இலக்கியமென்பது….
இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் – நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன. இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.
ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்
புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.
இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். அவ்வரிசைகளில் தொடர்ந்து ஏன் எதற்கென்று தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதலாமென்று திட்டம்:
பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir– Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel
ஆங்கிலம்:
1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
————————————————