1. முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி:
கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்தேன், எனது இனிய நண்பரும் பேராசிரியருமான நாயக்கருடைய நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் உடன் வந்திருந்தார். பேச்சு இலக்கிய திசையிற் பயணித்தது. அவரது வலைத்தளம் பற்றியும் உரையாடினோம். பின்னர் என்னைப்பற்றிய செவ்வியாக நீண்டது. அச்செவ்வியை நண்பர் தமது வலைத்தளத்தில் இடப்போவதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் கட்டுரை வடிவில் அச்செவ்வி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னையில் வாசிக்கப்பட்டதாக அறிந்தேன். அக்கட்டுரையைத் தமது வலைத்தளத்திலும் நண்பர் இட்டிருக்கிறார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
http://muelangovan.blogspot.fr/2013/03/blog-post_8.html
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/writer-nagarathinam-krishna-171242.html
———————————————————–
2. மீண்டும் இந்தியா?
எனது சகோதரர் இல்ல சுப நிகழ்ச்சிகாரணமாக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 10ந்தேதி இந்தியா வருகிறேன். நண்பர்கள் துணையுடன் செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலைக்குறித்த ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய உள்ளோம். புதுவை ‘இலக்கியம்’ நண்பர் சீனு தமிழ்மணியின் ஆதரவுடன் நடபெற உள்ளது. வெகுவிரைவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கிறேன். ஏப்ரல் இறுதிவரை இந்தியாவில் இருக்கிறேன். நண்பர்கள் விருப்பப்படின் சந்திக்கலாம்.
——————————————————
3. உன்னைப் போல் ஒருவன்
Fernando Cortes அல்லது Hernando Cortez பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவைக் கைப்பற்றவும், அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிறுவவும் காரணமாக இருந்தவர். ஸ்பானிய தொல்லிலக்கியங்களை நினைவு கூர்பவர்களுக்கு முதலிற் கவனத்திற்கு வருவது ‘Don Quichotte’ (Cervantes), அடுத்தது ‘The Seducer of Seville and the Stone Guest’ ( Tirso de Molina). இவை இரண்டிற்கும் ஈடானதொரு படைப்பொன்றும் இருக்கிறது பெயர்: The True History of the Conquest of New Spain, ஆசிரியர் Bernal Diaz Castillo. 1580ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாகவே முதலிரண்டு இடத்தைப்பெற்றிருக்கிற நூல்களைப்போலவே விற்பனையில் சாதனைப் படைத்து வருமொரு படைப்பு. மெக்சிகையும் இதர பகுதிகளையும் கொர்ட்டெஸ¤ம் துணைக்குச்சென்ற அவரது படைவீரர்கள் 500பேரும் இரண்டுவருடப் போராட்டத்திற்குப் பிறகு எவ்வாறு கைப்பற்றினார்கள், அங்கிருந்த 18மில்லியன் மக்களையும் அவர்தம் மண்ணையும் ‘அஸ்டெக்’ வம்சாவளி ஆட்சியினரிடமிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதை அழகியலையும், செவ்வியலையும் சரிசமமாகக் கலந்து சொல்லப்பட்ட நாவல். முதல் இரண்டு நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் இந்நாவலை தங்கள் வீட்டிலில்லை எனசொல்வதற்கு ஸ்பெயின் மொழி பேசுபவர்கள் பல முறை யோசிப்பார்களாம். நூலைப்பற்றிய புகழுரைகளை மறந்துவிட்டு, நூலாசிரியர் பற்றிய தகவலுக்கு வருவோம். இவரைக்குறித்து பெரும் புதிர் இருப்பதாக நம்பப்பட்டது. அந்நாவலை வாசித்தவர்கள் நூலாசிரியர் வேறுயாருமல்ல நாவலில் வருகிற வெற்றிவீரனான கொர்த்தெஸ் உடன் சென்ற 500 படைவீரர்களுள் ஒருவரென இதுவரை நம்பினார்கள். அதுதான் இல்லை என்கிறார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ‘Duverger’.
Bernal Diaz Castilloவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியபோது அவரைப்பற்றிய உண்மைகள் சில இந்த ஆய்வாளருக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் நூலாசிரியரின் பூர்வீகத்தைப் பற்றிய தேடலில் மிகத் தீவிரமாக இறங்கினார். கௌதமாலா மற்றும் ஸ்பெயின் ஆவணங்களை இரவுபகலாக ஆய்ந்ததற்குப் பலன்கள் கிடைத்தன: நூலாசிரியரென நம்பப்பட்ட Bernal Diaz மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியவரல்ல, தவிர கொர்த்தெஸின் தென் அமெரிக்க படையெடுப்பை பெர்னால் மிகத் துல்லியமாக விவரித்திருந்தார். ஸ்பெயின் மன்னருக்கும் படைத்தளபதிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கும் தர்க்கமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன.- இவைகளெல்லாம் பிரெஞ்சு ஆய்வாளரை யோசிக்க வைத்தன. இத்தனைபெரிய காவியத்தை ஓர் எழுத்தறிவற்ற சாதாரண வீரன் படைத்திருக்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் மேலும் ஆவணங்களைத் தோண்டியதின் விளவு, Bernal Diaz Castillo என்கிற பெயர் ‘புனைபெயர்’ என அறியபட்டது. The True History of the Conquest of New Spain என்ற நூலின் உண்மையான ஆசிரியர் வேறுயாருமல்ல அது கடைசியில் நூலின் கதை நாயகனாகச்சொல்லப்பட்ட கொர்ட்டெஸ்தான் என்ற முடிவுக்கு வருகிறார் பிரெஞ்சு ஆய்வாளர். சொந்த பெயரில் எழுதிய ஆக்கத்தை மன்னரின் ஆணைக்கேற்ப முதலில் கொர்ட்டெஸ் தீயிட வேண்டியதாயிற்று. ஸ்பெயின் மன்னர், பிறகு தெளிவாக தடையும் பிறப்பித்து விட்டார், அதன்படி நூலை மீண்டும் எழுதி அரங்கேற்ற கொர்ட்டெஸ¤க்கு வாய்ப்பு மறுக்கப்பட, கொர்ட்டெஸ் கண்டுபிடித்த தந்திரமே, தனது படைவீரன் ஒருவன் பெயரில் சொந்த அனுபவத்தை நூலாகக் கொண்டுவரத் துணிந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறந்து (பின்-பின் நவீனத்துவம்?) வேறு பாதைகளில் மேற்கத்திய நாவலுலகம் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தமது சொந்த அனுபவத்தை நூலாக எழுதுவது. உண்மையில் இதை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொர்ட்டெஸ் பின்பற்றியிருக்கிறார் என அறியவருகிறோம். 1980லிருந்து மேற்கத்திய புனைகதை உலகத்தின் பாதை என்ன என்பதைத் தொடராக எழுதும் எண்ணமிருக்கிறது.
————————————————————————————————————————————-