித்த ஊக்க எழுச்சிகளின் சமிக்கைகளைக் காண அரிதாக இருக்கிறது.  புகழ்பெற்ற Saint-Germain-des-Prés மதுச்சாலைகளில் எழுத்தாளர்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.

எழுத்து எழுத்தாளன் உறவில் கவனம் செலுத்திய இலக்கிய உலகம், தமது வளர்ச்சியில் கவனம் செலுத்தியதா அல்லது செலுத்துகிறாவென்றால், ‘இல்லை’ என்று ஒருமித்தக் குரலில் அபயக்குரல் எழுப்புகிறார்கள் படைப்புலகினர். உலகெங்கும் கல்வி நிறுவனங்களில் இலக்கியத்தைச் சீந்துவாரில்லை என்கிற நிலையிலிருப்பதைப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு வலைவிரித்து ஏமாந்து இன்று தூண்டிலாவது உதவுமா? எனக்கேட்கும் கையறு நிலையில் இலக்கியத்துறைகள் உள்ளன. நேற்றிருந்த மொழிப் பற்றும் அதனூடாகப் பெற்ற இலக்கிய தாகமும் இன்றில்லை. அதன் தாக்கம் படைப்புலகிலும் எதிரொலிக்கிறது, முன்னெப்போதும் கண்டிராத சோர்வு. இலக்கியத்தியத்தில் பல வடிவங்கள் நிறமிழந்து வருகின்றன. பிரெஞ்சு படைப்புலகில் இன்று சிறுகதைகளும், கவிதைகளும் அரிதாகவே வெளிவருகின்றன. ஊருக்கு ஒன்றிரண்டு அபிமானிகள் அவற்றிர்க்கு இருந்தபோதிலும்,  இணைய தளங்களையே இன்றவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. படைப்பிலக்கியத்தின் பிற வடிவங்கள் படுக்கையிற் கிடப்பதின் அடிப்படையில் இலக்கியமென்பதற்கு உரைநடை புனைவுகள் என்றே சுருக்கிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பம் நாளை புனைவிலக்கியத்தின் தலைவிதியையும் மாற்றி எழுதலாம். புனைகதை வடிவத்தை (புதினம்) ஆங்கிலத்தில் Novel என்றும், பிரெஞ்சு மொழியில் Roman ( Nouveau Roman?) என்றும் அழைக்கிறோம். ரொமாண்டிக் (Romantique), ரொமாண்ட்டிஸம், (Romantisme), Roman என்ற மூன்று சொற்களுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.  ரொமாண்டிக் பிரெஞ்சுமொழியில் உரிச்சொல் மட்டுமல்ல பெயர்ச்சொல்லுமாகும்: கற்பனைவாதத் தன்மைய, கற்பனைநவிற்சிவாதி என இருவகையில் அதனைப்பொருள்கொள்ளலாம். ஒரு ரொமாண்ட்டிக் என்பவன் அறிவைப் பின்னொதுக்கி உணர்வை முன்வைப்பவன், மரபுகளை ஒதுக்குகிறவன்.

‘ரொமாண்டிக்’ என்ற சொல் இன்று பலவீனமடைந்திருக்கிறது. மாறாக கூருணர்ச்சியைப் கதைபடுத்துகிறது. அப்பழுக்கற்ற ஒற்றை நாயகன், நாயகியை வியந்தோதும் கிலுகிலுப்பைகள் இன்றில்லை. அவர்களை உத்தமர்கள், அசகாய சூரர்கள் அநீதிக்கு எதிரானவர்கள் போன்ற தேன் தடவிய சொற்களை கொடுப்பாருமில்லை கொள்வாருமில்லை, அவை பழங்கதைகள். சூப்பர் ஹீ ரோக்களை கேலிச்சித்திரங்களில் மட்டுமே நாம் சந்திக்க முடியும். இன்றைய பிரெஞ்சு இலக்கியத்திற்கு நவீனமென்றோ பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq),  சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag).

நூற்றுக்கணக்கில் புனைவுகள் வருடந்தோறும் எழுதி பிரெஞ்சில் வெளிவருகின்றன. அவை இலக்கியமா? இலக்கியமில்லையா என்று எப்படித் தீர்மானிப்பது?

– மொழிஆளுமையும், சிந்திக்கவும் சிந்திக்கவைக்கவும் முடிந்தால் இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டால் இலக்கியம்.

இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வருடத்திற்கு 1,5 மில்லியன் புத்தகங்கள் விறபனையாகும் வெகுசன எழுத்தாளர் மார்க் லெவி (பொறியாளரான இவர் எழுத்துக்கள் தமிழில் சுஜாதாவை நினைவூட்டுகின்றன ), அன்னா கவால்டா  என்ற பெண்மணி மற்றொரு வெகுசன எழுத்தாளர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் இவரது நூல்கள் விற்பதாகச் சொல்கிறார்கள். இலக்கிய புனைவுகள் எனப்படுபவை புதிய எழுத்தாளர்களெனில் இருபதாயிரமும் பரிசுபெற்ற அல்லது விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளும் நூல்கள் அதிகபட்சமாக ஏழு லட்சம் பிரதிகளும் விற்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையிற் கிடைத்த தகவலின் படி  2012ல் பிரெஞ்சில் மொழிபெயர்ப்புகளையும் சேர்த்து 646 புதினங்கள் வெளிவந்துள்ளன. வெளிவரும் அனைத்துப் புதினங்களுக்கும் உடனுக்குடன் விமர்சனங்கள் எழுதும் மரபைக் கடைபிடிக்கிற பிரெஞ்சு இதழியல்துறைக்கு இதொரு சவால். 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இது மிகவும் குறைவு. மற்றொன்று புதிதாக எழுத முற்படும் இளைஞர்களில் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு. சுமார் எட்டுவருடத்திற்கு முன்பு சராசாரியாக வருடத்திற்கு 100 புதிய எழுத்தாளர்களின் அறிமுகம் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்ந்தது. இன்று அவ்வெண்ணிக்கை ஐம்பது விழுக்காடிற்கும் குறைவாக இருப்பது பிரெஞ்சுப் படைப்புலகை கவலைகொள்ள வைத்திருக்கிறது. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென ஒரு நூறு பெயர்களைக் குறிப்பிடலாம்: லெ கிளேசியோ, பத்ரிக் மொதியானோ, மிஷெல் ஹ¥ல்பெக்,  ஜொனாத்தன் லிட்டெல், லொரான் கொடெ, மரி தியாய், அத்திக் ராயிமி, ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp),  ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ரு•பன் (Jean-Christophe Rufin) ஆகியோர் முக்கியமானவர்களில் ஒரு சிலர்.

———————————————–

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s