Paris-Delhi-Bombay
கடந்த 16-17 தேதிகளில் பாரீஸ¤க்கு சென்றிருந்தேன். நானிருக்கும் Strasbourg லிருந்து சுமார் 500 கி.மீட்டர் தூரத்தில் பாரீஸ் இருக்கிறது. தொடக்கத்தில் சிலகாலம் பாரீஸில் இருந்துவிட்டு இப்போதிருக்கிற நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனக்கு பாரீஸ் வாழ்க்கை பிடிப்பதில்லை. உலகில் எல்லா பெருநகரங்களுக்கான வாழ்க்கை பாரீஸ¤க்கும் பொருந்தும். சென்னையில் எப்படி வடசென்னை தென் சென்னை இருக்கிறதோ அப்படியான பிரிவு பாரீஸிலும் உண்டு. பாரீஸின் வடபகுதியில் பிற பகுதிகளைக் காட்டிலும் மூன்றாவது உலகநாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுதலாக உள்ளனர். பொதுவாக உடலுழைப்பை நம்பி இருக்கிறவர்கள் வாழும் பகுதி, ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகம்.
கடந்த ஆறுமாதகாலமாக பாரீஸிலுள்ள நவீன கலையகமான Centtre Pompidou வில் Paris-Delhi-Bombay என்கிற கண்காட்சி நடைபெற்று செப்டம்பர் பத்தொன்பதாம் தேதி முடிவுற்றது. பிரான்சு மற்றும் இந்திய நவீன ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக(?) மேலே நான் குறிப்பிட்ட தேதிகளில் “எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா” என்ற கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடபெற்றது. பார்வையாளர்களில் ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். முதல் நாள் இந்தியாவின் வேதகால ஞானத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில் மூன்று பிரெஞ்சு பல்கலைகழக பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு கிரகஸ்தா, சம்சாரா, நிர்வாணா என்று விவரித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே இவர்களுக்கு இந்தியா என்றாலே வேதகால இந்தியா அல்லது மக்களின் அவல நிலை. மேற்கண்ட கண்காட்சியில்கூட கலை படைப்புகள் என்ற பெயரில் வைத்திருந்தவைகள்: இந்தியாவின் சாதிப்பிரிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித்மக்கள், சேரிகள், தெருவில் அலையும் மாடுகள், மும்பை மூன்றாம் பாலினமக்கள். இந்திய எழுத்தாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நால்வரும் ( Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu.) ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் கூட பரவாயில்லை வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். இந்தியாவில் பிறந்ததோடு சரி. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தபட்ட மூவரில் ஒருவர் மேற்கு வங்காளம், ஒருவர் மகாராஷ்டிரா, மூன்றாமவர் குஜராத். நான் நினைத்ததுபோலவே மூவரும் மேட்டுக்குடியினர். கல்லூரிபடிப்பை முடித்து மேலைநாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்; வீட்டில்கூட அவர்களுடைய தாய்மொழியை பேசுவதில்லையாம். காரணம் சிறுவயதுமுதலே ஆங்கிலத்தில் படித்ததுதானாம், ஆக தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாதென்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். நான்காவது பெண் மலேசியாவைச் சேர்ந்தவள், தமிழ்ப் பெண். அவளும் தம் பங்கிற்குத் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லிகொண்டாள். நால்வரின் நூல்கள் இந்தியாவில் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறியதோடு அதற்கான அவசியமில்லை என்றார்கள்.
ஆங்கிலத்தில் எழுதினாலும் அமெரிக்காவிலிலோ இங்கிலாந்திலோ வசித்தாலும் இவர்கள் இந்திய எழுத்தாளர்களுமல்ல ஆங்கில எழுத்தாளர்களுமல்ல என்றொரு பார்வை மேற்கத்திய படைப்புலகில் இருப்பதை உணர்ந்திருப்பார்கள் எண்றே நம்புகிறேன். இந்த நால்வரின் எழுத்தையும் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கும் உந்துதலை ஏற்படுத்தித்தருவதாக அவற்றின் பெயர்களுமில்லை. பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் பெரும்பான்மையோர் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பதென் அவதானிப்பு.
—–
Echanges et Partages Franco-Indienne:
இது அண்மையில் நான் ஏற்படுத்தியுள்ள அமைப்பு. இதற்கு நான் தலைவராகவும், Xavier என்ர பிரெஞ்சு நண்பர் பொருளாளராகவும், Fraçoise என்ற பெண்மணி செயலாளராகவும் உள்ளனர். எங்கள் சங்கத்தின் நோக்கம் நவீன தமிழ் படைப்புகளை பிரெஞ்சுக்குக் கொண்டுவருவது, பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சத்திப்பிற்கு இந்தியாவிலும் பிரான்சிலும் ஏற்பாடு செவது ஆகியவை. தமிழிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. வங்காள மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் பிரெஞ்சு பெண்மணி தமது போராட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாவல்களை மொழிபெயர்த்துவைத்துக்கொண்டு பதிப்பாளர்களை தேடி ஓய்ந்துவிட்டாராம். வாழ்த்துக்கள் என்றார். மனதில் தைரியமிருக்கிறது, தமிழுக்குத் ஏதாவது செய்யவேண்டுமென்ற உந்துதலுமிருக்கிறது, முயன்று பார்ப்போம்.
————————————–
நந்திவர்மன் வலைத்தலம்.
நந்திவர்மன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இன்றைய பல அரசியல் கட்சி தலைவர்கள் பலருடனும் வடக்குத் தெற்கு என பேதமின்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார். திராவிடப் பேரவை செயலாளர். எனக்கு அவருடைய கொள்கைகளில் முரண்கள் இருப்பினும், அவரது உழைப்பை போற்றுகிறேன். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை அம்மண்ணிற்கும் மக்களுக்கும் ஓயாமல் குரல்கொடுத்து வருபவர். காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அரசியலில் இலாபம் பார்க்கும் மனிதர்களில் இவரைப்போன்ற மனிதர்கள் அபூர்வம் என்பது எனது சொந்த அனுபவம்.
அனத்திற்கும் மேலாக அண்மையில் புதுச்சேரி அரசின் தமிழ் மாமணி விருதை பெற்ற்வர் என்பதையும் இங்கே நினவுகூர்தல் வேண்டும்.
உலகத் தமிழர்களுக்காகவும் வக்காலத்து வாங்குகிற நண்பரின் வலைப்பூ கீழ்க்கண்ட முகவரிகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.
http://nandhivarman.wordpress.com/
http://annaist.livejournal.com/
http://dravidaperavai.blog.co.uk/tags/nandhivarman/