மொழிவது சுகம்:- ஜூன் 12

அம்பானிவீடும் சென்னை விமான தளமும்:

அண்மையில் அருந்ததிராய் கட்டுரையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது அம்பானி மும்பையில் கட்டியெழுப்பிய ‘வசந்தமாளிகை’  ‘Antilla’ பற்றியது. அவரது மனைவிக்காக கட்டினார் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வசந்த மாளிகையைக்காண மும்பை வாசிகள் கூடுகிறார்களென்று பேச்சு. அண்ணாந்து பார்த்துவியக்கிறார்களாம். எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வருவார்கள். அந்த ஒரு நாள் சுற்றுலாவின்போது ஒருமணிநேரமோ இரண்டுமணிநேரமோ மீனம்பாக்கம் அருகே பேருந்தை நிறுத்தி காத்திருந்து விமானங்கள் வந்திறங்குவதைப் பார்ப்பார்கள். பழைய திரைப்படங்களில் கதாநாயகன் விமானத்தில் இறங்குவதை காண்பிக்கவென காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்ப்பதுண்டு. கதாநாயகனோ அல்ல கதாநயகியோ யாரேனும் இருவரில் ஒருவர் மாளிகைக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கவேண்டும். வயிறு ஒட்டிப்போன ரசிகர்களை நம்பியே பிலிம் சுருள்கள் இருந்தன. விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி, நகரவாழ்க்கை அதிசயங்களுக்கும் பழகியிருக்கும் இந்நாட்களில்கூட தென்மாவட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஆர்வத்துடன் விமானத்தை பார்க்கும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ‘Antilla’ வைப்பற்றிய அருந்ததிராயின் கட்டுரையை வாசித்தபோது விமானத்தை வேடிக்கைப்பார்க்கும் தென்மாவட்ட கிராமத்து மனிதர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். நியூயார்க்கிலோ, சிங்கப்பூரிலோ ‘Antilla’விற்கு இம்முக்கியத்துவம் கிடைக்குமாவென்று சொல்லவியலாது. உலகில் சேரிகள் நெருக்கமாகவுள்ள நகரங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலுமுள்ளன, ஏன் இந்தியாவில் சென்னையைக்கூட குறிப்பிடலாம். எனினும் மும்பை நகருக்கு அம்பானியின் தயவால் இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. மும்பை குடிசைவாசிகள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதிலும்  ஹெலிகாப்டர் உபயோகத்திற்கான தளம், 27மாடிகள், 9 லிப்டுகள், மாடியிலேயே பூங்கா, உடற்பயிற்சிக்கான கூடம், வாகனங்கள் நிறுத்த ஆறுமாடிகள், 600 பணிஆட்களென்றால் சும்மாவா. தற்போதைக்கு ‘Antilla’ வில் ஆள் நடமாட்டமில்லையாம். அதாவது குடிபோகாமல் இருக்கிறார்கள். வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து கட்டவில்லையோ? அதனாலென்ன அறுபதினாயிரம் மனைவியர், அக்குரோணி கணக்கில் சேனைகள், அஷ்டதிக்கு பாலகர் என்றெல்லாம் கற்பனைகளை வரித்துப் பழகிய நமக்கு இந்த மாளிகையை மையமாகவைத்து புனையப்படும கதைகள் கசக்கவா செய்யும். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் முதலாளிகள் சுவாசிக்க பிராணவாயுயின்றிதவிக்க இந்தியப்பொருளாதாரத்தில் இவர்கள் காட்டில் மழை. 1.22 பில்லியன் மக்கத்தொகைகொண்ட பாரதத்தின் மொத்த தேசியவருவாயில் 25 சதவீதம் அம்பானியையொத்த முதல் நூறு பணக்காரர்களிடம் இருக்கிறதாம். இவர்களைப்போன்றவர்களும் புதிதாய் இந்தியப்பொருளாதாரத்தில் தலையெடுத்திருக்கிற 300மில்லியன் நடுத்தர வர்க்கமும் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு வழியற்ற 800 மில்லியன்மக்களின் வாழ்க்கையைக்குறித்தும், வாழ்வாதாரங்களைக்குறித்தும் பிரக்ஞையற்று வாழ்வதாக அருந்ததிராய் எழுதுகிறார், யோசிக்கவேண்டியிருக்கிறது.

