நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.
ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-
2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
—————————————————————–
எனது மூன்று நூல்கள்:
இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————