மொழிவது சுகம்- பிப்ரவரி 2012

தனிமை:

அண்மையில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்முடிவு ஏழு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒருவர் தனிமையில் வாழ்வதாகத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தனிமை வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இன்னார்தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நிலை. இந்நோய்க்கு இதுதான் உகந்த காலம், இவர்கள்தான் பொருத்தமானவர்கள், இப்பிரிவினரைக் இலக்குவைத்தே தாக்குகின்றது எனகணிக்கமுடியாத சூழலில் சமூக வியல் அறிஞர்களை குழப்பத்தில் இத்தனிமை நோய் வைத்திருக்கிறதென்று சொல்லவேண்டும். காரணம் கீழைநாடுகள்போலன்றி மாணவர்கள், மணவாழ்க்கையை விரும்பாதவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் என பலரும் இந்நோயின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

இப்போதும் எங்கள் கிராமத்தில் கூட்டுக்குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நல்லது கெட்டது நடக்கின்றபோது பார்க்கவேண்டும் ஒருவர் வண்டியை பூட்டிக்கொண்டிருப்பார், இன்னொருவர் வெள்ளைவேட்டி சட்டை சகிதம் பக்கத்து டவுனுக்கு புறப்பட்டுப்போவார், கிழவி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கும், மருமகள் வாயிலிருந்து சலித்துக்கொண்டு பதில் வரும். அடுத்தமாதத்தில் விசேடமிருக்க அப்போதே கெட்டிமேளமும் நாதஸ்வரமும் அந்த வீட்டில் ஒலிக்க ஆரம்பிக்கும், வீட்டிற்கு போனால் யாரு மணியக்காரர் வீட்டு சின்னத்தம்பியா? உட்காருங்க, அடியே இரண்டு முறுக்கும் ஒரு லட்டும் வச்சு பிள்ளைகிட்டே கொடு என்று அன்புகலந்த உபசரிப்பு தவறாமல் வரவேற்கும்.  விவசாயக்குடும்பங்களைத் தவிர்த்து வியாபாரக் குடும்பங்களும் (இதில் அரசியலும் அடக்கம்) கூட்டுக்குடும்பங்களாக வாழும் பேற்றினை பெற்றிருக்கிறார்கள். இவ்விரண்டு பிரிவினரைத் தவிர்த்து நமது இந்தியச் சமூகத்தை அனுகினால் குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினருக்கு விரும்பியோ விரும்பாமலோ உயிர்வாழ்க்கையின் ஒரு பகுதி தனிமைக்கு என்றாகிவிடுகிறது. மேற்கத்திய நாடுகளைப்போன்றே இந்திய நகரங்களிலும் பிள்ளைகளை தொலைதூர நகரங்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் பெற்றோர்களை பார்க்கிறோம். ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கிறார்கள், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சொந்தமண்ணில் தனிமைதான் துணை: நினைவுகளைத் தின்று , ஏக்கங்களைக் குடித்து அவர்கள் பசியாறவேண்டியிருக்கிறது. பிறர்பார்வாவையில் அவன் அல்லது அவள் தனிமையில் வாழ்வதில்லை, தனிமையில் வாடுகிறான் அல்லது வாடுகிறாள்

மனிதன் தனித்திருக்கப் படைக்கப்பட்டவல்ல தன் இனத்தைத் தேடி, (இங்கே -அவனை அடையாளப்படுத்தக்கூடிய எதுவும்) உரையாடவும், உறவாடவும் படைக்கபட்டவன். இயல்பிலே மனிதவாழ்க்கை பிறர் சார்ந்தது. ஒற்றைக்குரியதல்ல. அவன் இருப்பு பிறால் தீர்மானிக்கப்படுவது. தந்தை, தாய், அக்காள், தங்கை, முதலாளி, தொழிலாளியெனத் தனிமனிதனை அடையாளப்படுத்தும் எந்தச் சொல்லையும் எடுத்துக்கொள்ளுங்கள்: இன்னாரின் தந்தை, அவளுக்குத் தாய், அவனுக்குச் சகோதரன், அவர்களுக்கு முதலாளி என்ற உறவுகளால் உருவானவை. இந்த மற்றமைகளிடத்தில் வெறுமைகளையிட்டு நிரப்பினால் தனிமை. இன்றையச்சூழலில் தனிமையைத் தவிர்க்கமுடியுமா, விலக்குவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? இந்த நூற்றாண்டின் கொடிய கொள்ளை நோயென்று சொன்னாலும் மிகையில்லை. இருந்தாலும் அதற்காக நாம் மனம் சோர்ந்துவிடமுடியாது. நாம்மை நாமே புரிந்து கொள்வதற்கு தனிமையைக்காட்டிலும் வேறு சந்தர்ப்பம் வாய்க்குமா சொல்லுங்கள் என்கிறவர்களும் இல்லாமலில்லை. அப்படியான சந்தர்ப்பம் அறுபதில் வாய்ப்பதால் என்ன இலாபமென்று அவர்கள் கொஞ்சம் விளக்கினால், தேவலாம். .

