மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts

பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை.  Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று..  பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு பாலத்தை அமைத்தார்கள். பின்னர் சுங்கக்கடவு பாலமாகவும் இருந்து வந்திருக்கிறது. பல்சாக்கின் La Rabouilleuse நாவலை படித்தவர்களுக்கு, அகதாவின் மூத்தமகன் பிலிப் பிதோ பாலத்திற்கு தண்டம் கட்ட ஷ¥க்களைத் துடைப்பது ஞாபகத்திற்கு வரலாம். முதல் இரண்டு உலகயுத்தங்களின் காரணமாக இப்பாலம் கலகலத்துப்போக பிரெஞ்சு அரசு சில ஆண்டுகள் போக்குவரத்தை தடைசெய்தும் வைத்திருந்தது. தற்போதுள்ள பாலம் 1981ம் ஆண்டு உருவானது.

இவ்வளவு புராணமும் எதற்கென்று கேட்கறீர்களா? ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச்சொல்ல இப்படி சுற்றிவளைத்து பாட்டிகதை சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக காதலர்களின் பிரார்த்தனைக் கூடமாக மாறிவருகிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கலாம். விளைவு பாலத்தருகே இருக்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தைப் பார்க்க மறந்தாலும் Ponts des arts பாலத்தை பார்க்காத சுற்றுலாவாசிகள் இல்லையென்கிறார்கள். அதிலும் நீங்கள் ஆணாக இருந்து சஹானாவின் உத்தரவாதத்தை நம்பி திருமணமும் செய்து, அவளுக்காக கால்கடுக்க காத்திருந்து, சென்னை காவல் துறை ஆணையகத்திற்குள் நுழைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து பொருமிக்கொண்டிருப்பவரெனில், கடனோடு கடனாக பாரீஸ¤க்கு ஒரு முறை வந்து அம்பாள் Ponts des arts பாலத்தை ஒரு சுபயோல சுபதினத்தில் தரிசித்துவிட்டுபோவது நல்லது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும், ஒற்றையாகவோ, ஜோடியாகவோ ஒரு பூட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவர் அல்லது அன்புக்குறியவள் பெயரையும் எழுதி பூட்டிவிட்டு போனீர்களெனில் உங்கள் காதல் ஆசீர்வதிக்கப்படும், ஆமென்.

 

2. அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம்: Après lui.

 ‘அவன் பின்னால்’ என மொழிபெயர்க்கவேண்டும்.  சுவாரஸ்யத்திற்காக ‘சுற்றி சுற்றி வந்தீக’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவன் அல்லது ஒருத்தி பின்னால் அலைவதற்கான கிரியாஊக்கி எது?

படத்தின் ஆரம்ப காட்சியில் மாத்யூ கிட்டார் வாசிக்க அவன் நண்பன் பெண்ணுடையில் ஆடுகிறான். நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்க கிடார் வாசிப்பவனும் பெண்ணுடை தரித்துக்கொள்ள இருவரும் ஓரிரு நிமிடங்கள் சேர்ந்தே ஆட்டம் போடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டுகிறார். அதேக் காட்சியில் எதிர்பாராமல் மகனைப்பார்க்க வரும் தாய் மகனும் அவன் சினேகிதனும் உடுத்தியுள்ள ஆடைகளைக் கண்டு அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக மகனை பெண்ணொருத்தியை சிங்காரிப்பதுபோல, முகமாவு இட்டு, கண்மை தீட்டி உதட்டுச்சாயம் பூசி பூரித்து போகிறார். அடுத்து வரும் காட்சிகளை நியாயப்படுத்துவதற்காக இக்காட்சியை அமைத்திருக்கவேண்டும். அடுத்த காட்சியில் கேமரா சாலைவிபத்தை காட்சிபடுத்துகிறது. முழுத்திரைக்கதையும் பிரெஞ்சுத் திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான காதரின் தெனெவ் (Catherine Deneuve )என்பவரையும் மற்றொரு இளைஞரையும் நம்பிச் சொல்லப்ட்டிருக்கிறது. கதாநாயகி என்றால் மும்பை வரவு, இருபது வயசு என்றபிம்பங்கள் நம்மிடத்திலிருக்கின்றன. இப்படத்தில் அறுபது வயது காதரீன் கதை நாயகி,  பிலிம் சுருள்கள் மொத்தமும் அவருக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய மகன் மாத்யூவின் இறப்பிற்குப் பிறகு கமி(காதரீன் தெனெவ்) பிராங்க் மீது பாசத்தைப் பொழிகிறாள். பிராங்க் மாத்யூவின் நெருங்கிய ஆண் சினேகிதனென்று இதற்கு முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கமியின் கணவன், அவள் மகள் அனைவரும் பிராங்க்கை வெறுக்கிறார்கள். அவன் தன்பாலின விரும்பி என்பதால் மட்டுமல்ல, விபத்து நடந்தபோது வாகனத்தை ஓட்டியவன். மாத்யூவின் மரணத்திற்கு ஒருவகையில் அவனும் பொறுப்பு. மகனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பிராங்க் மீது கமி அன்பை பொழிகிறாள். அந்த அன்பு படிப்படியாக எல்லை மீறுகிறது.

