இந்து பத்திரிகை, ஊழலைக்குறித்து CNN-IBN & CNBC-TV18 நடத்திய கருத்துகணிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவிலே இன்றைய தேதியிலே பாரத தேசத்தின் ஊழல் பெருமக்களாக நான்கு பெயர்களை சுட்டியிருக்கிறது அவர்களில் மூன்று பெயர்கள் தமிழினத்திற்குச் சொந்தமானவை. தமிழினத்திற்கு தி.மு.க கொண்டு சேர்த்திருக்கிற மகத்தான பெருமை, இனி இந்தியக் துணைக்கண்டத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பேசப்படும். மக்களால் அதிகம் அறியப்பட்டவர் ஷீலா தீட்சத்தின் கல்மாடியா, கருணாநிதியின் ராஜாவா என்று சன் டி.வியில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்யலாம். குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பன்று அரங்கேற்றினால் மிகப்பொருத்தமாக இருக்கும். தி.மு.க பெயரில் ஊழலுக்கென்று ஒரு விருதை உருவாக்கி முதல் விருதை கலைஞருக்கே கூட அவரது அபிமானிகள் சூட்டி மகிழலாம், அல்லது கவிதை தாசர்களால் ஒரு கவி அரங்கம் ஏற்பாடு செய்யலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு தினமணி வெளியிட்டிருந்த தலையங்கம் கலைஞர் புலம்பல் குறித்து நன்றாகவே சாடியிருந்தது. பிற அரசியல் கட்சிகளையும் தினமணி குட்டத்தவறவில்லை. உண்மைதான் இந்தியாவில் ஊழலில்லாத ஓர் அரசியல் கட்சி, ஓர் அரசியல் வாதி இருக்க முடியுமா? செய்தித்தாள்களில் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் முகங்களைப் பாருங்கள். உத்தமத்தின் சாயலில் ஒரு துணுக்கைக்கூட நாம் அவற்றில் பார்ப்பதரிது.
நண்பர்கள் கேட்கலாம் பிரான்சில் இல்லையா அமெரிக்காவில் இல்லையா? ஏனில்லை இங்கேயும் ஜேப்படி உண்டு, வழிப்பறியுண்டு, கொள்ளையுண்டு, கொலையுண்டு அதாவது சமூகத்தின் அமைதிக்கு கேடினை விளைவிக்ககூடிய எல்லா செயல்பாடுகளுமுண்டு. விழுக்காடுகளில்தான் ஏற்ற தாழ்வுகள். சமூகத்தை அரிக்கும் கரையான்படைத் தாக்குதல்கள் இந்தியாவில் அதிகம். நம்மிடம் ஆகக் கூடுதல். நம்மைப்பற்றிய ஒரு சுய பார்வை தேவை. மும்பையிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் திருவனந்தபுரத்திலும் பல நேரங்களில் தமிழரெனில் முகம் சுளிக்கும் போக்கு இருக்கிறது. இந்தப் பார்த்தினீயத்திற்கான வேரெங்கே இருக்கிறது என்பதைக் கண்டாக வேண்டும். கல்தோன்றி மண்தோன்றா காலத்து என ஆரம்பித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டது போதும்.
——————————
அவசியமான பதிவு. அருமை.
மீண்டும் நன்றிகள்
நா.கிருஷ்ணா