மொழிவது சுகம் மார்ச் -17 -2013

1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:

பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல  இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.

பிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:

– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.

– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை

– வாக்கிய அமைப்பு முறை  சிக்கலானது.

– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.

எனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.

பிரெஞ்சு மொழி குறித்தும்,  அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்:  http://www.merriam-webster.com/info/2012words.htm

—————————————-

2. “Rem Tene, Verba sequentur’

ஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்?

போதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால்  எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம்.  “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான  ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி  குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும்  உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர்  வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது,  ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).

—————————————————————————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s