 ஜேன் ஏர்

ஜேன் ஏர் (Jane Eyre) என்ற நாவலை நம்மில் பலர் வாசித்திருக்ககூடும். நம்மில் பலர் என்ன இருந்தாலும் ஷேக்ஸ்பியர் போல் ஆகுமா என்பார்கள். எனக்கு ஜேன் ஏர் நாவலையும் அதன் ஆசிரியர் சார்லத் ப்ரோண்ட்ட (Charlotte Bronte) என்கிற பெண் எழுத்தாளரையும் கொண்டாடவேண்டும். நமது தமிழ் பேராசிரியர்கள் கம்பனைப்போல் ஆகுமா, சங்க இலக்கியங்களைப்போல ஆகுமா என குரல்கொடுப்பதுபோலவே ஆங்கிலபேராசிரியர்கள் ஷேக்ஸ்பியருக்கு ஈடாக ஒருவர் பிறக்கவில்லை என்கிறார்கள். எனக்கு முதலில் இலக்கியம் என்பதே ஒப்பிடுசெய்வதல்ல. நளவெண்பாவிற்கு ஒரு புகழேந்தியெனில் வானம் வசப்படும் நாவலுக்கு ஒரு பிரபஞ்சன். இருவரும் அவரவர் காலத்தில் சாதித்தவர்களே. கம்பனே இன்றிருந்தாலுங்கூட அவரது படைபாற்றல் ஒர் உரைநடை இலக்கியத்தை தருவதற்கே உதவியிருக்கும். கணினியின் உதவியால் நாம் ஆயிரம் பக்கங்களில் படைப்புகளை கொண்டுவருகிறபொழுது, எழுத்தாணிகொண்டு பழகியவரென்பதால் பத்தாயிரம் பக்களில் நாவல் எழுதியிருப்பார் அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும் இராமயணம்போல வருமா என்றெல்லாம்  அவரை விமர்சிக்க முடியாது. அந்தக் கம்பன் காலம் வேறு. இந்தக் கம்பன் காலம் வேறு. மீண்டும் ஜேன் ஏர் நாவலுக்கு வருகிறேன். சொந்த வாழ்க்கை முழுவதையும் படைப்பில் பேசிய முதல் நாவல் ஆசிரியர் அநேகமாக இவராகத்தான் இருக்கக்கூடும். 1847ம் ஆண்டு பதிப்பிக்கபட்ட இந்நாவல் பல பதிப்புகளை கண்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் ஆசியரின் முதல் நாவல்(The Professor) பல பதிப்பாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டது. நவலுக்குகிடைத்த வரவேற்பு திரைப்படத் துறையினரின் கவனத்தைப்பெற்றது 1915ம் ஆண்டிலிருந்து நாவல் பலரின் திரைக்கதைகளில் வெள்ளித் திரையை ஏற்கனவே கண்டிருக்கிறது. இந்நிலையில் பத்தாவது முறையாக நாவல் திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. படத்தின் இயக்குனர் காரி ·புக்குனாகா (Cary Fukunaga).. தொலைக்காட்சியில் ஜோன்போன்ஸ்டெய்ன்(Joan Fontaine) ஜேர் ஏர் ஆக நடித்த பழைய திரப்படத்தைப் பார்த்திருக்கிறேன். புதுப்படம் எப்படி இருக்கிரதென்று பார்க்கவேண்டும். நாவலை படிக்கப் பொறுமையில்லாதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம். இளம்வயதில் தாயைப்பறிகொடுத்து பின்னர் தந்தையையும் இழந்து சித்தியின் ஆதரவில் வளரும் பெண்ணுக்கு ஏற்படும் சோதனைகளென்ற உலகமறிந்த கதை எப்படி அலுக்காமல் இத்தனை வருடங்களுக்குப்பிறகும் சினிமாவாக மீண்டும் மீண்டும் அவதாரமெடுத்து வெற்றிபெறுகிறதென்பதை அவசியம் இலக்கியத்தை முழம்போடுகிறவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அழகான ராட்சசன்

