மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’

The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.

1. Nightwood – Djuna Barnes.
2. A tale of a Tub – Jonathan swift
3. The Phenomenology of the sprit -G.F. Hegel
4. to The light house -Virginia Woolf
5. Clarissa, or the History of a Younglady – Samuel Richardson
6. Finnegans Wke – James Joyce

7. Being and Time Martin Heidegger
8. The Faerie Queen – Edmund Spenser
9. The Making of Americans -Gertrude Stein
10.Women and Men -joseph McElroy

இப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.

பிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு  நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:

இந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள்  நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.

இறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:

உங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.

http://www.publishersweekly.com/pw/by-topic/book-news/tip-sheet/article/53409-the-top-10-most-difficult-books.html

—————————

2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.

இரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா? எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை  கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோது கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.

உலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள்,  எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை(?) மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ?

ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலாது. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம்.  நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.

1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும்.  தங்கம் நிச்சயம் உண்டு

2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.

3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.

4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம்  விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.

5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.

————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s