பிரான்சுவா ஒலாந்து

எதிர்பார்த்ததுபோலவே பிரான்சுநாட்டு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு அதிபருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த  ஓலாந்துகாரர்கள்.

பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது. மொத்த வாக்காளார்களில் 80 சதவீதத்தினர் தங்கள் உரிமையைப் பயன்படுத்தியிருந்தனர். பிரான்சுநாட்டின் அரசியலமைப்பு விதிப்படி முதல் சுற்றில் வெற்றிபெற்றிருந்த முதலிரண்டு வேட்பாளர்களும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிற்கு  அனுமதிக்கப்பட்டிருந்தனர். சோஷலிஸ்டுகட்சியின் ஒலாந்தும், வலதுசாரிகளின் சர்க்கோசியும் மோதினார்கள். போனமாதம் எழுதியிருந்ததைத்போன்றே ஒலாந்து வெற்றிபெற்றார். சர்க்கோசிக்கு எதிரான அலையே ஒலாந்துவின் வெற்றிக்கு உதவியதென சொல்லவேண்டும். பிரான்சுவா ஒலாந்து 52 விழுக்காடு வாக்குகளையும், சர்க்கோசி 48 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.

“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவா ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின்  சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு,  தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாக கூறவும் அவர்களுக்கு தயக்கமில்லை.

இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம் -மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்க¨ளைப் பொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி குத்திரைபட்டிருந்தது.. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை. அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள். ஒலாந்து தீவிர இடதுசாரியுமல்ல. இங்கிலாந்தின் முன்னாள் அதிபர் தோனி பிளேர் ரகம். ஆக உருப்படியான மாற்றங்களுக்கு உத்தரவாதமுண்டு. சிக்கனத்தின் அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைக்கு மாறாக ஒலாந்து வற்புறுத்தும் வளர்ச்சியின் அடிப்படையிலான பொருளாதாரக்கொள்கையின் யோசனைக்கு ஆதரவாக சில ஐரோப்பிய தலைவர்களன்றி, ஒபாமாவின் அரசும் செவிசாய்த்திருக்கிறது

புதிய அதிபர் பதவியேற்றதும், ஆட்சிபொறுப்பிலிருந்த வலதுசாரி அரசாங்கம் விலகிக்கொண்டது. அதிபர் ஒலாந்துவின் சோஷலிஸ்டு கட்சியின் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. எனினும் ஜூன்மாதத்தில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் பெரும்பான்மை பெற்றாலொழிய ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை. பிரெஞ்சு குடியாட்சியில் அதிபர் ஒரு கட்சி, ஆள்பவர்கள் ஒருகட்சி என்ற காட்சிகள் புதியதல்ல. எனினும் இப்போதுள்ள சூழல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். அன்றியும் ஒலாந்து தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எதிர்கட்சிவசமிருக்கிற நிர்வாகமே காரணமெனக்கூறி நாளை தந்திரமாக தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மையான கருத்துகணிப்புகள் புதிய அமைச்சரின் சோஷலிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆக அதிபரின் அமைச்சரவை தப்பி ஜீவித்திருக்க வாய்ப்புண்டு. சட்டவரைவிற்கு உட்படுத்தவேண்டிய எந்தவொரு முடிவையும் பாராளுமன்றத் தேர்தல் நடந்தேறும்வரை இடைக்கால அரசாங்கம் எடுக்கமுடியாது. புதிய அதிபர் தற்போதைக்கு உடனடியாக அவரால் செய்யமுடிந்த சிலவற்றை நடைமுறைபடுத்தியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமது அமைச்சரவையில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையிலிருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார். அதைபோலவே புதிய அமைச்சரவையில் 17 ஆண்கள், 17 பெண்கள். அடுத்து அதிபர் தமது ஊதியத்தையும் அமைச்சர்கள் ஊதியத்தையும்; தங்கள் இருதரப்பு செலவினங்களையும் 30 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தார். அதையும் நடைமுறை படுத்தியிருக்கிறார். இனி பிறநடவடிக்கைள் குறித்து ஜூன்மாத பாராளுமன்ற தேர்தலுக்குபிறகே சொல்லமுடியும்.

——————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s