பிராசுவாஸ் சகாங் (Françoise sagan) என்ற பிரெஞ்சு பெண் நாவலாசிரியைக்கு அழகான ராட்சசி என்ற பட்டப்பெயருண்டு. அவரது ‘வணக்கம் துயரமே’ நாவலைப்படித்துவிட்டு மொரியாக் என்கிற இலக்கிய விமர்சகர் அவருக்கு சூட்டிய பெயர். பெண்ணுக்கு சரி குழந்தைக்கு வைப்பார்களா? அதுவும் அக்குழந்தையின் பெற்றோர்கள்! பிரான்சு நாட்டின் வடபகுதி மாகாணமொன்றில் நடந்த அதிசயமிது. உள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்குச்சென்ற பெற்றோர்கள்  பிறப்பு இறப்பு அலுவலகத்தில் தங்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது, ஊழியர் குழந்தையின் பெயரைக்கேட்க அவர்கள் ‘ராட்சசன் (Démon) எனக்கூறியிருக்கிறார்கள். ஊழியர் பெற்றோரிடம் இப்பெயர் நன்றாக இல்லையே, நாளை குழந்தையைப் பாதிக்காதா என்றிருக்கிறார். பெற்றோர்கள் உறுதியாக இருக்கவே வேறுவழியின்றி குழந்தையின் பெயரை ‘ராட்சசன்’ என்று பதிவு செய்துவிட்டார். ஆனாலும் அரசு ஆட்சேபனை தெரிவித்தது. தனது கடிதத்தில் “நாளை குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும்” எனவே வேறு பெயரை தேர்வுசெய்யவேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் பெற்றோர்கள் விடுவதாக இல்லை. தற்போதைய சூழலில் பெற்றோர்கள் என்ற தகுதியில், குழந்தையைத் தவிர வேரெவரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதென்ற நிலையில் தங்களுக்கு எந்தப்பெயரையும் குழந்தைக்கிட உரிமையுண்டு என்று வழக்குபோட்டு குடும்ப நீதிமன்றத்தில் தங்களுக்கு ச் சாதமாகத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்;கீழ் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யப்போவதில்லையாம். ஆகப்பையன் வளர்ந்து ஆட்சேபம் தெரிவிக்கும்வரை ‘ராட்சசன்’. எனக்குள்ள சந்தேகம் ஒருவேளை இது குழந்தையின் தாய் செய்த தந்திரமாக இருக்கலாம். மகனைக் கொஞ்சும் சாக்கில் கணவனை திட்டுவதற்கு அவர் தீட்டிய தந்திரமோ என்னவோ?  இதுபோன்ற விஷயங்களில் பெண்கள்கெட்டிக்காரர்கள்.  ராட்சசன் என்ற பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்த பிரெஞ்சு அரசாங்கம்தான் இந்தோசீனா யுத்தத்தின்போதும் இரண்டாம் உலகப்போரின் போதும் பிரெஞ்சு ராணுவத்தில் சேரவந்த தமிழர்களின் பெயர்கள் நீளமாக இருக்க திங்கள், செவ்வாய், புதன் என்று வார நாட்கள் பெயர்வைத்தது.  தரை, வானம், திராட்சை, கறுப்பு வெள்ளை, பச்சை, நாய், கழுதை என்றெல்லாம் புதுச்சேரி தமிழர்களுக்குப் பெயர் விநோதங்களுண்டு. யாரேனும் புதுச்சேரிதமிழரை பெயரைக்கேட்க அவர் ‘இல்லை’ (Rien) எனலாம். உண்மையில் அது அவர் பெயர், கனவான் பிரெஞ்சுக்காரன் சூட்டியது.

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
———————————————-

நன்றி: அம்ருதா பிப்ரவரி 2012

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s