பாந்த்தெயொன் (Panthéon) என்பது பாரீஸிலுள்ள ஒரு நியோ-கிளாசிக்கல் வகை நினைவுக்கூடம். சொர்போன் பல்கலைகழக வளாகமிருக்கும் Quartier latin பகுதியில் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் Sainte Geneviève (புனித ழெனேவியேவ்) சவப்பெட்டியைப் பாதுகாப்பதற்கென கட்டப்பட்ட இத்தேவாலயம் பின்னர் பிரான்சு நாட்டின் பெருமைக்கு உதவிய மாமனிதர்களின் பூத உடல்களுக்கு புகலிடம் தரும் நினைவுக்கூடமாக உருமாறியது. இத்தேவாலயத்தில் 72க்கு மேற்பட்ட சரித்திர நாயகர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் உள்ளன ரூஸ்ஸோ, ஸோலா, மால்ரோ என்ற அவ்வரிசை நீளமானது. இது தவிர பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் வாசகங்களையும் சுவர்களில் பொறித்துள்ளனர். இப்பட்டியலில் Négritude இயக்கம் கண்ட அண்மையில் மறைந்த கறுப்பரின கவிஞர் ‘எமே செசேர்’ம் அடக்கம். அண்மையில் அல்பெர் கமுய் நினைவு தினத்தை பிரெஞ்சு அரசு கொண்டாடியது. அப்போது பிரான்சு அதிபர் சர்க்கோசி படைப்பாளருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக சொந்த கிராமத்தில் புதைத்திருந்த அன்னாரது உடலை இந்த தேவாலயத்துக்கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதிபர் அறிவித்தபோதிலும் பாந்த்தெயோன் தேவாலயத்திற்குள் எவரது உடலை அல்லது எஞ்சியவைகளைக் கொண்டுவரலாமென முடிவெடுக்க ஒரு குழு உள்ளது.
அல்பெர் கமுய் சவப்பெட்டியை பாந்த்தெயோன் கொண்டுவர அக்குழுவிலிருந்த அவ்வளவுபேரும் சம்மதித்திருந்தார்கள். ஆனால் கமுய் மகன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதிபர் மாளிகை பலமுறை தூதுவிட்டது, இரண்டுமுறை அதிபரின் செயலர் நேரில் சந்தித்து மகனிடம் சமாதானம் பேசினார். அதிபரின் விருப்பத்தை மறுக்க அவருக்குக் காரணங்களிருந்தன. அப்பா லூர்மரைனில்
(- அல்பெர் கமுய் உடலடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுகிராமம்) அமைதியாக உறங்குகிறார் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்கிறார். அதிபர் சர்க்கோசியின் அல்பெர் கமுய் மீதான திடீர்ப்பாசத்தை எழுத்தாளரின் மகன் சந்தர்ப்பவாதமென்கிறார். பிரான்சு நாட்டில் அல்பெர் கமுய் பேரில் நூற்றுக்கணக்கான வீதிகளிருக்கின்றன, ஆனால் நெய்லி என்ற நகரில் அப்படியொரு வீதி இல்லையே என்கிறார். நெய்லி அதிபர் சர்க்கோசி இருபது ஆண்டுகாலம் மேயராக இருந்த நகரம். அதாவது அல்பெர் கமுய் மகனுக்கு அதிபர் சர்க்கோசி கற்பூர வாசனையை அறியாதவர். இவ்வாதத்தை பொதுவாகப் பலரும் ஏற்பதில்லையென்றபோதும் அல்பெர் கமுய்யின் மகன், அதிபரிடம் எழுப்பும் அடுத்த இரண்டு கேள்விகளும் நியாயமானவை என்கின்றனர்:
முதலாவது :
அப்பா விரும்பி வாசித்த மூன்று நாவல்களுள் ‘கிளேவ்ஸ் இளவரசி’யும் ஒன்று என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
(‘கிளேவ்ஸ் இளவரசியை’யெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கவேண்டமென கல்விநிறுவனமொன்றில் அதிபர் சர்க்கோசி மாணவர்களுக்கு ஆற்றிய உரை சமீபத்தில் பெருஞ்சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது.)
இரண்டாவது:
அப்பா மதங்களைக் குறித்து வைத்திருந்த அபிப்ராயங்கள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
அல்பெர் கமுய் இடதுசாரி சிந்தனையாளர், கிறித்துவத்தை பலமுறை கண்டித்திருக்கிறார். எனவே அவரது உடலை பாந்த்தெயோன் தேவாலயத்துக்குள் கொண்டு போவது அவரது மகனை பொறுத்தவரை நியாயமில்லை.
———————————————————–