1960ம் ஆண்டு நடந்த கார் விபத்தொன்றில் அல்பெர் கமுய் இறந்தாரென்பதை நம்மில் பலரும் அறிவோம். அக் கார்விபத்துக்குக் காரணம் முன்னாள் சோவியத் யூனியனின் உளவுபடை என்றால் நம்புவீர்களா? நம்பவேண்டும் என்கிறார் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கல்வியாளர் Giovanni Catelli. கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களை கரைத்துக்குடித்தவர் என்பதால், இத்தாலி நாட்டின் தினசரியான Il Corriere Della Sara பிரசரித்துள்ள இவருடைய செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Giovanni Catelliயின் தகவலுக்கு ஆதாரம் செக் நாட்டுக் கவிஞர் Jan Zabranna, இவர் தமது Lifetime நூலில் KGBக்கு நெருக்கமான ரஷ்ய நண்பரைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆக இந்த ரஷ்யரின் தகவற்படி அப்போதைய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Chepilov சொந்தத் தலையீட்டில், அல்பெர் கமுய் பயணம்செய்யவிருந்த வாகனத்தின் டயர் சேதப்படுத்தப்பட்டதெனவும், பின்னர் அதிவேகமாக செல்லுத்தப்பட்ட அக்கார் சதிகாரர்களின் திட்டபடி விபத்துக்குள்ளானதென்றும் கூறுகிறார்கள். ரஷ்ய அமைச்சருக்கும் அல்பெர் கமுய்க்கும் அப்படியென்ன பெரிய பகை? பம்பாய் தாதாக்களுக்கும் அண்மையில் கொலையுண்ட பத்திரிகையாளருக்கும் என்ன பகையோ அதுவேதான். 1957ம் ஆண்டு Franc-Tireurs என்ற பிரெஞ்சு தினசரியில் கமுய் 1956ம் ஆண்டு ஹங்கேரி எழுச்சியை சோவியத் படை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதற்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டி எழுதியிருந்ததாகவும், அப்பிரச்சினையே ரஷ்ய அமைச்சரின் கோபத்தைத் தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது.
அண்மையில் அல்பெர் கமுய்யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய பிரெஞ்சு தத்துவவாதி Michel Onfray இச்செய்தியை மறுக்கிறார். ரஷ்யர்கள் அல்பெர் கமுய் மீது கோபம் கொண்டிருந்ததென்னவோ உண்மைதான் என்றாலும் அவர்கள்தான் விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதை தான் நம்பமாட்டேன் என்கிறார். தமது மறுப்புக்கு அவர் சொல்லும் காரணம், அன்றைய தினம் கமுய் இரயிலில் பயணம் செய்யத் தீர்மானித்து பயணச்சீட்டை வாங்கிவைத்திருந்தாரென்றும், கடைசி நிமிடத்தில் இரயிற் பயணத்தை ரத்து செய்து தம்முடைய பதிப்பாளர் சகோதரர் மகனுடன் தற்செயலாக பயணம் செய்ய நேரிட்டது என்கிறார். தவிர பயணம் செய்த வாகனம் அல்பெர் கமுய் உடையது அல்லவென்றும், அவரது சொந்த வாகனத்தை அன்றைக்குத் தொடும் எண்ணம் அவருக்கு துளியுமில்லை என்கிறார்.
ஆக அல்பெர் கமுய்யின் அகால மரணத்தின் புதிர் நீடிக்கவே செய்கிறது. அவர் புனைவுகள் அனைத்துமே மரணத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பவை. அடுத்து ரஷ்யாவுடனான பகை திடீரென்று முளைத்ததல்ல. கிழக்கு பெர்லினில் -(1953) ஆரம்பித்த காம்ப்ரேட்டுகளுடனான பகை புதாபெஸ்டுவரை (1956) தொடர்ந்தது. இருவருமே – டெத்திஸமும் கம்யூனிஸமும் கமுய்க்கு எதிராக காய் நகர்த்தியிருக்கக்கூடும் என்பதுங்கூட ஓர் அபத்தமான உண்மைதான்.