போர்ச்சுகீசுய நாட்டைச் சேர்ந்தவனான பிராங்க் ஏழைப்பெற்றோருடன் வாழ்பவன். அவனுடைய தகப்பனார் கட்டடத் தொழிலாளி. பிராங்க்குடைய பல்கலைக்கழக படிப்பு இதுவரை மாத்யுவின் ஆதரவில் இருந்தது. படிப்பைத் தொடரமுடியாதென்ற நிலையில் தந்தையுடன் கட்டட வேலைக்குப்போகும் பிராங்க்கை மீண்டும் படிப்பைத் தொடரச் செய்கிறாள் கமி. அவன் வீட்டில் நிதிநிலமை சங்கடத்தைத் தருகிறபோது, இவளுடைய புத்தகக்கடையில் வேலைபோட்டுக்கொடுக்கிறாள். அவன் போகும் இரவு விடுதிகளைத்தேடி இவளும் போகிறாள். அவன் விரும்பும் பாடல்களை இவளும் கேட்கிறாள். அவன் கதைக்கும் இளைஞர்களை இவளும் தேடிச்சென்று கதைக்கிறாள். அவன் நடப்பதை பொறுக்காது ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கிறாள். (பிராங்க்கின் பெற்றோர் தங்கள் ஏழ்மையை அவள் அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு நாள் அந்த ஸ்கூட்டரைத் தள்ளிவந்து  கமியின் கடைவாசலில் போட்டுவிட்டுப்போகிறார்கள்). கமிக்கு பிராங்க் மீதூறும் அன்பை இனம்காணமுடியாமல் குழம்புகிறாள்.  அன்பு முற்றி நோயாக அவளுக்குள் வளர்ந்து சீழ்பிடிக்கிறது, அது புரையோடுவதற்கு முன்பாக அவள் கணவனும் பிள்ளைகளும் அவளுடைய ஊத்தை அன்பை வெட்டி எறிய நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞனே கமியில் தொல்லை தாங்காது சொந்த நாட்டிற்கு ஓடுகிறான். இவள் விடுவதில்லை லிஸ்பனுக்குச்சென்று அவன் தங்கிய அறையை தன்னுடயதாக பாவிக்க கதை முடிகிறது.

மிகவும் சிக்கலான கதை.  திரைக்கதை மட்டுமல்லை, காதரீனும் பிராங்க்காக நடிக்கும் இளைஞனும் கத்திமீது நடக்கிறார்கள். பிராங்க்கைத்தவிர பிறமனிதர்கள் இயங்கும் உலகம் அவளுக்கு வனாந்தரம். மனிதர்கள் விலங்குகள். மகனை இழந்து விரக்தியின் உச்சத்திலிருக்கும் தாயென்ற பிரதிமைக்குள் உறைந்திருக்கும்  பெண்ணுடலின் கட்டளையை மறுக்கப்போதாது தவிக்கும் ஒருபெண்மணியை நன்றாகவே உணர்ந்து சித்தரிக்கிறார் காதரீன் தெனெவ். கேயெல் மொரெல் (Gaël Morel) படத்தின் இயக்குனர். இவருடைய வேறெந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. இப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. பட உபயம் பிரெஞ்சு ARTE தொலைக்காட்சி. பிரெஞ்சோ ஜெர்மனோ தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.

http://videos.arte.tv/fr/videos/apres_lui-6870156.html

—————————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s